Friday 30 January 2015

ரமணஜோதி 63

ரமணஜோதி 63

முன்னேற்றத்தில் ஏற்படும் தடைகள்

தைரிய மோடுமுன் மெய்யக நாடையான்

            றட்டழிந் தேனரு ளருணாசலா


தைரியமாக நான் உன்னைத்தேடினேன்,;உன்னைக் கண்டேன்; உண்மையைப் புரிந்துகொண்டேன்.எனது வாசனைகள் எல்லாம் அழிந்து தூயவனாக உன்னுடன் லயித்துவிட்டேன்,அருணாசலா’ என்கிறார் பகவான் ரமணர்.
அறிவில்லாமல் நான் உன்னைத் தேடி புறப்பட்டுவிட்டேன்.வழிதெரியாமல் நட்டாற்றில் விழுந்து மூழ்கிப் போக உள்ளேன்,அருணாசலா! உன்னருளைத் தந்து காப்பாற்று,அருணாசலா’ .என்று பகவான் கூறுகிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
ஏனென்றால் நான் யார் என்ற விசார மார்க்கம் அவ்வளவு எளிதானதல்ல.அதில் வெற்றி அடைய வேண்டுமென்றால் பரமனின் அருள் வேண்டும்.
நாம் எவ்வளவு குறியாக நான் யார் என்ற விசார மார்க்கத்தில் சஞ்சரித்தாலும் இந்த பிரபஞ்ச வாசனைகள் நம்மை அவ்வளவு எளிதில் விட்டு விடாது. அவைகள் போடுகின்ற ஆரவாரத்தில் நம் சித்தம் கலங்கி குறிக்கோளை மறக்க ஏது உண்டு.

சப்த ஜாலம் மஹாரண்யம்

சித்த ப்ரமண காரணம்”

ஆதி சங்கரர் கூறியது .
நாம் நீண்ட நாட்களாக கேட்டு ஆடிக்கொண்டிருந்த மனக்குறளியை ஒதுக்கிவைத்து விட்டு சுதந்திரமாக உள்ளதை உள்ளபடி பார்ப்போமானால்
‘நான் யார்’ என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.’நான் யார்’ என்பது கேள்வியே அல்ல; அது தத்துவங்களின் முடிவு என்கிறார் பகவான்.ஆகவே தான் ‘நான் யார்’ க்குப் பின் கேள்விக்குறியே பகவான் போடவில்லை.
 நமது மனம் எண்ணங்கள் எனும் குப்பை கூளங்களால் மூடப்பட்டுள்ளது.அவைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் நம் சுயரூபம் தெரியும்.ஆத்ம சாக்ஷாத்காரம் உண்டாகும்.ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல.ஆகவே தான் பகவான் அருணாசலனின் அருளை வேண்டுகிறார்.
இதையே தான் திருஅருட்பாவில் அருணகிரி நாதரும் கூறுகிறார்
அருணகிரினாதர் பாடுகிறார்:

            தரைதலத் தெனை நீ எழுமையும் பிரியாத்

            தம்பிரான் அல்லையோ மனத்தைக்

            கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த

            கடவுள் நீ அல்லையோ எனைத்தான்

            இரைத்திவ் ணளித்தோர் சிற்சபை விளங்கும்

            எந்தை நீ அல்லையோ நின்பால்

            உரைத்தலென் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன்

            நீஅறி யாததொன் றுண்டோ


“ நீ ஒருகணமும் என்னைப் பிரியாமல் என் மனத்தை இல்லாமல் பண்ணி என் உயிருடன் கல்ந்தே இருக்கும் பரமனல்லவா நீ? உன்னிடம் சொல்வது என் கடைமை.ஆகவே உரைத்தேன்”
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே தான் என்ற அத்வைத சித்தாந்த்தை எப்படி தெள்ளத் தெளிவாக அவர் எடுத்துரைக்கிறார் பார்த்தீர்களா?
மேலும் அவர் கூறுகிறார்:

எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த

            இளைப்பெல்லாம் இங்குநான் ஆற்றிக்

            கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என்

                  கூடவே அடுத்ததென் அந்தோ

            வள்ளலே என் வாழ் முதற் பொருளே

                  மன்னவா நின்னலால் அறியேன்

            உள்ளல்வே றிலைஎன் உடல் பொருள்ஆவி

                  உன்னதே என்னதன் றெந்தாய்


‘ நான் பட்ட துன்பங்களையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு நீயே அடைக்கலம் ---மாயையினால் நான் பட்ட அவதிகளையெல்லாம் சொல்லி மன ஆறுதல் அடையலாம் என்று தான் உன்னை நாடி வந்துள்ளேன்.என் உடல் பொருள் ஆவி எல்லாம் நீயல்லவோ”?”  எங்கிறார் அருணகிரி நாதர். நீ வேறு நான் வேறல்ல என்ற உத்தம தத்துவத்தை தெள்ளத் தெளிவாக கூறுகிறார்.
நாம் பழைய நினைவுகளை வெடிந்து வருங்காலத்தைக் குறீத்து கவலை கொள்ளாமல் நிகழ் காலத்தில் வாழ்ந்தால் மனம் கட்டுக்குள் வரும்.
இதை கௌதம புத்தர் அழகாக கூறுவார்:”  நீ ஒரே ஆற்றில் இருமுறை குளிக்க முடியாது”.
ஆகவே அடுத்து வரும் வெள்ளம் என்னை கொண்டு போய்விடுமோ நதி நீர் எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்றெல்லாம் கவலைப் பட ஏது இல்லை.
பகவான் கூறுவார்,” நேரம்,காலம் என்பது கற்பனையே.---நிகழ் காலத்தைப் பொறுத்தேசென்ற காலம் ,வருங்காலம் என்ற இரண்டும் தோன்றும். இரண்டும் அவை நிகழும்போது அவையும் நிகழ்காலமாகவே தோன்றும்.----நம்மிடமுள்ள குறை என்னவென்றால் கடந்த காலத்தில் நாம் எவ்வாறு இருந்தோம்,எதிர் காலத்தில் எப்படி இருப்போம் என்ற் தெரிந்துகொள்ள முற்படுகிறோம்.----நிகழ் காலத்தின் உண்மை இயற்கையை-நிரந்தர,சாஸ்வத,இருப்பு நிலையை தெரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கென்ன?”
இதே கருத்தை கபீர்தாசும் சொல்வார்.நம் மனதில் பரமனை நினைத்துவிட்டால் வேறு எதற்கும் இடமில்லை. நம் மனம் ஒரு குறுகிய ஒற்றயடிப் பாதை.அதில் ஒருவர் தான் சஞ்சரிக்கமுடியும். “நான்” இருந்தால் பரமன் இல்லை;பரமன் வந்து விட்டால் நான் இல்லாமலாகி விடுவேன்:”

            ஜப் மை தா,தப்குரு நாஹி

            அப்குரு ஹை ஹம் நாஹி

            ப்ரேம் கலி அதி ஸாங்கடி

            தா மே தோ ந ஸமாயே


 நாம் ஆன்மீக சாதனையில் இடுபடும்போது பல் தடைகள் வரும்.இந்த தடைகள் மூன்று விதமான காரணங்களால் ஏற்படுகிறது;.

1.ஆதி தைவிகம்

நமக்கு புரியாத காரணங்கள். பிராரப்த கர்மங்கள் காரணமாக ஏற்படும் தடைகள்.

2.ஆதி பௌதிகம்

அன்னியரால் பிற ஜீவராசிகளினால் ஏற்படக்கூடியது.

