Friday 19 December 2014

ரமணஜோதி 22


கீழ் எது? மேல் எது?





கீழ்மேலெங்குங் கிளரொளி மணியென்
கீழ்மையைப் பாழ்செய் யருணாசலா

அருணாசலா, உன் அருள் கீழானவர்,மேலானவர் எல்லாருக்கும் கிடைகட்டும். வைரக் கற்கள் எப்படி எல்லாப் பக்கமும் ஒளி வீசுமோ அப்படி நீயும் பிரகாசிப்பாயாக. உன் ஒளி பட்டு என் கீழான எண்ணங்கள் அழியட்டும். என்று பகவான் ரமணர் வேண்டுகிறார்.

மனிதர்கள் பிறக்கும்பொதே நம் உடல் தான் நான் என்ற அவித்யை யுடன் பிறக்கிறோம். இந்த அறிவீனம் அழிந்து ,நம் முன் பரவிக்கிடக்கும் புவனமெல்லாம் நம் மனதால் கற்பனை செய்யப்பட்டதே அன்றி வேறொன்றுமில்லை; உண்மையில் ஜீவான்மாவும் அந்த எல்லா வல்ல பரமான்மாவும் ஒன்று தான் என்றறிந்து அவனுடன் லயிப்போமாக, என்கிறார் பகவான்.

பகவான் ரமணர் ஒருமுறை உண்மையில் கீழும் கிடையாது மேலும் கிடையாது, என்று ரிபு கீதையை மேற்கோள் காட்டி சொல்லியுள்ளார்.
ரிபு கீதை எனப்படுவது, ரிபு மகிரிஷி நிதாகருக்கு செய்த தத்துவோபதேசமே.
மகிரிஷிக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள்.அவர்களில் மகிரிஷிக்கு மிகவும் பிரியமானவர் நிதாகர். நிதாகர் சாஸ்திரத்தில் மிகவும் அறிவு வாய்ந்தவராகவும் திறமயானவராகவும் இருந்தார். மேலும் பவித்திரமான உள்ளமுடையவராகவும் குருவிடம் மிகவும் பக்தி உடையவராகவும் இருந்தார். ஆகவே மகிரிஷி, நிதாகர் மீது தனி அக்கறை கொண்டு அத்துவைத  தத்துவத்தை அவருக்கு போதித்தார். ஆனால் நிதாகரால் சம்பிரதாயமான கர்மகாண்டத்திலிருந்து விடுபட முடியவில்லை. ஞான மார்க்கத்தில் ஸ்திரமான பிடிப்பும் அவருக்கு ஏற்படவில்லை.

நிதாகரை சோதிப்பதற்காக மகிரிஷி பலமுறை மாறுவேடத்தில் போய்  சீடர் எவ்வளவு தூரம் கர்மகாண்டத்திலிருந்து விடு பட்டுள்ளார்  என்று சோதிப்பாராம்.
ஒரு முறை கிராம வாசி போல் வேடமணிந்து நிதாகரை காண குரு சென்றார்.
திருவிழாக் கோலத்தில் பவனி வரும் அரசனைக் காண நிதாகர் வீதியில் ஜனக் கூட்டத்தோடு நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் சென்று மகிரிஷி பேச்சை துவக்கினார்.
ஐயா, இங்கு என்ன கூட்டம்? ஏன் இந்த கும்மாளம்? என்று குரு வினவினார்.
ராஜா பவனி வந்து கொண்டிருக்கிறார். என்று நிதாகர் பதில் கூறினார்.
ரிபு, எங்கே ராஜன்?
நிதாகர்,  அதோ யானை மேல் பவனி வருகிறாரே,அவர் தான் ராஜா
ரிபு,  ஓஹோ! ராஜா யானை மேல் உட்கர்ந்திருக்கிறார் என்றா சொல்கிறாய்? நான் இரண்டு பொருள்களை பார்க்கிறேன். இதில் யார் ராஜா? யார் யானை?
நிதாகர்,  உனக்கு கண்தெரிகிறதல்லவா? கீழேயிருப்பது யானை, மேலேயிருப்பது ராஜா.
ரிபு, ஐயா,நான் பட்டிக்காட்டு ஆசாமி, எனக்கு விவரம் கிடையாது. கொஞ்சம் விவரமாக் சொல்லுங்களேன். மேல், கீழ் என்கிறீர்கள்.,ராஜா,யானை என்கிறீர்கள்...மேலே ராஜா உட்கார்ந்திருக்கிறார் என்கிறீர்கள். .இதில் மேலெது? கீழெது?

