Friday, 19 December 2014

ரமணஜோதி 23


நம்முள் கௌரவ-பாண்டவர்கள்


குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்
குருவுரு வாயொளி ரருணாசலா     

முன் சுலோகத்தில் பகவான் செய்த வேண்டுதலை திரும்பவும் வேறு விதத்தில் இந்த சுலோகத்திலும் கூறுகிறார்;
கருணை கூர்ந்து நீ என்னுடைய குற்றங்களையெல்லாம் முற்றிலும் அறுத்தெறி யருணாசலா என்கிறார் பகவான்.

நம் மனதுள்ளேயே குருக்ஷேத்திரமும் தர்மக்ஷேத்திரமும் இருக்கிறது என்பதை  இதற்கு முன் பார்த்தோம்..
குருக்ஷேத்திரத்திலுள்ள கௌரவ பாண்டவர்களை அழித்தால் தான் நமக்கு முக்தி கிடைக்கும்.
கௌரவ பாண்டவர்கள் இரு கூட்டருமே ஆசைகளின் பிரதி பிம்பங்களாக இருக்கிறார்கள். அவர்கள் நம் மனத்திலுள்ள நூற்றுக் கணக்கான ஆசைகளையே பிரதிபலிக்கிறார்கள்.
இந்த குற்றங்குறைகளை கிருஷ்ண பரமாத்மா கீதையில் பதின்மூன்றாம் அத்தியாயத்தில் அர்ஜுனனக்கு விவரமாக விளக்கியுள்ளார்.

மஹாபூதான்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச
இந்திரியாணி தசைகம் ச பஞ்ச சேந்திரிய கோசரா

இச்சா: த்வேஷ சுகம் துக்கம் ஸங்காதஷ்சேதனா த்ருதி:
ஏகத்க்ஷேத்ரம் ஸமாசேன ஸவிகாரமுதாஹ்ருதம்
பஞ்ச மஹா பூதங்கள் (பூமி,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்) அஹஙாரம்,புத்தி, அவ்யக்த பரா பிரகிருதி,( சித்தம்)
 பத்து புலன்கள் (கண்,காது, மூக்கு,தோல், நாக்கு, வாய், கை, கால், பிறப்புறுப்பு, மலத்துவாரம் என்கின்றவை பத்து புலன்களாகிறது.)

மனம் மற்றும் ஐந்து புலன் விஷயங்கள்  இவையெல்லாம் நமது குற்றங்களுக்கு மூல காரணமாக அமைகிறது.


இந்த புலன்களுக்கு விஷயமான உருவம்,சுவை,மணம்,ஓசை,மற்றும் தொடுவுணர்ச்சி (ரூப கந்த, ரசம், சப்தம், ஸ்பர்சம்)  நம்மை இந்த இஹ லோகத்துடன் பந்தித்து வைக்கிறது.
இவைகளுடன் விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், இவை அனைத்தும் கூடியுள்ள இந்த ஸ்தூல பிண்டம், மற்றும் விகார உணர்வுகள் சேர்ந்து நம்முள் நல்ல-தீய விதைகளை விதைக்கின்றன .அவை நல்ல,-புலன் நுகர்ச்சி ஆசைகளை உளவாக்குகின்றன. அவை நம்மை இந்த இஹ லோகத்துடன் கட்டிப் போட்டு விடுகின்றன.அந்த பந்தங்கள் இருக்கின்ற வரை நம்மால் பரமாத்மாவுடன் லயிக்க முடிவதில்லை.

