Tuesday 20 January 2015

ரமண ஜோதி 55

ரமண ஜோதி 55

கர்மயோகம்


லோகே அஸ்மிந்த்விவிதா நிஷ்டா புராப்ரோக்தா மயானக !
ஞான யோகேன ஸாங்க்யானாம் கர்ம யோகேன யோகீனாம் !!
                                ப.கீ அத்.3 சுலோ 3
விவேகம், வைராக்யம், துறவு .முதலிய வழிகளில் ஞானம் பெற்றவர்கள் ஆத்ம சொரூபத்தை   நேரடியாக கிரகித்துக்கொள்கிறார்கள்.. இதை ஞானயோக மார்க்கம் என்று புரிந்துகொள்ளலாம்
கர்மனுஷ்டானங்களை முறையாக செய்து அறிவு தெளிவடைய,, ஆத்மசொருபம் விள்ங்குவது கர்மயோகம் எனப்படுகிறது.
பகவான் ரமணரும் ஆத்ம சொரூபத்தை விளக்கிகொள்வதற்கான மார்க்கமாகத்தான் நான் யார் விசார மார்க்கத்தை நமக்கு காட்டினார்
கீதயின் நாலாம் சுலோகத்தில் பகவான் மேலும் தெளிவு பட சொல்லுகிறார்:
புருஷன்-அதாவது ஜீவாத்மாக்கள் தங்கள் கருமங்களை அனுஷ்டிக்காமல் சன்னியாசம் வாங்கமுடியாது. பூ காயாகி கனியாகி பக்குவப்பட்டால்த் தான் பழமாகி மற்றவர்களுக்கு பலனளிக்கிறது.
பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாறையே எடுத்துக்கொள்ளுங்கள்:அவருக்கு மதுரையிலிருக்கும் பொழுதே ஞானம் உண்டாயிற்று.இருந்தாலும் அவர் பதினேழு வருடம் விரூபாக்ஷ குகையிலும் ஐந்து வருடம் ஸ்கந்தாசிரமத்திலும் அதிகம் பேசாமலையே விசார சாதனையிலிருந்தார். அதற்கு பின் கூட அவர் யாருக்கும் குரு என்று கூறினதில்லை. தனது அனுபவத்திலிருந்த கிடைத்த ஞானத்தை மற்ற்வர்களின் முக்திக்காக  தனது மௌன பாஷையிலேயே பகிர்ந்துகொண்டார்.
கர்மணாமனாரம்பா ந்நைஷ் கர்ம்யம் புருஷோஅஸ்னுதே !
ந ச ஸன்யஸனாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி !!
கீதை மேற்கொண்டு நாலாம் அத்தியாயம் ஏழாம் சுலோகத்தில் அறிவுறுத்துகிறது::
யஸ்த்விந்திரியாணி மனசா நியம்யாரபதே அர்ஜுனா !
கர்மேந்திரியை: கர்மயோகமஸ்த ஸ விசிஷ்யதே !1
ஆனால் இந்திரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று கர்மேந்திரியங்களை கொண்டு கர்மயோகம் செய்வதே மேல்.
மனதை அடக்க முடியாமல் இந்திரியங்களை மட்டும் அடக்கி வாழ்வபன் பொய்யான ஒழுக்கத்திற்கு உதாரணமாகிறான்
 .பகவான் ரமணரிடம் ஒரு பக்தர் ,எப்படி கிரஹஸ்தாஸ்ரமத்திலிருப்பவர் தன் கர்மங்களை விட்டு விட்டு ஞான மார்க்கத்திற்கு அல்லது சன்யாசத்திற்கு மாறமுடியும்?” என்று கேட்டார்.
பகவான் மிகவும் தெளிவாக பதிலளித்துள்ளார்:
“ ஜீவாத்மாக்கள் இந்த உலகத்திற்கு வரும்பொழுதே அவர்களது பூத உடல் என்ன என்ன அனுபவிக்க வேண்டும் என்று தீருமானிக்கப் பட்டு விடுகிறது. ஆகவே ஜீவத்மாவிற்கு எந்த கர்மத்தை ஏற்றுக்கொள்வது எதை நிராகரிப்பது என்பதற்கான சுதந்திரம் கிடையாது.செய்ய வேண்டியவைகளை செய்தே ஆக வேண்டும்;அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே ஆக வேண்டும். அவனுக்குள்ள சுதந்திரமெல்லாம் தன் மனதை உள்முகமாக திருப்பி மனதளவில் அந்த கர்மங்களை எற்றுக்கொள்ளவோ,நிராகரிக்கவோ செய்யலாம்.
