Friday 19 December 2014

ரமணஜோதி 19

ரமணஜோதி 19


அகக்கண் திறக்கட்டும்

கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணூனைக்
                             காணுவ தெவர்பா ரருணாசலா

நாம் நமக்கு வெளியிலுள்ள வஸ்த்துக்களை காண்பது நமது கண்களால் என்பது நாம் எல்லாம் அறிந்த உண்மை.
பகவான் ரமணர் இந்த ஸ்தூல கண்ணுக்கு கண்ணாயிருப்பதைக் குறித்து கூறுகிறார் இந்த சுலோகத்தில்.
நமது ஸ்தூல சரீரத்தில் இருக்கின்ற அங்கங்களில் மிகவும் முக்கியமானது கண்கள் தான். கண்களில்லையென்றால் நாம் இந்த உலகத்தை காண்முடியாது
.ஒளி இருந்தால்த் தான் பொருள்கள் நம் கண்களுக்குத் தெரியும். ஒளியிருந்தாலும் கண்கள் இல்லாவிட்டால் பொருள்கள் நமக்கு தென்படமாட்டா.
ஆனால் இந்த கண்களை இயக்குவது எது?
அது தான் நமது மனம்.
கண்கள் திறந்திருந்தாலும்,நமது மனம் காண்பவையில் லயிக்காவிட்டால் கண் முன்னால் உள்ள பொருட்கள் நமக்கு தென்பட மாட்டா. மனம் காணுகின்ற கட்சிகள் தான் நமக்குத் தெரியும்
 நாம் கண் இருந்தும் குருடர்களாவோம்.
நாம் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் நிறைய காட்சிகள் நம் முன்னே ஓடிக்கொண்டேயிருக்கும்..
அது எப்படி?
நமது மனம் அதன் ஸ்ருஷ்டி சக்தியால்(கிரியா சக்தியால்) கண்களையும் மற்ற இந்திரிய உறுப்புக்களையும் கற்பனையில் உருவாக்கி நமக்கு காண்பதற்கான கேட்பதற்கான,வாசனையை கிரஹிக்கக் கூடிய சக்தியை அளிக்கிறது.
ஆனால் இந்த மனமும் செயல் இழந்திருக்கும் பொழுது- அதாவது உறக்கத்தில்- சொப்னாவஸ்தையில் நாம் பல காட்சிகளைக் காண்கிறோம், ஒலிகளை கேட்கிறோம். அதற்கான ஊக்க சக்தியை அளிப்பது / உருவாக்குவது நான்என்ற ஆன்மா தான்.. உறக்கத்தில் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதும் விழிப்பில் (ஜாக்ரத்) அவஸ்தயில் இருப்பதை மறைப்பதும் இந்த ஆன்மாவே தான்.
உறங்காத கண்களாம் இந்த ஆன்மாவை பகவான்,உள்ளது நாற்பது என்கின்ற நூலில் அந்தமிலாக் கண் என்று குறிப்பிடுகிறார்.
இந்த ஆன்மா தான் நான். அந்த நான் தான் கடவுள்; பிரம்மம்
நம் கண்களுக்கு காணும் சக்தி வேண்டும் என்றால் அந்த பிரம்மதின்/ கடவுளின்  உதவி வேண்டும்; ஆனால் பிரம்மத்திற்கு காண்பதற்கு யார் உதவியும் தேவை இல்லை.
இந்த ஆன்மா,அல்லது கடவுள் அல்லது பிரம்மம் என்பது ஒரு ஸ்தூல மல்ல. அது ஒரு அனுபவம்; ஒரு அனுபூதி.
அதை அனுபவித்துத் தான் உணர வேண்டும். அதை உணர வேண்டுமென்றால் நாம் பக்குவப் பட வேண்டும்
இப்படிப்பட்ட பக்குவம் எளிதாக்க் கிடைக்காது.. பகவான் ரமணர் அப்படிப்பட்ட ஒரு ஞானத்தை/ ஆத்மானுபூதியை சிறுவயதிலேயே அடைந்துவிட்டார்.