இந்த பந்தங்களிலிருந்து விடுபடுவதற்கு ஆதி சங்கரர் தத்துவ போதத்தில் சொல்லியிருக்கின்ற மார்க்கம் தான் சாதனா சதுஷ்டயம்.
ஸாதனா சதுஷ்டய ஸம்பன்னாதிகாரம்
மோக்ஷதானபூதம் தத்வவிவேக ப்ரகாரம் வக்ஷ்யம:

ஸாதனா சதுஷ்டயம் என்பது நான்காக பிரிக்கப்பட்டுள்ளது.
1.நித்ய அனித்ய வஸ்து விவேகம்
பூரணத்துவம் அடைந்த விவேகம் என்பது நிரந்தரமானது எது நாசமடையக்கூடியது எது என்று பாகுபடுத்திப் பார்ப்பதற்கான அறிவு. இந்த விவேகம் என்பது எல்லாருக்கும் பிறக்கும்போதே கிடைப்பது தான்.ஆனால் இதை ஆக்கபூர்வமாக இயக்குவது கடினமானது அதற்கு விடா முயற்சி வேண்டும்.
நாசமில்லாத வஸ்து/ நித்ய வஸ்து என்பது எது?

நித்ய வஸ்த்வேகம் ப்ரஹ்ம தத் வ்யதிரிக்தம்
ஸர்வம் அனித்யம் அயமேவ நித்யானி
நித்ய வஸ்து என்பது பிரமம் மட்டுமே. மற்றவையெல்லாம் த்ய வஸ்து விவேக:
 அனித்யமானவையே. ஆகவே யாரொருவர் நித்ய வஸ்துவை கண்டறிய வேண்டுமோ அவர்கள் முதலில் தன்னைத்தானே அறிந்துகொள்ளவேண்டும். அந்த நான் மட்டும் தான் அழிவில்லாதது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் அந்த நான் பிரமமே என்றறிய வேண்டும்

2. இஹமுத்ரா பல போக விராக
விராகம் அல்லது வைராக்யம் என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்கு ஓடுவதல்ல. அது பொறுப்பின்மை,கோழைத்தனம்.
வஸ்து விவேகம் ஏற்பட்டாலே வைரக்யம் தானாகவே வந்து விடும்..எதற்கும் இச்சைப் படாத நிலை.எதிலும் ஒரு விதமான பற்று கொள்ளாத நிலை தான் விராகம் அல்லது வைராக்யம்.
போகத்திற்கு ஆசைப் படாமல் இருப்பது விராகம்.சொர்க்க பிரவேசத்திற்கு கூட ஆசைப் படக்கூடாது. இது இரண்டாவது தேவை.

3.ஸமாதி ஷட்க சம்பத்தி
மூன்றாவதாக விராகம் வேண்டுமென்றால் ஆறு விதமான குணங்களை வளர்த்திக் கொள்ளவேண்டும்

