Tuesday 20 January 2015

ரமண ஜோதி 56

ரமண ஜோதி 56

கீதயில் யக்ஞ சங்கல்பம்

நாம் சென்ற மடலில் கர்மத்திலிருந்து தப்பிக்க முடியாது;அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்று உரைக்க கண்டோம்.
இந்த மடலில் கர்மங்களை செய்ய வேண்டியிருந்தாலும் அதன் தாக்கத்திலிருந்து விடுபடுவது எப்படியென்று பார்ப்போம்.
முதலில் பகவத் கீதை என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
மூன்றாம் அத்தியாயம் ஒன்பதாம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:
          யக்ஞார்த்தாத் கர்மணோ அன்யத்ர லோகோயம் கர்மபந்தன:: !
     ததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: சமாசர: !!
“யக்ஞ கர்மத்தை தவிர மற்ற கர்மங்களெல்லாம் நம்மை பந்தனத்திற்குள்ளாக்கிறது. ஆகவே கௌந்தேயா,  நீ ய்க்ஞ கர்மங்களை மட்டும் செய், அதுவும் பற்றற்ற மனத்துடன் செய் ” என்கிறார் பரமன்
யக்ஞ கர்மம் என்றால் என்ன?
கீதைக்கு ஒரு பின்புலம் உள்ளது.அந்த பின்புலத்தைப் புரிந்து கொண்டால்த் தான் யக்ஞ்ம் என்றால் என்ன, கீதையில் யக்ஞ சங்கல்பம் என்பது என்ன என்று புரியும்.
நமக்கெல்லாம் தெரியும் பகவத் கீதை ஒரு போர்க்களத்தின் நடுவே ஒரு தேரோட்டியால் ஒர் அரசகுமாரனுக்கு கூறப்பட்ட அறிவுரை என்று.
அந்த அறிவுரை கூறவேண்டிய அவசியம் அந்த சூழ்நிலை எப்படி உருவானது என்று சுருக்கமாக தெரிந்து கொண்டால்தான் யக்ஞ சங்கல்பத்தை சரியாக புரிந்து கொள்ள முடியும்.
குருக்ஷேதிர போருக்கு காரணம் கௌரவர்களின் பேராசை துராசை என்று நாமெல்லாம் படித்து இருக்கிறோம்;நமக்கு சொல்லியுள்ளார்கள். ஆனால் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் பதினொன்றும் ஏழும் சேர்ந்து பதினெட்டு அக்ஷௌணிகளாக ஒரு மாபெரும் போர்க்களம் உருவானதற்கு உடனடிக் காரணம் திருதாஷ்டிர புத்திரர்களின் தகாத ஆசையாக இருக்கலாம்.ஆனால் மூலகாரணம்/ மூல விதை  பல பல ஆண்டுகளுக்கு முன்னேயே விதைக்கப் பட்டுவிட்டது.
நமது பாரதக் கலாச்சாரம் சுருதியிலும்(sruthi) ஸ்மிரிதியிலும்(Smrithi) எந்த ஒரு சித்தாந்த்தை வலியுறுத்தி வந்ததோ அந்த சித்தாந்த்தை ஒரு அரசன் மீறியதும், அப்படி மீறிய தகப்பனுக்கு துணை போன மகனின் செயலும் தான் மஹாபாரதப் போருக்கு மூல காரணம்.
எந்த ஒரு ‘பெண்ணாசையை’ ஒதுக்க வேண்டும் என்று நமது வேதங்களும் உபனிஷத்துக்களும் சுருதிகளும் ஸ்மிரிதிகளும் கூறி வந்ததோ அந்த ஆசைக்கு சந்தனு மஹாராஜா தனது வயதான காலத்தில் ஆளாகிறார். ஒரு மீனவ பெண்ணைக்கண்டு மோஹிக்கிறார். அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராகிறார். தகப்பனின் இந்த தகாத ஆசையை தட்டிக் கேட்காமல் அதற்கு துணை போகிறான் பிற்காலத்தில் பீஷ்மர் என்று போற்றப்படும் தேவவிரதன் –அரியணைக்கு உரிய அரசகுமாரன்.
