Friday 19 December 2014

ரமணஜோதி 26

அஷ்டாவக்கிரர் கதை


யாரிந்த அஷ்டாவக்கிரர்?
நமது இதிஹாசங்களில் இரண்டு இடங்களில் அஷ்டவக்கிரரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ராமாயணத்தில் அஷ்டாவக்கிரர்

வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராம ராவண யுத்தம் முடிந்த பின் தசரதர் வானுலகத்திலிருந்து ராமனை காண பூலோகம் வருகிறார்..
அந்த சந்தர்ப்பத்தில் தசரதர் கூறுவார்,
மகனே, நான் உன்னால்  தன்யனானேன். பெற்றவற்கு பெருமை சேர்த்த மகன் நீ. எப்படி அஷ்டவக்கிரர் தனது தந்தை ககோடரை வந்தியின் பிடியிலிருந்து விடுவித்தாரோ அதே போல் நீ என்னை பாப சுமையிலிருந்து விடுவித்து விட்டாய்.

அத்யாத்ம ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ராமரும் இலக்குவனும் கபந்தன் என்ற அரக்கனை வதம் செய்த பொழுது, கபந்தன் கந்தர்வனாக உருமாறி தன் கதையை கூறுகிறான்.
தான் முன்பொருமுறை அஷ்டவக்கிர முனிவரைப் பார்த்துச் சிரித்ததாகவும் அவரின் சாபம் நிமித்தமாகத்தான் இந்த உரு எடுக்க வேண்டி வந்தது.   த்ரேதா யுகத்தில் ராமனால் நீ கொல்லப்படுவாயென்றும் அப்பொழுது உனக்குக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று அஷ்டாவக்கிரர் கூறினாராம்.

அஷ்டம் என்றால் எட்டு. ஆஷ்டாவக்கிர முனிவரின் உடல் அஷ்ட கோணலாக இருக்குமாம். அந்த விசித்திரமான உடலைப் பார்த்து தான் கபந்தன் சிரித்தான்.
மிகுந்த ஞானியும்,தவவலிமை மிக்கவருமான அவருக்கு இந்த உடல் வாகு எப்படி அமைந்தது என்று தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் நாம் மஹபாரதத்திற்கு செல்ல வேண்டும்.

மஹாபாரதத்தில் அஷ்டவக்கிரர்


மஹாபாரதத்தில் வனபர்வத்தில் அஷ்டவக்கிரரை பற்றிய குறிப்பு வருகிறது.
சூதாட்டத்தில் தோற்றுப் போன பாண்டவர்கள் திரௌபதியுடன் வன வாசம் செல்கிறார்கள். வனத்தில் அவர்கள் லோமச முனிவரை சந்திக்கிறார்கள். முனிவர் யுதிஷ்டிராதிகளை மதுபிலா நதியில் நீராடினால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறுகிறார்.
மதுபிலாவிற்கு இன்னொரு பெயர் ஸமங்கா.
முனிவர் மேற்க்கொண்டு சொன்னார்,  இந்த சமங்காவில் நீராடியதால்த் தான் அஷ்டவக்கிர முனிவரின் அஷ்ட கோணலாயிருந்த உடல் நேரானது.
யுதிஷ்டிரர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி,லோமச முனிவர் அஷ்டாவக்கிரரின் கதையை பாண்டவர்களுக்கு கூறினார்.
மஹாபாரதத்தில் மூன்று அத்தியாங்களில் அஷ்டவக்கிரரின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு ஒரே ஒரு வாக்கியம்,
நரைத்த தலை முடி முதிர்ச்சியின் அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ நரைத்த முடியோ ,ஒருவரிடமுள்ள தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ,ஒருவரை பெரிய மனிதனாக்குவதில்லை. யார் அறிவில்/ ஞானத்தில் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்
.அஷ்டாவக்கிரர்