ஸாமோ  தாம உபரமஸ்திதிக்ஷ ஷ்ரத்தாச இதி:
ஸாமம் ,தாமம், உபரமம். /உபரதி, திதிக்ஷா, ஸ்ரத்தா,ஸமாதானம் இவை தான் அந்த ஆறு குணங்கள்.
ஸாமம்
ஸாமம் என்பது மனோ நிக்ரஹம். ஐம்புலன்கள் தொடர்பான ஆசைகளை விட்டொழித்தல். இந்த மாதிரியான வாசனைகள் அழிந்து விட்டால் மனம் அமைதியடைந்து விடும்.
தாமம்
சக்ஷுராதி பாஹ்யேந்திரிய நிக்ரஹவிடா முயர்சியினால்த் தான் ஸாமம் அடைய முடியும். தாமம் இதற்கு முன்னோடியானது.
மனம் கட்டுப்பட்டிற்குள் இருந்தால் கூட நமது ஞானேந்திரியங்காள் ( கண்,காது,மூக்கு,நாக்கு உடல்) நம் சொல் படி கேட்காமல் தறிகெட்டு அலையக் கூடும்.அதன் காரணமாக நமது கர்மேந்திரியங்கள்( கைகள்,கால்கள், வாய்,பிற்ப்புறுபுக்கள்,விசர்ஜன உருப்புக்கள்) ஆட ஆரம்பித்துவிடும்.அதன் விளைவாக மனம் சஞ்சலப் படக்கூடும். அதனால்த் தான் ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் கட்டுக்குள் கொண்டுவரவேண்டியது மனோ நிக்ரஹத்திற்கு முன்னோடியானது.
உபரமம்/உபரதி
மனதை இந்திரியங்களின் கட்டுப் பாட்டிலிருந்து விடுவித்து விட்டோமானால் அதை சும்மா இருக்க விடலாகாது. மனத்தால் சும்மா இருக்க முடியாது.அதற்கு வேலை கொடுக்கவில்லை என்றால் அது மறுபடியும் பழைய வாசனகளின் படி இயங்க ஆரம்பித்து விடும். ஆகவே மனதை சன்மார்க்கத்திற்கு திருப்பிவிடவேண்டும் இந்த முயற்சியே உபரமம் எனப்படுகிறது.
திதிக்ஷா
(சீதோஷ்ண ஸுகதுக்காதி ஸஹிஷ்ணுத்துவம்)
 எல்லாவற்றையும் சமமாக பாவிக்கும் மனோ பக்குவத்தைத் தான் திதீக்ஷா என்று சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடுகிறார்கள்.
Every action has an equal and opposite reaction  என்று ஆங்கிலத்தில்க் கூறுவார்கள். குளிர்-சூடு,சுகம்-துக்கம்,விருப்பு வெறுப்பு,லாபம்-நஷ்டம், வெற்றி தோல்வி, புகழ்ச்சி-இகழ்ச்சி, என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இவையெல்லாவற்றையும் சமமாக பாவிக்கின்ற மனோ பக்குவம் பெறவேண்டும்

ஷ்ரத்தா (குரு வேதாந்த வாக்க்யாதிஷு விஸ்வாஷ ஷ்ரத்தா)

நம்பிக்கை வேதாந்த வாக்க்யங்களின் மீது, குரு வசனங்களின் மீது அசையாத  நம்பிக்கை வேண்டும்.
சமாதானம்(சிதைகாக்ரம்)

மனதை ஒருமுனைப் படுத்துதல்-இஹ லோக விஷயங்களிலிருந்து மனதை திருப்பி பிரமனில் லயிப்பித்தல்.இதைத்தான் ஆதி சங்கரர் ஸம்யக் ஆஸ்தாபனம் என்று கூறினார்.

4. முமுக்ஸ்துவம்(மோக்ஷமே பூயாத் இதி இச்சா)
என்ன நிகழிலும் இந்த இக லோக பந்தங்களிலிருந்து அனித்யமான வஸ்துக்களிலிருந்து விலகி  பரமனில் மனதை ஒருமுக படுத்த வேண்டும்.
இவைதான் சாதனா சதுஷ்டயம்.
இதில் வெற்றிபெறுவதற்கு குருவின் அருள் கட்டாயம் வேண்டும்.பகவான் ரமணர் அந்த அருணசலரையே குருவாக நினைத்து அவர் காட்டிய வழியிலேயே திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அந்த குருவாகப்பட்ட அருணசலரையே  நமக்கு ஒளிகாட்டுமாறு வேண்டிக்கொள்ளுகிறார்.

பட்டினத்தாரும் இதையே தான் பாடியிருக்கிறார்:

மூலமறியேன்,முடிவுமறியேன்
ஞாலத்துள் பட்ட துயர் நாட் நடக்குத்டா
தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
மனுவாதி சத்தி வலையி லகபட்டனடா
மாமாயை யெனும் வனத்தில் அலைகிறண்டா
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா
ஐந்து புலனு மடங்கேனே யென்குதே
சிந்தை தவிக்கிறதுன் தேறேனே யென்குதே
கன்னிவன நாதா! கன்னிவன நாதா!
அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே
கைச் மின்னுமான் கழலேனே



ரமணஜோதி 22


கீழ் எது? மேல் எது?