மண்ணசையாலும் பொருளசையாலும் உந்தப்பட்ட பெண்ணின் தகப்பன் யாருமே அங்கீகரிக்க முடியாத நிபந்தனைகளை விதிக்கிறான்.
1.என் பெண்ணின் வயிற்றில் பிறக்கும் குழந்தை தான் அரசனாக வேண்டும்-அவனுக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ.( இன்றைய அரசியல் நிலைமையும் ஏற்க்குறைய இதையொட்டித்தான் இருக்கிறது)
2.உன் தற்போதுள்ள அரியணைக்கு உரிமையாளானன் தேவ விரதன் மணம் முடிக்கக் கூடாது( ஏனென்றால் அவனுக்கு பிறக்கும் குழந்தைகள் கூட பதவிக்கு வரக்கூடாது)
இந்த இரு நிபந்தனைகளையும் நிறைவேற வேண்டுமென்றால் அன்றைய அரசகுமாரன் தேவவிரதன் ஒத்துக் கொள்ள வேண்டும்.
இங்கு தான் மஹாபரத போரின் விதை ஊன்றப் படுகிறது. பெண்ணாசை, பொன்னாசை, தகப்பனிடம் மகனுக்கிருந்த கண்மூடித்தனமன பாசம் இவை தான் முதல் காரணம்.
இந்த விதைக்கு மேலும் உரமிட்ட மற்ற சம்பவங்களையும் சுருக்கமாக பார்ப்போம். 
சந்தனு மஹா ராஜாவிற்கு சத்தியவதியில் பிறந்த இரு குமாரர்களில் ஒருவன் சித்த்ராங்கதன் சிறுவயதில் இறந்து விடுகிறான். விசித்திர வீரியன் நிரந்தர நோயாளியாகி விடுகிறான்.அவனுக்கு ஒரு அரசனும் பெண் கொடுக்க தயாராகவில்லை.
அந்த நாட்களில்த் தான் காசி மன்னர் தன் பெண்களுக்கு சுயம்வரம் அறிவிக்கிறார்.
அந்த சுயம்வரத்தில் தன் கர பலத்தாலும் தோள்வலிமையாலும் போர் திறைமையாலும் தேவவிரதன் என்ற பீஷ்மர் காசியின் அரச குமாரிகளை கைப்பற்றி வருகிறார்; தனக்காக அல்ல; விசித்திர வீரியனுக்காக.இது மஹபாரத யுத்தத்திற்கான மற்றொரு ஏதுவாகிறது.
அன்றைய பாரம்பரியப்படி சுயம்வரத்தில் பங்கு பெறும் அரச குமாரர்களில் யாரை தங்களுக்கு பிடித்து இருக்கிறதோ அவர்களை அரச குமாரிகள் மணாளனாக் வரித்துக் கொள்வார்கள்.அங்கு பதிலிகளுக்கு இடமில்லை.பீஷ்மர் விசித்திர வீரியனுக்கு பதிலியாக வந்து அரசகுமாரிகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை சிறை எடுத்து வருகிறார். இது பாரம்பரியத்திற்கும் பெண்மைக்கும் இழைத்த மிகப் பெரிய அவமதிப்பு. அதற்கு பீஷ்மரே முழுப் பொறுப்பு. இந்த சம்பவத்தின் தாக்கம் குருக்ஷேத்திரப் போரில் சிகண்டி உருவில் வெளிப்படுகிறது.