நிதாகர்: (கோபமாக)சரியாப் போச்சு.மேலே ராஜாவையும் கிழே யானையும் பார்த்துக் கொண்டு தானிருக்கிறாய். அப்படியிருந்த்ம் கீழ் எது, மேல் எது என்றால் தெரியவில்லை என்கிறாயே? உனக்குப் பார்ப்பது தெரியவில்லையென்றால் செய்கையால்த் தான் புரிய வைக்க முடியும். நீ குனி. இப்போ புரியும் பார்.
குருவும் குனிந்தார்.
நிதாகர் ரிஷியின் முதுகில் ஏறி உடகார்ந்து கொண்டு இதோ,இப்போ புரிகிறதா?மேலே நான் இருப்பது போல் அங்கே ராஜா,கீழே நீ இருப்பது போல் யானை. இப்போதாவது புரிந்ததா?

ரிபு: ஊஹூம்,புரியவில்லையே. நீ ராஜாவைப் போல் மேலே இருக்கிறாய் என்றும்,நான் யானை போல் கீழே இருக்கிறேன் என்றும் சொல்கிறாய் .ராஜா,யானை,மேல்,கீழ் புரிந்து விட்டது.ஆனால் நான்,நீ என்று சொல்கிறாயே,அது புரியவில்லை.எதை நான், எதை நீ என்று குறிக்கிறாய்?.

இந்தக் கேள்வியை கேட்டதுமே, நிதாகருக்கு, தன் தனது என்கின்ற கர்மகாண்டத்தில் எப்படி சிக்கி கிடக்கிறோம் என்று உணர்த்தவே குரு இப்படி பட்டிக்காட்டான் உருவத்தில் வந்துள்ளார் என்று புரிந்து குருவின் காலில் விழுந்து வணங்கி பௌதிக தோற்றங்கள் வெறும் பொய்யானவை,உள்ளபொருள் ஆத்மாவே என்று புரிந்து கொண்டேன் என்று கூறினார்.

வைரக்கல்லை உதாரணம் காட்டியிருப்பது போல் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் பாடுகிறார்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே , அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப் பிணியே, பணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே,
பணியேன் ,ஒருவரை, நின் பத்ம  பாதம் பணிந்தபின்.

பகவான் என்பதிலுள்ள  என்றால் பிரகாசம்,ஒளி, என்று வட மொழியில் அர்த்தமாகும். அதனால்த் தான்  சூரியனுக்கு பானு, பாஸ்கரன் என்றெல்லாம் பெயர்.
அப்படிப்பட்ட உன் ஒளி பட்டு என் கீழ்மை எல்லாம் அழியட்டும் என்கிறார் பகவான்.

இந்த உண்மையை ஆதி சங்கரர் தத்துவ போதம் என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.

தத்துவம் என்றால் இருப்பின் அடிப்படை போதம் என்றால் அறிவு. தத்துவ போதம் என்றால் இருப்பின் அடிப்படை அறிவு.
தத் என்றால் பிரமம். எது ஒன்று தானாகவே ஒளிபடைத்ததாக இருக்கிறதோ,எது எல்லா அறிவின் உறைவிடமாக இருக்கின்றதோ, எது எங்கும் இருக்கிறதோ அதுவே பிரமம். அது சர்வ வல்லமை வாய்ந்ததாகவும் இருக்கிறது. அதற்கு உருவம் கிடையாது, பெயர் கிடையாது, குணங்கள் கிடையாது.
அதுவே -பேருண்மை அல்லது ஸத்யம் என்ப்படுகிறது. (மற்றவையெல்லாம் மித்யை).
 அதுவே பரமாத்மா. தத் + த்வம். நீயே அதுவாயிருக்கிறாய். ஆதி சங்கரர் கூறுவார் ப்ரம்ம ஸத்யம், ஜகத் மித்யாஎன்று.