கீழ்மேலெங்குங் கிளரொளி மணியென்
கீழ்மையைப் பாழ்செய் யருணாசலா

அருணாசலா, உன் அருள் கீழானவர்,மேலானவர் எல்லாருக்கும் கிடைகட்டும். வைரக் கற்கள் எப்படி எல்லாப் பக்கமும் ஒளி வீசுமோ அப்படி நீயும் பிரகாசிப்பாயாக. உன் ஒளி பட்டு என் கீழான எண்ணங்கள் அழியட்டும். என்று பகவான் ரமணர் வேண்டுகிறார்.

மனிதர்கள் பிறக்கும்பொதே நம் உடல் தான் நான் என்ற அவித்யை யுடன் பிறக்கிறோம். இந்த அறிவீனம் அழிந்து ,நம் முன் பரவிக்கிடக்கும் புவனமெல்லாம் நம் மனதால் கற்பனை செய்யப்பட்டதே அன்றி வேறொன்றுமில்லை; உண்மையில் ஜீவான்மாவும் அந்த எல்லா வல்ல பரமான்மாவும் ஒன்று தான் என்றறிந்து அவனுடன் லயிப்போமாக, என்கிறார் பகவான்.

பகவான் ரமணர் ஒருமுறை உண்மையில் கீழும் கிடையாது மேலும் கிடையாது, என்று ரிபு கீதையை மேற்கோள் காட்டி சொல்லியுள்ளார்.
ரிபு கீதை எனப்படுவது, ரிபு மகிரிஷி நிதாகருக்கு செய்த தத்துவோபதேசமே.
மகிரிஷிக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள்.அவர்களில் மகிரிஷிக்கு மிகவும் பிரியமானவர் நிதாகர். நிதாகர் சாஸ்திரத்தில் மிகவும் அறிவு வாய்ந்தவராகவும் திறமயானவராகவும் இருந்தார். மேலும் பவித்திரமான உள்ளமுடையவராகவும் குருவிடம் மிகவும் பக்தி உடையவராகவும் இருந்தார். ஆகவே மகிரிஷி, நிதாகர் மீது தனி அக்கறை கொண்டு அத்துவைத  தத்துவத்தை அவருக்கு போதித்தார். ஆனால் நிதாகரால் சம்பிரதாயமான கர்மகாண்டத்திலிருந்து விடுபட முடியவில்லை. ஞான மார்க்கத்தில் ஸ்திரமான பிடிப்பும் அவருக்கு ஏற்படவில்லை.

நிதாகரை சோதிப்பதற்காக மகிரிஷி பலமுறை மாறுவேடத்தில் போய்  சீடர் எவ்வளவு தூரம் கர்மகாண்டத்திலிருந்து விடு பட்டுள்ளார்  என்று சோதிப்பாராம்.
ஒரு முறை கிராம வாசி போல் வேடமணிந்து நிதாகரை காண குரு சென்றார்.
திருவிழாக் கோலத்தில் பவனி வரும் அரசனைக் காண நிதாகர் வீதியில் ஜனக் கூட்டத்தோடு நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் சென்று மகிரிஷி பேச்சை துவக்கினார்.
ஐயா, இங்கு என்ன கூட்டம்? ஏன் இந்த கும்மாளம்? என்று குரு வினவினார்.
ராஜா பவனி வந்து கொண்டிருக்கிறார். என்று நிதாகர் பதில் கூறினார்.
ரிபு, எங்கே ராஜன்?
நிதாகர்,  அதோ யானை மேல் பவனி வருகிறாரே,அவர் தான் ராஜா
ரிபு,  ஓஹோ! ராஜா யானை மேல் உட்கர்ந்திருக்கிறார் என்றா சொல்கிறாய்? நான் இரண்டு பொருள்களை பார்க்கிறேன். இதில் யார் ராஜா? யார் யானை?
நிதாகர்,  உனக்கு கண்தெரிகிறதல்லவா? கீழேயிருப்பது யானை, மேலேயிருப்பது ராஜா.
ரிபு, ஐயா,நான் பட்டிக்காட்டு ஆசாமி, எனக்கு விவரம் கிடையாது. கொஞ்சம் விவரமாக் சொல்லுங்களேன். மேல், கீழ் என்கிறீர்கள்.,ராஜா,யானை என்கிறீர்கள்...மேலே ராஜா உட்கார்ந்திருக்கிறார் என்கிறீர்கள். .இதில் மேலெது? கீழெது?