எது ஒன்று எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாக இருக்கிறதோ,அதுவே தான் அதன் விளைவாகவும் இருக்கிறது..
அந்த பிரம்மனைப் பார்க்கமுடியுமா?
உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெரியும் அந்த உண்மை சொரூபத்தைப் பார்க்கவும் வேண்டுமோ?
அதனிலிருந்து உண்டாகும் மற்றெல்லா வஸ்துக்களும் வெறும் பெயர்களே.
இவ்விஷயத்தில் நமது உபனிஷத்துக்களும் மற்ற வேத கிரந்தங்களும் பிரம்மத்திற்கு ஐந்து கோணங்களுண்டு என்று கூறுகின்றன. சத்- சித்-ஆனந்த- நாம- ரூப.
இதில் முதல் மூன்றும் சத்யமானவை. கடைசி இரண்டும் மாயை-இருப்பது போல் தோற்றமளிக்ககூடியவை.
இந்த சந்தர்ப்பத்தில் ரமணர் கூறின ஒரு கதையை நினைவு கூறுவது தவறகாது.
மனிதன் ஞானம் பெறுவதற்கு பல விதமான பிரதிபந்தங்கள் உள்ள்ன .இவைகளைப் பற்றி விளக்கிக் கூறுமாறு ஒரு பக்தர் பகவானிடம் கேட்டதற்கு இணங்கி பகவான் கீழ்கண்ட கதையைக் கூறினார்.
பிரதிபந்தங்கள் பல விதமனவை
...அவைகளைத் தான் பூத-பவிஷ்யத்-வர்தமான ( இறந்தகால, எதிர்கால, நிகழ்கால) பிரதிபந்தங்கள் என்பார்கள். அந்த மூன்றில் பூத பிரதிபந்தத்திற்கு உதாரணமாக உபனிஷத்திலும், வாசுதேவ மனனத்திலும் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
பெரிய குடும்பியான ஒரு பிராமணன் ஜீவனத்திற்காக ஒரு எருமையை வளர்த்தான். அது கொடுக்கும் பால்,தயிர், நெய் முதலானவற்றை விற்று குடும்பத்தை பராமரித்து வந்தான். எருமைத் தீனிக்காக பசும்புல், பருத்திக்கொட்டை, முதலியவை சேகரிப்பதிலும், எருமையை கவனிப்பதிலும் குறியாக இருந்தான். கர்ம வசத்தினால் அவனுடைய மனைவி, குழந்தைகள் எல்லோரும் வரிசையாக சிறிது காலத்திற்குள்ளேயே இறந்தார்கள்.
அதன் பிறகு அவனுக்கு எருமையின் மீது பிரியம் இருமடங்காயிற்று. சில வருடங்களில் அந்த எருமையும் இறந்துவிட்டது.
தன்னந்தனியனாகிவிட்ட அவனுக்கு இகலோக வாழ்க்கையில் வெறுப்பு வந்து சந்நியாசியாகி ஒரு சத் குருவின் சந்நிதியில் சிரவண மனனங்கள் செய்து கொண்டு வந்தான்.. அவனால் சிரத்தையாக சிரவண மனனங்களில் ஈடுபட முடியவில்லை.
குரு இதைக் கவனித்து அவனது பூர்வ கால வாழ்க்கையும் அப்பொழுது அவனுக்கு ஏற்பட்ட பந்த பாசங்களும் தான் அவனது சன்னியாசி வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டார்.
ஒரு நாள் குரு அவனை அழைத்து சொல்லலானார்:
பிரம்மத்தை அஸ்தி, பாதி, பிரியம் என்று சொல்வார்கள்.அஸ்தி ( இருக்கிறது), என்றால் உள்ள பொருள் (சத் வஸ்து ) பாதி என்றால் பிரகாசிப்பது, பிரியம் என்றால் அன்பானது. உன்னுடைய எருமை உனக்கு பிரியமானதால் அதுவும் பிரம்மம் தான். ஆனால் அதற்கு நாமமும் ரூபவும் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது நீ செய்ய வேண்டியது என்னவென்றால், உன்னுடைய நாம ரூபத்தையும் விலக்கி அதனுடைய நாம ரூபத்தையும் விலக்கிவிட வேண்டும். அப்போது உள்ளது பிரம்மம் ஒன்று தான்..
சிஷ்யனும் நாம ரூபங்களை விட்டு விட்டு ஆன்ம சிந்தனையில் ஈடுபட்டான்; ஞானமும் அடைந்தான்.
பகவன் சொன்னார்,  பொருள்கள் பலதானாலும் உள்ள பொருள் ஒன்றே தான். அவை நாம ரூபத்தில் தான் வேறு படுகின்றன.
நாம் அஸ்தியும் பாதியும் பிரியமும் பிரம்மத்தின் உருவகங்களே என்று தெரிந்து கொண்டால், இவையெல்லாம் சகஜ சொருப லக்ஷணங்கள் என்று புரிந்து கொண்டால் இவையெல்லாம் சத்-சித்-ஆனந்தத்தின் மறு பெயர்களே என்று புரிந்துகொண்டால் நமது அகக் கண் திறக்கப்பட்டுவிடும். நாம் ஆத்ம சாக்ஷாத்காரத்தை  நெருங்கி விட்டோம் என்று அர்த்தம்.