சங்கர பகவத்பாதாள் மேலும் கூறுவார்,
 ஆத்மா ஸத்யம், ததான்யது சர்வம் த்யேதி

எது ஒன்று மாற்றமில்லாமலிருந்ததோ மாற்றமில்லாமல் இருக்கிறதோ,மாற்றமில்லாமல் இருக்குமோ அதுவே சத்யம்
அப்படியில்லாமல் எது ஒன்று மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கிற்தோ அது மித்யை.
காணும் எல்லாப் பொருள்களையும் இரண்டு கூறுகளாக்ப் பிரிக்கலாம்.
1) அஹம் அல்லது நான் 2) இதம் அல்லது அது.

எப்பொழுது இந்த உடலை,மனதை,புத்தியை அஹத்துடன் நான் உடன் ஒன்றாக்கி பார்க்கிறோமோ அப்பொழுது  நாம் மித்யா வசப்பட்டுவிடுகிறோம்.
எப்பொழுது இந்த உடலும் மனதும் புத்தியும் நான் இல்லை என்றறிகிறோமோ அப்பொழுது நாம் முக்தி அடைந்து விடுகிறோம். விவேகம் பெற்றுவிடுகிறோம்
 அப்படிப்பட்ட விவேம் பெறாமல் இருக்கும் வரை நாம் அவிவேகத்திற்கு ஆட்பட்டு இருக்கிறோம். இந்த அவிவேகம் என்கின்ற கீழ்மையை உன் பிரகாசத்தால் அழித்து விடு என்று வேண்டுகிறார் ரமணர்..
பகவத் கீதயின் பதிமூன்றாம் அத்தியாயத்தில் இந்த பேருண்மை வேறு விதமாக விளக்கியிருக்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

இதம் சரீரம் கௌந்தேய,க்ஷேத்ர மித்யபீதியதே
ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹூ: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:

இந்த உடலே ஒரு க்ஷேதிரமாகும்,அதை யார் ஒருவர் சரியாக புரிந்துகொள்கிறாரோ அவரே க்ஷேதிரக்ஞ்ர் எனப்படுகிறார்.

அவர் இந்த பௌதிக( ஸ்தூல) ) சரீரத்தில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை.அவர் அதை இயக்குபவர் ஆகிறார்.
இந்த உடலிலேயே தர்ம க்ஷேதிரமும் குருக்ஷேதிரமும் உள்ளது, ஆழ் மனதில் ஒன்றுக்கொன்று வேறுபட்டுச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற இரண்டு விதமான எண்ணவோட்டங்கள் இருந்து வருகின்றன. அதில் ஒன்று பரமத்மாவில் நம்மை லயிப்பித்து ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைய வைக்கக் கூடிய தெய்வீக எண்ணங்க்ள். இன்னொன்று அசுர  குணங்கள். அவை எப்பொழுதும் இந்த அழியும் பொருள்களின் நிலையில்லாத இந்த உலகத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைக்கின்றன.
எப்பொழுது அசுர செல்வம் வலிமை பெற்றதாக உள்ளதோ அப்பொழுது நம் உள்ளம் குருக்ஷேதிரமாக மாறுகிறது.
இந்த அசுர குணங்களை அழித்து தெய்வீக குணங்களை வலிமை பெறச் செய்தால் நம் உள்ளம் தர்ம க்ஷேத்திரமாக மாறும். நாம் முக்தியடைந்தவர்களாவோம். நாம் க்ஷேத்திரங்கராவோம்.

இதைத்தான் பகவான் ரமணர் என் கீழ்மையை பாழ் செய்யருணாசலா என்கிறார்.

No comments:

Post a Comment