நிதாகர்: (கோபமாக)சரியாப் போச்சு.மேலே ராஜாவையும் கிழே யானையும் பார்த்துக் கொண்டு தானிருக்கிறாய். அப்படியிருந்த்ம் கீழ் எது, மேல் எது என்றால் தெரியவில்லை என்கிறாயே? உனக்குப் பார்ப்பது தெரியவில்லையென்றால் செய்கையால்த் தான் புரிய வைக்க முடியும். நீ குனி. இப்போ புரியும் பார்.
குருவும் குனிந்தார்.
நிதாகர் ரிஷியின் முதுகில் ஏறி உடகார்ந்து கொண்டு இதோ,இப்போ புரிகிறதா?மேலே நான் இருப்பது போல் அங்கே ராஜா,கீழே நீ இருப்பது போல் யானை. இப்போதாவது புரிந்ததா?

ரிபு: ஊஹூம்,புரியவில்லையே. நீ ராஜாவைப் போல் மேலே இருக்கிறாய் என்றும்,நான் யானை போல் கீழே இருக்கிறேன் என்றும் சொல்கிறாய் .ராஜா,யானை,மேல்,கீழ் புரிந்து விட்டது.ஆனால் நான்,நீ என்று சொல்கிறாயே,அது புரியவில்லை.எதை நான், எதை நீ என்று குறிக்கிறாய்?.

இந்தக் கேள்வியை கேட்டதுமே, நிதாகருக்கு, தன் தனது என்கின்ற கர்மகாண்டத்தில் எப்படி சிக்கி கிடக்கிறோம் என்று உணர்த்தவே குரு இப்படி பட்டிக்காட்டான் உருவத்தில் வந்துள்ளார் என்று புரிந்து குருவின் காலில் விழுந்து வணங்கி பௌதிக தோற்றங்கள் வெறும் பொய்யானவை,உள்ளபொருள் ஆத்மாவே என்று புரிந்து கொண்டேன் என்று கூறினார்.

வைரக்கல்லை உதாரணம் காட்டியிருப்பது போல் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் பாடுகிறார்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே , அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப் பிணியே, பணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே,
பணியேன் ,ஒருவரை, நின் பத்ம  பாதம் பணிந்தபின்.

பகவான் என்பதிலுள்ள  என்றால் பிரகாசம்,ஒளி, என்று வட மொழியில் அர்த்தமாகும். அதனால்த் தான்  சூரியனுக்கு பானு, பாஸ்கரன் என்றெல்லாம் பெயர்.
அப்படிப்பட்ட உன் ஒளி பட்டு என் கீழ்மை எல்லாம் அழியட்டும் என்கிறார் பகவான்.

இந்த உண்மையை ஆதி சங்கரர் தத்துவ போதம் என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.

தத்துவம் என்றால் இருப்பின் அடிப்படை போதம் என்றால் அறிவு. தத்துவ போதம் என்றால் இருப்பின் அடிப்படை அறிவு.
தத் என்றால் பிரமம். எது ஒன்று தானாகவே ஒளிபடைத்ததாக இருக்கிறதோ,எது எல்லா அறிவின் உறைவிடமாக இருக்கின்றதோ, எது எங்கும் இருக்கிறதோ அதுவே பிரமம். அது சர்வ வல்லமை வாய்ந்ததாகவும் இருக்கிறது. அதற்கு உருவம் கிடையாது, பெயர் கிடையாது, குணங்கள் கிடையாது.
அதுவே -பேருண்மை அல்லது ஸத்யம் என்ப்படுகிறது. (மற்றவையெல்லாம் மித்யை).
 அதுவே பரமாத்மா. தத் + த்வம். நீயே அதுவாயிருக்கிறாய். ஆதி சங்கரர் கூறுவார் ப்ரம்ம ஸத்யம், ஜகத் மித்யாஎன்று.

