Wednesday 29 October 2014

ரமணஜோதி 7

தாயே கோவில்

இரண்டு மாதங்களுக்குப் பின்.அவர் மாந்தோப்பிலும்,பலாத்தோப்பிலும் கோவிலை சுற்றியுள்ள மற்று சில சிறு சிறு தோப்புக்களில் வசித்து வந்தார்.அந்தக் காலத்தில் தான் அவரது தந்தையின் சகோதரர் நெல்லியப்ப ஐய்யர் அவரை காண நேர்ந்தது. அவர் எவ்வளவு வறுபுறுத்தியும் ரமணர் அவர் கூடச் ஊர் திரும்ப  இணங்கவில்லை.
நெல்லியப்ப ஐய்யர் ஊர் திரும்பி ரமணரின் தாயாரான அழகம்மையிடம் கூற அழகம்மை தனது மூத்த மகனான நாக ஸ்வாமியைக்  கூட்டிக்கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்.

தாயாரின் தீனமான வேண்டுதல்களுக்கும் அழுகைக்கும் ரமணரின் மவுனமே பதிலாக இருந்தது.
கடைசியில் அங்கு கூடியிருந்தவர்களில் யாரோ ஒருவர் பகவானிடம் நீங்கள் உங்கள் மௌனவிரதத்தை கலைக்க வேண்டாம்.ஒரு பேப்பரில் உங்கள் பதிலை எழுதிக் காட்டுங்களேன் என்று கூற பகவான் பேப்பரில் கீழ்க்கண்டவாறு எழுதிக்காண்பித்தார்
ஒருவருடைய பூர்வ கர்மங்களை அனுசரித்து,அந்த பரமாத்மா ஒவ்வொரு ஆன்மாவினுடைய விதியை நிர்ணயிக்கிறான்.யார் எவ்வளவு முயற்சித்தாலும் எது நடக்கக் கூடாது என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அது நடக்காது.நீங்கள் எவ்விதம் முயற்சிப்பினும் நடக்க வேண்டியது நடந்தே தீரும்.இது உறுதி.ஆகவே மௌனமாக நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பது தான் சிறந்த வழி.
அழகம்மை மிகுந்த வருத்தத்துடன் ஊர் திர்ம்பினார்கள்.
அதற்குப்பின் பகவான் சிறிதுகாலம் வெவ்வேறு குகைகளிலிருந்துவிட்டு கடைசியாக விரூபாக்ஷ குகையில் சென்று வாசம் செய்யலானார்.அங்கு அவர் பதினேழு வருடம் வசித்து வந்தார்.
ஆரம்ப காலங்களில் அவர் பேசவேயில்லை.நாளாக நாளாக திருவண்ணாமலையிலிருந்து ஜனங்கள் பகவானை தரிசிப்பதற்காக குகைக்கு வரத்தொடங்கினர்.மனிதர்கள் மட்டுமல்ல குரங்குகளும் அணில்களும் கூட ரமணரால் ஈர்க்கபட்டு அவரிடம் வந்தன.பகவான் கையிலிருந்து தனியங்கலை சாப்பிட்டுவிட்டுப் போகும்.அதே போல் சிறு குழந்தைகளும் மலையேறி பகவானிடம் வந்தார்கள்.

அழகம்மையும் இரண்டு மூன்று முறை பகவானிடம் வந்து போனார்கள்.அப்படி ஒரு முறை வந்த போது அவருக்கு டைஃபாடு காய்ச்சல் பிடித்துக் கொண்டது. சில காலங்களுக்கு முன் ஊர் திரும்ப முடியாது என்று கடுமையாக நடந்து கொண்ட பகவான் ராப்பகலாக கண் விழித்து தன் தாயாரை கவனித்துக் கொண்டார்.
இது பலருக்கும் ஆச்சரியத்தை விளைவிக்கக் கூடும்.யோசித்துப் பார்த்தால் இதில் ஆச்ச்ரியப் படுவதற்கு ஒன்றுமேயில்லை என்று தெரியவரும்.
எல்லா மகான்களுமே தாய்க்கு தன் உள்ளத்தில் ஒரு தனி இடம் ஒதுக்கியிருந்தார்கள்.
ஆதி சங்கரர் தன் தாயாரின் கடைசி காலத்தில் எங்கிருந்தோ ஓடி வரவில்லையா?
பகவான் ராமகிருஷ்ணர் தன் மனைவியே தாயராக நினைத்தார் என்பது மற்றொரு அதிசயம்.
ஆனால் யோசித்துப் பார்த்தால் அதிலும் அதிசயம் ஒன்றுமில்லை.
மனைவியின் இன்னொரு பெயர் ஜாயா.
ஜாயா என்றால் ஜனிப்பிப்பவள் என்று பொருள்.
மனைவி கணவனை உள் வாங்கி அவனையே அவனுக்கு ஆண் உருவத்திலோ பெண் உருவத்திலோ பெற்றுக் கொடுக்கிறாள்.ஆகவே அவள் அவனுக்கு ஜாயா ஆகிறாள்.
தமிழ் வாக்கு தாயில் சிறந்த கோயில் இல்லை