3.ஆதியாத்மிகம்

தானே உண்டுபண்ணிக்கொள்வது.
மூன்றாவது மட்டும் தான் நம் கட்டுக்குள் அடங்கியது .மற்றவை இரண்டும் நம்மை மீறி நடப்பவை.
பதஞ்சலி யோகசூத்திரமும் சாங்கிய காரிகையும் இந்த மூன்று விதமான காரணங்களாலுண்டாகக் கூடிய துன்பங்களை மீண்டும் பல உட்பிரிவுகளாக பிரிக்கின்றன.
பதஞ்சலி முனிவர் கூறுவார்: நான் யார் என்று தெரிந்துகொள்வதற்கான நீண்ட பயணத்தில் இரண்டு அடிப்படை தத்துவங்களை புரிந்து அனுஷ்டிக்க வேண்டும்.அவை முறையே யமம் மற்றும் நியமம் என்றும் சொல்லப்படுகிறது.
யமம் என்பது ஸத்யம்,அஹிம்சை,ஆஸ்தேய( பிறன் பொருளுக்கு ஆசைப்படாமை), பிரம்மசரியம் ,அபரிக்ரஹா ( அன்பளிப்புக்களை நிரசித்தல்)
நியமம் என்பது ஷௌசம் (சுத்தம்-உள் சுத்தம்,புற சுத்தம்),சந்தோஷம் (போதும் என்ற மனப்பாங்கு) தபஸ் ( எளிமை ),ஸ்வாத்யாயம் ( புனித கிரந்தங்கள் படிப்பது ),ஈஸ்வர சரணாகதி.
யம நியமங்களை எவன் ஒருவன் வழுவாமல் கடை பிடிக்கிறானோ அவன் எளிதில் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவான்.
யம நியமங்களை கடை பிடிப்பதில் ஏற்படும் சங்கடங்களை பதஞ்சலி கீழ்க்கண்டவாறு தரம் பிரித்துள்ளார்:
1         நோய்:
2         சத்தானம்
3         ஸம்ஸயம்
4         ப்ரமாதம்
5         ஆலஸ்யம்
6         விஷய வாசனைகள்
7         மனமயக்கம்
8         அலப்த பூமித்வம்
9         அனவஸ்தித்வம்
ஸாங்கிய காரிகை நூறு விதமான தடைகளை கூறுகிறது.இவைகளை மூன்ற் கூறுகளாக தரம் பிரிக்கின்றது.
1 விபரியம் ---தவறான ஆறிவு
2அசக்தி-----------பலவீனம்
3.துஷ்டி----------திருப்தி
விபரியம் மேலும் ஐந்து வகை =அறியாமை,அஹங்காரம்,கவர்ச்சி,வெறுப்பு, லோக விஷயங்களில் தீவிர  ஆஸக்தி
அசக்தி  பதினெட்டு விதமான பலவீனங்கள்-முக்கியமாக ஆன்மீக பலவீனங்கள்
துஷ்டி முழுமையான ஆன்மீக அறிவு பெறுவத்ற்கு முன்னமையே திருப்தி படல்
இந்த தடைகளையெல்லாம் மீறி பரமாத்மாவை அடைவதற்கு இடைவிடாத இசுவர தியானம் செய்ய வேண்டும்.அது முடியாவிட்டால் சத்சங்கங்களில் ஈடுபட வேண்டும்

சத்சங்கத்வே நிஸ்சங்கத்வம்

நிஸ்சங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே  நிஷ்ஃஸல தத்துவம்

நிஷ்சல தய்வே ஜீவன் முக்தி

ஆதிசங்கரர்.

எதுவுமே கைகொடுக்க விட்டால் நிபந்தனையற்ற சரணாகதி ஒன்று தான் வழி.எந்த விதமான சந்தேக சம்சயங்களுக்கும் இடம் கொடாத சரணாகதி.
இதைத்தான் பகவாபன் ரமணர் நாம் அறிய முயன்றுகொண்டிருக்கும் சுலோகத்தில் கூறுகிறார்.’நான் என் சக்தியின் மீது நம்பிக்கை வைத்து உன்னை தேடினேன்.எல்லாம் இழந்து இன்று திக்கு திசை தெரியாமல் நிற்கிறேன்.நீ எனக்கு வழி காட்டருணாசலா ‘ என்கிறார்