உத்தாலக முனிகள் தனது ஆசிரமத்தில் பிரம்மசாரிகளுக்கு வேதம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். என்று சாண்டோக்ய உபனிஷத்தில் வருகிறது.
ககோடகன் என்ற ஒரு மாண்வன் அவரிடம் வேதம் பயின்று வந்தான். அவன் எல்லா மாணாக்கர்களையும் விட திறைமைசாலியாகவும், புத்திகூர்மையுள்ளவனாகவும் இருந்தான். ஆகவே குருவுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது.
அது உத்தாலகர் தன் மகள் சுஜாதாவை ககோடகனுக்கு கன்னிகாதானம்  செய்து கொடுப்பதில் முடிந்தது.
சுஜாதா கருவுற்றாள்.
சுஜாதாவிற்கு தனது மகனை வேதங்களிலும் வேதாந்த்திலும் சிறந்த பண்டிதனாக்க வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.
கருவுற்றிருந்த சுஜாதா தனது கணவர் நடத்தும் வகுப்புகளில் தவறாமல் ஆஜராக ஆரம்பித்தாள்.
வேத காலங்களிலேயே கருவிலிருக்கும் சிசு மாதா கேட்கும் பாடங்கள், அனுபவிக்கும் அனுபவங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளக் கூடும் என்று நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்திருந்தார்கள்.
கருவிலிருந்த சிசு தன் தந்தையான ககோடகன் சிஷ்யர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வேத வேதாந்தங்களையும் மந்திரங்களையும் கேட்டும் புரிந்து அந்த அறிவின் தாபம் தாங்காமல் அஷ்ட கோணலாக நெளிந்துகொண்டேயிருந்ததாம். மேலும் ககோடகன் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டால் கருவிலிருக்கும் அந்த சிசு திருத்த முற்பட்டதாம்..  ஒரு நாள் ககோடகனால் ஒரு சிசு பிறப்பதற்கு முன்பே தன்னை திருத்த முற்படுவது பொறுக்க முடியாமல் குழந்தையை சபித்து விடுகிறார்,  நீ எப்படி அஷ்டகோணலாக நெளிந்து கொண்டிருக்கிறாயோ அப்படியே பிறக்கக் கடவது
குழந்தை அப்படியே அஷ்டகோணலாகப் பிறந்தது.

குழந்தை பிறந்ததால் குடும்பத்தை பரமரிப்பதற்கு கூடுதலாக தனம் தேவைப் பட்டது.
அரசர் ஜனகர் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் மிகவும் ஈடுபாடுள்ள்வர். அவரது வித்வத் சபையில் நிறைய வேத விற்பன்னர்களும் பண்டிதர்களும் ஆதரிக்கப்பட்டு வந்தார்கள்.
சுஜாதாவும் ககோடகனும் ககோடகன் அரசரிடம் சென்று தன் அறிவுத் திறைமையால் தனம் சம்பாத்த்து வரலாம் என்று தீருமானித்தார்கள்.
நடந்ததோ வேறுமாதிரி. ஜனகருடைய வித்வத் சபையில் வந்தி என்ற ஒரு பேரறிஞர் இருந்தார்.அவரை வாதத்தில் தோற்கடித்தால்த் தான் மன்னரிடம் பரிசு பெறமுடியும். தோற்றுப் போனாலோ வந்தி தோற்றவரை தண்ணீரில் மூழ்கடித்து கொன்று விடுவார்.
ககோடகன் போனவன் போனது தான். திரும்பி வரவேயில்லை.