அதாவது கர்ம பலன்களின் மீதுள்ள பற்றுதலை தக்க வைத்துக் கொள்ளலாம்,அல்லது பகிஷ்கரித்து விடலாம். ஏன் அப்படி என்றால் அது இயற்கையின் நியதி அல்லது தெய்வ நிச்சயம் என்று தான் சொல்ல வேண்டும்”.
          கன்மம் பயன்றரல் கர்த்தன தாண்யாற்
     கன்மங் கடவுளோ வுந்தீபற
     கன்மஞ் சடமதா லுந்தீபற
     வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
     வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
          வீடுதரலிலை யுந்தீபற
மேற்கூறியது  பகவானின் உபதேசவுந்தியார்” எனும் நூலின் முதல் சுலோகம்.
இதையே தான் பகவத் கீதயில் கிருஷ்ணரும் கூறுகீறார்.
     ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் !
          கார்யதே ஹ்யவச: கர்ம சர்வ: ப்ரக்ருதிஜைர்குணை !!
                                     ப.கீ அத் 3 சுலோ 5
“யாரும் இந்த உலகில் செயலாற்றாமலிருப்பதில்லை.ஏனென்றால் பிரகிருதி யிலிருந்து ஒவ்வொரு ஜீவாத்மாக்களும் பலதரப்பட்ட குணங்களை பெறுகிறார்கள்.ஒவ்வொரு உயிரினமும் தன் வயமின்றி கர்மம் செய்விக்கப்படுகின்றார்கள்.” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.
உண்பது ,உறங்குவது,எல்லாமே கர்மங்கள் தான்.இயற்கையில் வொகர்மத்தை விடும் சுதந்திரம் கிடையாது.
ஒரு முறை கொண்டையா என்ற ஆந்திர பக்தர் தனது மனைவியுடன் பகவானை தரிசிக்க ரமணாசிரமத்திற்கு வந்திருந்தார். இரண்டு மாதம் ஆசிரமத்திலேயே தங்கியிருந்தார். அவருக்கு பிள்ளைகள் வீடு மற்றும் சொத்துபத்துக்கள் எல்லாம் ஊரிலிருந்தன. அவர் ஒரு நாள் பகவானிடம் வந்து ,கீழ்க்கண்டவாறு கூறினார்:
“பகவானே,இந்த சம்சாரத் தொல்லைகள் என்னால் தாங்கமுடியவில்லை.வேண்டாமென்றாலும் என் மனைவி என்னுடன் வந்து விடுகிறாள்.வந்த பிறகு ஊருக்கு திரும்பலாம் என்ற் நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறாள்.சரி நீ போய் குழந்தகளுடன் இரு என்றாலும் போகமாட்டேனென்கிறாள். கருணைகூர்ந்து பகவான் அவளை வீட்டிற்கு சொல்லி அனுப்பிவிடுங்கள்.நான் இங்கேயே இருந்து விடுகிறேன்.”
பகவான் பாதி வேடிக்கையாகவும் பாதி கௌரவமாகவும் சொன்னார்,” சம்சாரத்தை விட்டு எங்கேய்யா போவது? ஆகாயத்தில் பறக்க முடியுமா? பூமி மேல்த் தானே நாம் இருக்க வேண்டும்? நாம் எங்கேயிருந்தாலும் அங்கேயே சம்சாரம்.எதுவும் வேண்டாமென்று தான் நானும் வந்தேன்; இப்பொழுது பாருங்கள்,எவ்வளவு பெரிய சம்சாரம்.”
பகவான் கூறியதின் உண்மை பொருள் சம்சர பந்தம் என்பது இருக்கும் இடத்தை பொறுத்ததல்ல.மனதை பொறுத்தது. மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு கொண்டையாவால் இங்கே நிம்மதியாக இருக்க முடியுமா என்று கேட்காமல் கேட்கிறார்,பகவான்.அப்படி இருக்க முடிகிறவர் என்றால் மனைவியின் நச்சரிப்பை பற்றி கவலை பட்டிருக்க மாட்டார். வேறு ஒரு அர்த்தத்தில் எங்கு போனாலும் சம்சார பந்தங்கள் தொடரத்தான் செய்யும் .அது கர்ம பலன் என்று பொருள் பகவானின் ஒவ்வொரு சொல்லிலும் வேதாந்தம் பொதிந்திருக்கும்.
மீண்டும் அடுத்த மடலில் பந்தத்தை தொடருவோம்

 

No comments:

Post a Comment