ரமணஜோதி 62

ரமணஜோதி 62

மாயா---தோற்றமும் ஏற்றமும்


தேடா துற்றநற் றிருவருணிதியகத்
தியக்கந் தீர்த்தரு ளருணாசலா
பகவான் தனக்கேற்பட்ட அனுபவத்தை நினைவு கூறுவதுடன்  மனதிலேற்படும் கலக்கத்தை நீ தான் தீர்த்தருளவேண்டும், அருணாசலா என்று வேண்டுகிறார் இந்த சுலோகத்தில்.
பகவானுக்கு ஞானம், எந்த விதமான சாதனைகளும் செய்யாமல் ஒரு நாள் திடீரென்று ஏற்பட்டது. திருவண்ணாமலை எங்கிருக்கிறது என்றுகூட தெரியாமல் இருந்த வெங்கட ராமனை இழுத்து வந்து ரமண மஹரிஷியாக்கியது அந்த அருணாசலனின் கிருபை தான்.
‘உனது அருளெனும் நிதியை அளித்து உள்ளத்தில் எற்படக்கூடிய அவித்யை எனும் மாயையை நீக்கிவிடு அருணாசலா,’ என்கிறார் பகவான்.
இந்த மாயா என்றால் என்ன? சற்று விவரமாக பார்ப்போம்.’
மாயா என்ற வார்த்தை ரிக்வேதத்தில் எழுபது முறையும் அதர்வ வேதத்தில் ஏறக்குறைய இருபத்தியேழு முறையும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் மாயா என்ற பதம் ஆதி சங்கரன் பயன்படுத்திய அர்த்தத்தில் வேதங்களில் பயன்படுத்தபடவில்லை அதாவது மாயா தான் அவித்யையின் மூல காரணம் என்று வேதங்களில் சொல்லப் படவில்லை.வேதங்களில் மாயா என்ற பதம் ப்ரஞ்சா, ஞான விசேஷம் என்ற பொருளிலும் சக்தி,அசாதரணமான திறன் என்ற பொருளிலும் தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது
வருணனின் அசாமான்யமான சக்தியை மாயா என்று ஆரம்பகால வேத இலக்கியங்கள் கூறுகின்றன.வருணன் மட்டுமல்ல,இந்திரன்,அக்னி,ஏனைய தேவதைகளும் மாயா சக்தி பெற்றிருந்ததாக வேத புத்தகங்கள் கூறுகின்றன.
புராணங்களை எடுத்துக் கொண்டால் வைஷ்ணவ சித்தாந்தப் படி விஷ்ணுவின் ஒன்பது சக்திகளில் ஒன்று மாயா.
சங்ககால தமிழ் இலக்கியங்களில் கிருஷ்ண பகவானை மாயோன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துர்காவை மாயோள் என்றும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .விஷ்ணுவின் சர்வசக்தியும் அவள் பெற்றிருப்பதாலும்,எல்லையில்லாத படைப்பாற்றல் பெற்றிருப்பதாலும் துர்காவை விஷ்ணுமாயா என்று சங்ககால புலவர்கள் வருணித்தார்கள்.
அதர்வ வேதத்தில் மாயாவை அசுர சக்தியோடு இணைத்து கூறியுள்ளார்கள்.யஜுர்வேதத்தில் மாயாவை பூமித்தாயோடு இணைத்து சொல்லியுள்ளார்கள்.
உபனிஷத காலங்களில் தான் மாயா என்கின்ற  சொல் விரிவான பொருளில். பேசப்பட ஆரம்பித்தது.
மாயா மனோவிருத்தியுடனும் பௌதிக பொருள்களின் சிருஷ்டியுடனும் சம்பந்தப் படுத்தபட்டது இந்தக் காலத்தில்.மாயா சக்தி ஆசார அனுஷ்டானங்களுடன் இணைந்தது.
ஸ்வேதாஷ்வதர உபனிஷத்தில் மாயாவை பிரகிருதி இயற்கையன்னை) என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் பிரகிருதி மஹேஷ்வரனின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
.ஸாங்கியகாரிகா தான் முதன் முதலாக பிரகிருதியை பெண்ணாக சித்திரித்தது.
ப்ரம்மவைவர்த்த புராணத்தில் பிரகிருதியை ராதா என்று அழைத்தார்கள்.பிரம்மத்தின் சைதன்யத்தின் மூலகாரணம் இந்த பிரகிருதிதான் என்று சொல்லப்பட்டது.பிரம்மனின் சத்துவ குணங்களின் உருவகமாக பிரகிருதி சித்திரிக்கப் பட்டது.
இந்த காலங்கள் எல்லாம் கடந்து வேதாந்த காலகட்டம் வந்த பொழுது மாயா என்ற வார்த்தை பிரம்ம தத்துவத்தை விளக்குவதற்காக ஒரு தனி உருவமும் இடமும் கைக்கொண்டது.
இந்த பிரபஞ்ச சிருஷ்டியின் இரகசியத்தை விளங்க வைக்கவும் மானவ சமுதாயத்திற்கு சம்சார சுழற்சியிலிருந்து விடுதலை நேடிக் கொடுப்பதற்கு ஒரு மார்க்கமாகவும் மாயா உருபெற்றது.
மனித இனத்தின் இகலோக வாழ்வும் மனோவிருத்தியும் ஒரு மாபெரும் பிரபஞ்ச சத்தியத்தின் ஒரு சிறு பகுதிதான் என்பதை அறிந்துகொண்ட ஞானிகள் அந்த பிரபஞ்ச சத்தியத்தை விளக்குவதற்கு மாயா என்ற தத்துவக் கண்ணியை அடையாளம் காட்டினார்கள்.
நம்மை இந்த இஹலோகவாழ்வுடன் பிணைப்பது இந்த உடலே நான் என்ற எண்ணமும் அதனால் எழுகின்ற அஹங்காரமும் தான். அந்த அஹங்காரத்திலிருத்து உண்டாகின்ற விஷய வாசனைகளும் விஷய வாசனைகள் காரணமாக மனிதர்கள் செய்து கூட்டுகின்ற கர்மங்களும் தனி மனித வாழ்வையும் இந்த சமஷ்டி வாழ்வையும் பாதித்து துன்பம் கொடுப்பதையும் கண்ட ஞானிகள் வேத உபனிஷத்துக்களையும் சுருதி,ஸ்மிருதிகளையும் மானவ சமுதாயத்திற்கு பயன்படும்படி வியாக்கியானித்தார்கள். அவர்களது வியாக்கியானம் மனிதனது துன்பத்தைத் துடைத்து சாந்தியையும் நிரந்தரமான ஆனந்தத்தையும் பெறுவதற்கு பெரிதும் உதவியாக பரிணமித்தது.