அக்ஷரமணமாலயின் இந்த சுலோகத்தில் கூறியிருப்பதே தான்
கேனோ உபனிஷத்தில் வேறு விதமாக கூறப்பட்டுள்ளது.
   யச்சக்ஷ்ஷா ந பஸ்யதி  யேன சக்ஷும்ஷி பஸ்யதி
ததேவ ப்ரம்மதுவம் வித்தி நேதம் யதிதமுபாசதே

யத் சக்ஷுஷா---------எதை கண்களால்
ந பஸ்யதி--------------பார்க்க முடியவில்லையோ
யேன சக்ஷும்ஷிஎதன் காரணமாக நாம் கண்களால்
பஸ்யதி----------------வஸ்த்துக்களை புரிந்துகொள்கிறோமோ
தத் ஏவ---------------அதே தான்
ப்ரம்மத்துவம் வித்தி-----பிரமம் என்று அறிந்து கொள்க
யத் இதம்--------உபாசனை வேற்றுமையோடு
உபாசதே ------உபாசிக்கின்றாயோ
இதம் ப்ரம்ம ந-----இது பிரம்மில்லை

ஸ்தூலக் கண்களால் பார்க்க முடியாததும்,ஆனால் அந்தக் கண்கள் இயங்குவதற்கு காரணமான அந்த சுத்த சைதன்யம் தான் பிரம்மம் என்று அறிக.நீ உபாசிக்கின்ற மற்றவையெல்லாம் பிரம்மமல்ல.என்கிறது உபனிஷத்.

காணுகின்றவர் ( பார்க்கின்ற) கண்களுக்கு கண்ணாக இருந்து கண் இல்லாமலேயே சகலமும் காண்போனாகிய அந்த சத்-சிதானந்தனை எப்படி காண முடியும் என்று பகவான் அக்ஷர மண மாலையில் கேட்கிறார். அதற்கு நீ தான் துணை நிற்க வேண்டும் என்கிறார்.
இதே கருத்தை ஆன்ம வித்தைக் கீர்த்தனத்தில்    கீழ்கண்டவாறு கூறூகிறார்.
  விண்ணாதிய விளக்கும் கண்ணாதிய
பொறிக்கும் கண்ணாய் மனக்கணுக்குங் கண்ணாய்
வேறு ஒரிடத்தில் இப்படி கூறப்பட்டுள்ளது
காணொணாத கண் காட்சி பற்பல
காட்டினாய் மனக் கண்ணுளே
காண்பவன், காணப்படும் பொருள், காணுகின்ற செயல் எல்லாம் பிரம்மனின் செயலே..நானும் பிரமம், நீயும் பிரமமம், எல்லாமே பிரமமம் என்று புரிந்து கொண்டு நான் என்ற அகந்தையை அழித்து விடு.
அதற்கான அருளை எனக்கு தர வேண்டும் அருணாசலாஎன்று பகவான் நமக்காக பரமனிடம் வேண்டுகிறார்

No comments:

Post a Comment