கடைசியில் விசித்திரவீரியன் சந்ததிகள் இல்லாமல் இறக்கிறான். அப்பொழுது பீஷ்மர் என்ன செய்திருக்க வேண்டும்?.அரசு பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.செய்தாரா? இல்லை. விசித்திர வீரியனின் மனைவியருக்கு வேதவியாசர் மூலம் சந்ததிகளைப் பெற்று அவர்களை அரியணை ஏற்றுவதற்கு உறுதுணையாக நின்றார். அப்படி பிறந்த திருத ராஷ்டிரரும் பாண்டுவும் குரு வம்ச சந்ததிகளே இல்லை.ஆனால் அவர்களுக்கு அரியணையை விட்டுக்கொடுக்கிறார் பீஷ்மர்.. அதன் மூலம் பிற்காலத்தில் ஒரு மாபெரும் அழிவிற்கு அஸ்திவாரம் இடுகிறார்.
திருத ராஷ்டிரர் பிறவியிலேயே கண்ணில்லாதவரானதால் பாண்டுவிற்கு அரியணை ஏறும் வாய்ப்பு கிடைக்கிறது. பாண்டுவின் வீரத்தால் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம் படுத்து உயர்த்தபடுகிறது. பாண்டு இளவயதில் இறக்கிறார். திருதராஷ்டிர குமாரர்களுக்கும் பாண்டுகுமாரர்களுக்கும் அரியணை ஏறும் வயது வராததால் கண் தெரியாமல் இருந்தும் திருதராஷ்டிரர் அரசனாகிறார்.
பிறகு ராஜ்ஜியத்தை கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டிய நேரம் வந்த பொழுது காடும் மேடுமாக இருந்த இந்திரப்ரஸ்த பகுதியை பாண்டு குமாரர்களுக்கு திருதராஷ்டிரர் பிரித்துக் கொடுக்கிறார். இந்த ஓர வஞ்சனையை கண்டும் கண்டிக்காமல் இருக்கிறார் பீஷ்மர். குருக்ஷேத்திர யுத்ததிற்கான செடி முளைவிட்டு தளிர்க்க ஆரம்பிக்கிறது.அந்த விஷ விருக்ஷம் மேலும் உரம் பெறுகிறது.
பாண்டவர்கள் இந்திரப்ரஸ்தத்தை தங்களது கடும் உழைப்பால் தேவ புரியக்குகிறார்கள். நல்லது.
தர்மராஜா என்று அழைக்கப் பட்ட யுதிஷ்டரருக்கு தன் மஹிமையை உலகுக்கு பறைசாற்ற வேண்டும் என்று அவா எழுகிறது.ஆஹம் தலை தூக்குகிறது. அந்த அஹத்தின் மமதை காரணமாக குடும்பதின் மூத்தவரான தங்கள் தந்தையின் மூத்த சகோதரர் இருக்கும்பொழுதெ தான் சக்கிரவர்யத்தி பதவியில் அமர்ந்து விடவேண்டும் என்ற பதவி மோஹத்தில் யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகத்திற்கு ஆவன செய்கிறார். கௌரவ குமாரர்களை அழைத்து வந்து தங்களது பெருமைகளையும் படாடோபத்தையும் பறைசாற்றுகீறார். கௌரவ மனங்களில் பொறாமைத்தீ வளருகிறது. கூடவே யுத்தமெனும் விஷ விருக்ஷமும் வளருகிறது. இது யுத்தத்திற்கான காரணங்களுக்கு யுதிஷ்டரரின் பங்களிப்பு. பட்டம்,பதவி,அஹங்காரம்,மமதை,பொறமை முதலிய உரங்கள் யுத்தச் செடியை வலுவாக்குகிறது.
இந்திரப்ரஸ்தத்திற்கு விருந்தாளியாக வந்திருக்கும் தன் மைத்துனர்கள் மாளிகையின் பளிங்கு கற்களை தண்ணீர் என்று எண்ணி தடுமாறுவதைக் கண்டு.இளக்காரமாக சிரிக்கும் திரௌபதி அந்த விஷ விருக்ஷத்தை உரமிட்டு வளர்க்கிறார்.விருந்தோம்பல் மரியாதை காவு கொடுக்கப் படுகிறது,பெண்மையின் அடக்கம் ஓடி ஒளிந்து கொள்கிறது