இந்த சந்தர்ப்பத்தில்தான் மாயா என்ற தத்துவம் முழு உருப் பெற்றது.
நித்ய நிரந்தரமான  பிரம்மத்தை மறைத்து நமக்கு அனித்தியமான விஷய வாசனையை உண்டுபண்ணுகின்ற ஒரு வகையான சக்தியாக மாயா உருவகபடுத்தப் பட்டாள்.
மாயா என்றால் ஒரு விதமான பிரமை என்று வேதாந்திகள் விளக்கினார்கள்.அந்த மாயா மோஹினியின் வலையில் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அதுவே சத்யம் என்று தோன்றுகிறது.
நாம் கனவு காணும்பொழுது கனவில் நடப்பவையெல்லாம் நிஜம் என்றே தோன்றும்-கனவிலிருந்து விழித்து எழும் வரை.
முதன் முதலாக இந்த மாயா தத்துவத்தை விளக்கியது ஆதி சங்கர பகவத் பாதாள் தான்.
இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.பாரதத்தின் தார்சனிக (தொலை நோக்குப்பார்வை கொண்ட) கலக்சாரத்தில் மட்டும் தான் கடவுளை மனிதனுக்குள்ளேயே பார்க்கின்ற ஒரு அடிப்படை தத்துவத்தைக் காண முடிகிறது. எல்லா ‘செமட்டிக் ( Semetic) மேற்கத்திய மதங்களிலும் கடவுளை நமக்கு அன்னியமான ஒன்றாய்த்தான் நம்புகிறார்கள்.அவர்களது நம்பிக்கை பரலோகத்திற்கு போகும்பொழுது சுவர்க்க ராஜ்ஜியம் கிடைக்கவேண்டும்;அதற்காக நாம் இங்கு உண்மையாக நல்லவனாக நடந்துகொள்ளணும் என்ற ஒரு பயமுறுத்தலை அடிப்படையாக கொண்டிருக்கும் பொழுது, நாம் நம்முள் பிரம்மனை தரிசிக்கிறோம்,மற்றவர்கள் உள்ளிலும்,ஏன், மற்ற எல்லா ஜீவ ராசிகளின் உள்ளிலும் பிரமனை தரிசிக்கிறோம்.ஆகவே நமது இகலோக விவகாரங்கள் நமக்கு மட்டும் நல்லது பயப்பதாக இருந்தால் போதாது, சகல ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்க வேண்டும்,ஒரு சாந்தியும் சமாதானமும் நிறைந்த சமுதாயத்தை உருவக்குவதற்கு ஏதுவாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது  பாரத தார்சனிக கலாச்சாரம்.
இந்த தத்துவ சம்ஹிதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பது இந்த மாயா தத்துவம் தான்.
சத்என்பது ஒன்று தான். பிரம்மம் மட்டும் தான் சத் என்றால் வேறு ஒன்றும்ஸத்ஆக இருக்க முடியாது. .ஆனால் அந்த நிஜம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டால் உலகம் நிச்சலாமாகிவிடும்.அப்படி ஆகவிடாமல் தடுப்பது மாயா சக்தி. மாயா பிரம்மனை சுற்றி ஒரு இருள் வலயத்தை சிருஷ்டித்து நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகிறது.இன்னொரு புறம் அதே மாயா நாம் காணும் இந்த மாயா லோகத்தை சிருஷ்டித்து நமக்கு தாற்காலிகமாக சுகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.அந்த சுகத்தின்-சந்தோஷத்தின் மறுபக்கம் துக்கமும் துன்பமும் தான் என்பதை மறக்கடிக்கிறது. இந்த மாயா வலயத்திலிருந்து தப்பிப்பது தான் முக்தி அல்லது மோக்ஷம் எனப்படுகிறது
மாயா என்பது அவ்யக்தம் –அதிருஸ்யம்.ஆனால் மாயையினால் உண்டாகின்ற இந்த உலகமும் உலகனுபவங்களும் வ்யக்தமும் திருஸ்யமுமாயுள்ளது.
பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா பல இடங்களில் பிரகிருதி அல்லது மாயா,அதன் குணங்கள் குறித்து பரமர்சித்துள்ளார்.கடந்த சில மடல்களில் இவை பற்றி கண்டோம். மீண்டும்  ஒரு முறை சில  சுலோகங்களைப் பார்ப்போம்
பிரகிருதியும் புருஷனும் சங்கமிக்கும்பொழுது தான் சகல சராசரங்களும் இந்த பிரபஞ்சத்தில் ஜனிக்கின்றன.
யாவத்ஸஞ்சாயதே கிஞ்சித்ஸத்வம் ஸ்தாவரஜங்கமம் !
க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞ் ஸ்ம்யோகாத் தட்வித்தி பரதர்ஷப !!
                     ப்.கீ அத்.13 சுலோ 26
பிரகிருதி முக்குணபரிமாணமுடையது.பிரகிருதியின் முக்குணங்களான சத்,ராஜஸ்,,தமஸ் என்ற முக்குணங்களின் தாக்கத்தின் காரணமாக ஜீவ ராசிகள் பல கிரியைகளை செய்கின்றன. ஆனால் ஜீவாத்மாவோ நித்ய சைதன்யமான தான் தான் இந்த கருமங்களையெல்லாம் செய்கிறோம் என்று எண்ணுகிறது. இந்த மயக்கத்தினால் துன்பமடைகிறது. இது தான் மாயா.
மேற்கூறிய கருத்தை 29 வது சுலோகத்தில் காணலாம்.
          ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணானி சர்வச: !
          ய:பஸ்யதி ததாத்மானமகர்தாரம் ஸ் பஸ்யதி !!