1916-ல் அழகம்மை பகவானுடனேயே தங்குவதற்கு திருவண்ணாமலைக்கு வந்து விட்டார்கள். சிறிது நாட்களுக்குப் பின் அவரின் இளைய சகோதரர் நாக சுந்தரமும் திருவண்ணாமலைக்கு வந்துவிட்டார்.அழகம்மயின் வரவிற்குப் பின் சிறிது நாட்களில் பகவான் விரூபாக்ஷ குகையிலிருந்து மலையில் சிறிது மேலே போய் ஸ்கந்தாஸ்ரமத்தை ஏற்படுத்தினார்..அழகம்மை பகவானிடமிருந்து ஆன்மீகத்தில் நிறைய பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். நாக சுந்தரம் சன்யாசம் வாங்கிக்கொண்டு நிரஞ்சனாந்த ஸ்வாமி என்ற பெயரில் அழைக்கப் பட்டார்.அழகம்மை பகவானிற்க்கும் மற்றவர்களுக்கும் உணவு சமைக்க ஆரம்பித்தார்கள்.

அன்று அழகம்மை பற்றவைத்த அடுப்பு அணையாமல் இன்னும் எரிந்துகொண்டு இருக்கிறது. வருவோருக்கெல்லாம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
1922-ல் அழகம்மை விதேக முக்தியடைந்தார்.
மலை மீது அவர் உடலை அடக்கம் செய்ய சட்டம் அனுமதிக்காததால் மலையடிவாரத்தில் அடக்கம் செய்தார்கள்.
அந்த இடம் இன்று ரமணாஸ்ரமத்திற்குள் இருக்கும் மாத்ருபூதேஸ்வரர்; ஆலயமாக திகழ்கிறது.
ரமணரின் தாய் பக்திக்கு அவர் மாத்ரு பூதேஸ்வரர் ஆலயம் கட்டும் போது எடுதுக்கொண்ட அக்கறையே சான்று.
ஆலயம் கட்டுகின்ற காலங்களில் பகவான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தனது ஆலோசனைகளை கூறி ஆசீர்வதிப்பார்.இரவு நேரங்களில் கட்டுமானங்களை சுற்றி சுற்றி வருவார்.அதனாலேயே அந்த இடம் மேலும் புனிதம் அடைந்திருக்க கூடும். இன்று ரமணாசிரமத்திற்கு செல்பவர்களுக்கு மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்திற்குள் கிடைக்கின்ற அலாதியான மன அமைதி பகவானின் ஆசீர்வாதத்தினால்  உண்டானதாகத் தான் இருக்கும்.
கருங்கல்லினால் ஸ்ரீ சக்ர மேரு செதுக்குவதில் ஸ்ரீ ரமணர் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.இது சுமார் ஒன்றரை அடி சதுரத்தில் அதற்கு தகுந்த உயரத்தில் செதுக்கப் பட்டது.இந்த ஸ்ரீ சக்ரம் மாத்ருபூதேஸ்வரர் கோயிலில் கர்ப்பக் கிருகத்தில்
பிரதிஷ்டை செய்ய்யப்பட்டுள்ளது.கும்பபிஷேகம் ஆனவுடன் நடந்த ஸ்ரீ சக்ர பூஜையின் போது பகவன் இரவு உணவிற்கு கூட போகாமல் உட்கார்ந்திருந்தார். பகவானின் கையாலேயே பிரதிஷ்டை செய்யப் பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட மிகவும் புனிதமான ஆலயம் மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
சிறிது நாட்களுக்குப் பின் பகவான் ரமணர் ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து கீழே மலையடிவாரத்திலிருக்கும் ஆசிரமத்தில் வந்து தங்கி விட்டார்.

No comments:

Post a Comment