சங்கர பகவத்பாதாள் மேலும் கூறுவார்,
 ஆத்மா ஸத்யம், ததான்யது சர்வம் த்யேதி

எது ஒன்று மாற்றமில்லாமலிருந்ததோ மாற்றமில்லாமல் இருக்கிறதோ,மாற்றமில்லாமல் இருக்குமோ அதுவே சத்யம்
அப்படியில்லாமல் எது ஒன்று மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கிற்தோ அது மித்யை.
காணும் எல்லாப் பொருள்களையும் இரண்டு கூறுகளாக்ப் பிரிக்கலாம்.
1) அஹம் அல்லது நான் 2) இதம் அல்லது அது.

எப்பொழுது இந்த உடலை,மனதை,புத்தியை அஹத்துடன் நான் உடன் ஒன்றாக்கி பார்க்கிறோமோ அப்பொழுது  நாம் மித்யா வசப்பட்டுவிடுகிறோம்.
எப்பொழுது இந்த உடலும் மனதும் புத்தியும் நான் இல்லை என்றறிகிறோமோ அப்பொழுது நாம் முக்தி அடைந்து விடுகிறோம். விவேகம் பெற்றுவிடுகிறோம்
 அப்படிப்பட்ட விவேம் பெறாமல் இருக்கும் வரை நாம் அவிவேகத்திற்கு ஆட்பட்டு இருக்கிறோம். இந்த அவிவேகம் என்கின்ற கீழ்மையை உன் பிரகாசத்தால் அழித்து விடு என்று வேண்டுகிறார் ரமணர்..
பகவத் கீதயின் பதிமூன்றாம் அத்தியாயத்தில் இந்த பேருண்மை வேறு விதமாக விளக்கியிருக்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

இதம் சரீரம் கௌந்தேய,க்ஷேத்ர மித்யபீதியதே
ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹூ: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:

இந்த உடலே ஒரு க்ஷேதிரமாகும்,அதை யார் ஒருவர் சரியாக புரிந்துகொள்கிறாரோ அவரே க்ஷேதிரக்ஞ்ர் எனப்படுகிறார்.

அவர் இந்த பௌதிக( ஸ்தூல) ) சரீரத்தில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை.அவர் அதை இயக்குபவர் ஆகிறார்.
இந்த உடலிலேயே தர்ம க்ஷேதிரமும் குருக்ஷேதிரமும் உள்ளது, ஆழ் மனதில் ஒன்றுக்கொன்று வேறுபட்டுச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற இரண்டு விதமான எண்ணவோட்டங்கள் இருந்து வருகின்றன. அதில் ஒன்று பரமத்மாவில் நம்மை லயிப்பித்து ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைய வைக்கக் கூடிய தெய்வீக எண்ணங்க்ள். இன்னொன்று அசுர  குணங்கள். அவை எப்பொழுதும் இந்த அழியும் பொருள்களின் நிலையில்லாத இந்த உலகத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைக்கின்றன.
எப்பொழுது அசுர செல்வம் வலிமை பெற்றதாக உள்ளதோ அப்பொழுது நம் உள்ளம் குருக்ஷேதிரமாக மாறுகிறது.
இந்த அசுர குணங்களை அழித்து தெய்வீக குணங்களை வலிமை பெறச் செய்தால் நம் உள்ளம் தர்ம க்ஷேத்திரமாக மாறும். நாம் முக்தியடைந்தவர்களாவோம். நாம் க்ஷேத்திரங்கராவோம்.

இதைத்தான் பகவான் ரமணர் என் கீழ்மையை பாழ் செய்யருணாசலா என்கிறார்.