பதிமூன்றாம் அத்தியாயம் 30 ஆவது சுலோகதில் பகவான் கூறுகிறார்:
    
யதா பூத்ப்ருதக்பாவமேகஸ்தமனுபஸ்யதி !
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா !!
மாயையின் காரணமாக தனித் தனியாக இந்த உலகில் காணப்படும் பொருள்கள் ஒரே பொருளிலிருப்பதையும்,அந்த ஒரே பொருளிலிருந்து அவை பலதாவதை நாம் புரிந்து கொண்டுவிட்டால் நாம் இந்த மாயா வலயத்திலிருந்து விடுபட்டுவிடுவோம். ஆத்மா செயலற்றதென்றும் எல்லாமே பிரகிருதியினால் செய்யப்படுகின்றன என்பதை புரிந்துகொண்டால் அவன் பிரம்மமாகிறான்.
மீண்டும் பதினெட்டாம் அத்தியாயம் 61-வது சுலோகத்தில் கூறுகிறார்:
          ஈஸ்வர: ஸர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுனா திஷ்டதி !
          ப்ராமயன் ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாய்யா !!
பரமன் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறான்.ஆனால் எல்லா ஜீவராசிகளையும் சம்சார சாகரம் எனும் கடலில் இந்த பூத உடல் எனும் யந்திரத்திலேற்றி தத்தளிக்கவிடுகிறான்.ஆடுவது இந்த பௌதிக உடலும் மாயா பிரபஞ்சமும் தான் ;ஆத்மா அல்ல என்பதை புரிந்துகொண்டு விட்டால் துன்பமேது இன்பமேது?
          நாஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத: !
          மூடோ அயம் நாபிஜானாதி லோகோ மாமஜமவ்யயம் !!
யோக மாயையினால் ஆவரணம் செய்ய்யப்பட்டுள்ள ஜீவன்கள் பரமனை அறிவதில்லை.ஆதியும் அந்தமுமில்லாத-இறப்பும் பிற்ப்பும் இல்லாத பரமன் மாயையினால் பாதிக்கப்படுவதில்லை.
இந்த மாயாவலயத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் அந்த அருணசலனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை. ஆகவேதான் பகவான் அருணாசலனிடம் பிரார்த்திக்கிறார்:,’ உன் அருளைத் தந்து எனது மனமயக்கத்தை தீர்த்தருளருணாசலா
 ‘தேடா துற்றநற் றிருவருணிதியகத்
தியக்கந் தீர்த்தரு ளருணாசலா