சகுனியின் துர்போதனை படி யுதிஷ்டரை விருந்திற்கு அழைத்து சூது விளையாட வேண்டுகிறான் துரியோதனன்.. தர்மபுத்திரரான யுதிஷ்டரர் என்ன செய்திருக்க வேண்டும்? “தம்பி சூது விளையாடுவது தவறு;அதிலும் சகோதரர்கள் விளையாடுவது மிகவும் தவறு.” என்று அறிவுரை கூறி சூது விளையாட்டை தவிர்த்திருக்க வேண்டும். செய்தாரா? இல்லை.சரி,விளையாடியது தான் விளையாடினார்.தன் சொந்த சொத்துக்களை இழந்ததும் விளையாட்டை நிறுத்தியிருக்க வேண்டும் செய்தாரா? இல்லை. அரசாங்க சொத்தை தன் சொத்தாக நினைத்து நாட்டையே அடமானம் வைத்து இழந்தார்.( இன்றைய அரசியல் வாதிகள் தருமரிடமிருந்து தான் இதையெல்லாம் கற்றுக் கொண்டார்களோ என்னவோ!) அத்தோடு நிறுத்தினார,இல்லை.சகோதரர்களை அடமானம் வைத்தார்; இழந்தார். மனிதர்களென்ன ஜடப் பொருள்களா ? மனைவியை அடமானம் வைத்தார்; இழந்தார். பெண்களை அடிமையாக கருதிய மிகப் பெரிய தவறை தருமர் எனும் யுதிஷ்டிரர் செய்து குருக்ஷேத்திர யுத்தத்திற்கு உரம் சேர்த்தார். 
சுயோதனன் என்று அக்காலம் மட்டும் அழைக்கப் பட்ட கௌரவன் துரியோதனாகிறான்; திரௌபதியை அரசவையில் அவமதிப்புக்கு உள்ளாக்கிறான். பெரியவர்களான திருதராஷ்டிரரும் பீஷ்மரும் மௌனம் சாதிக்கிறார்கள்.( இன்றை சில் அரசியல் வாதிகள் போல) யுத்த விருக்ஷம் வளருகிறது.
வனவாசத்திற்கு பின் திரும்பி வந்த பாண்டவர்களுக்கு ராஜ்ஜியத்தை திரும்ப கொடுக்க மறுக்கிறான்,துரியோதனன்.
யுத்த பேரி முழங்குகிறது .பாரதமே இரண்டு சேரிகளாக பிரிந்து யுத்த பூமியான குருக்ஷேதிரத்திற்கு வருகிறார்கள். பதினெட்டு அக்ஷௌணி சேனைகளுடன்.
அப்படிப்பட்ட யுத்த பூமியில் திடீரென ஒருவன் மாற்றி சிந்திக்க தலைப் படுகிறான்.அவன் சாதாரண படை வீரனல்ல .வில்லுக்கு விஜயன் என்று பெயரெடுத்த பாண்டவன்.அவன் கேட்கிறான்,” ஏன் இந்த யுத்தம்? யாருக்காக இந்த யுத்தம்? இதனால் என்ன பயன்?”
அவன் கோழையல்ல. இதற்கு முன்னும் கௌரவர்களோடும் தன் குருவோடும், பாட்டனாரோடும் யுத்தம் செய்தவன் அர்ஜுனன்.
அந்த பார்த்தன் கேட்கும் ஏறக்குறைய முப்பத்தியெட்டு கேள்விகளுக்கு அவனுக்கு சாரதியாக ஆயுதமின்றி வந்துள்ள பார்த்த ஸாரதி அளித்த பதில்கள் தான் பகவத் கீதை
பகவத் கீதை சித்தாந்த ரீதியாக பலமான அஸ்திவாரத்தில் எழுப்பப்டுகிறது. அந்த சித்தாந்தங்களையும் புரிந்து கொண்டால் தான் நாம் யக்ஞம் என்பதின் சரியான அர்த்ததைப் புரிந்து கொள்ள முடியும்.

மேற்கொண்டு அடுத்த மடலில்.

No comments:

Post a Comment