அஷ்டாவக்கிரன் உத்தாலக முனிவரின் மகன் ஸ்வேதகேதுவுடன் வளர்ந்து வந்தான். உத்தாலகரும் அஷ்டாவக்கிடரனை தன் சொந்த மகனைப் போலவே வளர்த்து வந்தார். அஷ்டாவக்கிரன் உத்தாலகர் தான் தன் தந்தை என்று நம்பி விட்டான். அவனிடம் யாரும் உண்மையை விளக்கி கூறவில்லை
அவனுக்கு பன்னீரண்டு வயதுள்ள பொழுது ஒரு நாள் அஷ்டாவக்கிரன் உத்தாலகரின் மடியில் அமர்ந்திருந்தான். அப்பொழுது அங்கு வந்த ஸ்வேதகேது அஷ்டாவக்கிரனை தன் தந்தையின் மடியிலிருந்து தள்ளிவிட்டு விட்டு, இது உன் தந்தையல்ல் என்று கூறிவிட்டான்.
அதன் பின்  தன் தாயிடமிருந்து உண்மையைத் தெரிந்துகொண்ட அஷ்டாவக்கிரன் ஜனகரின் அரசவைக்குச் சென்று வந்தியை தோற்கடித்து பழிக்கு பழி வாங்குவேன் என்று கிளம்பி சென்று விட்டான்.
அரசவையில் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அரண்மனையின் வாயிற்காப்போன் அவனை உள்ளே விட மறுத்து விட்டான். அது மட்டுமல்ல உள்ளே சென்றவர்களின் கதி என்ன்வாயிற்று என்று விளக்கிகூறினான். மேலும்,அரசவை சிறுவர்களுக்கானதல்ல; அறிவாளிகளுக்கும் முதிர்ந்தவர்களுக்கும்தான், என்றான். அஷ்டவக்கிரன் பிடிவாதம் பிடித்து அரசவைக்கு வந்து சேர்ந்தான்.
சேவகன் கூறியதையே அரசரும் கூறினார். அதற்கு அஷ்டவக்கிரன் அளித்த பதிலைத் தான் நாம் முதலில் பார்த்தோம்.
நரைத்த தலை முடி முதிர்ச்சியின் அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ நரைத்த முடியோ ,ஒருவரிடமுள்ள தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ,ஒருவரை பெரிய மனிதனாக்குவதில்லை. யார் அறிவில்/ ஞானத்தில் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்.
அவ்வளவு பிடிவாதமாக இருக்கும் பாலகனை யாரலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
போட்டியரம்பித்தது.
ஒன்றிலிருந்து வரிசையாக ஒவ்வொரு எண்ணைக்கொண்டு ஆரம்பித்து சுலோகங்கள் உடனுக்குடன் இயற்றும் போட்டி ஆரம்பித்தது. வந்தி தான் ஆரம்பித்தார். சளைக்காமல் அஷ்டவக்கிரனும் வந்திக்கு ஈடு கொடுத்தான். கடைசியில் பன்னீரெண்ட்டாமெண் வந்ததும் வந்தியால் சுலோகத்தை முடிக்க முடியவில்லை.
அஷ்டவக்கிரன் தன் திறைமையால் அந்த சுலோகத்தை முடித்துக் காண்பித்தான்.
வந்தி தோல்வியை ஒப்புக்கொண்டார்.
போட்டி விதி முறைகளின் படி வெற்றி பெற்றவர் சொல்லும் தண்டனைக்கு தோற்றவர் ஆளாகவேண்டும்.
அஷ்டாவக்கிரன் தன் தந்தையை வந்தி எப்படி தண்ணீரில் மூழ்கடித்து கொன்றாரோ அதே தண்டனையை அவரும் அனுபவிக்க வேண்டும் என்றான்.

அப்பொழுது வந்தி கூறினார், உன் தந்தையும் மற்ற பண்டிதர்களும் இறக்கவில்லை.. நான் வருணதேவனின் மகன். என் தந்தை ஒரு மாபெரும் வேள்வி விண்ணுலகத்தில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அதற்காக சிறந்த பண்டிதர்களை அடையாளம் கண்டு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தேன்.அந்த வேள்வி முடிந்ததும் எல்லோரும் வந்துவிடுவார்கள்.
அதே நேரத்தில் வருணதேவனின் வேள்வியும் முடிந்தது.ககோடகனும் மற்ற பண்டிதர்களும் ஜனகரின் அரசவையில் பிரத்தியட்சமானார்கள்.
ககோடகன் தன் மகனின் அறிவு கூர்மையும் விவேகத்தையும் கண்டு மிகவும் மனமகிழ்ந்தான்.
மகனை மதுபிலா ( சமங்கா) என்ற நதியில் நீரட்டி சாப விமோசனமும் அளித்தான்.
சமங்காவில் நீரடுவதால் உடலிலுள்ள வக்கிரங்கள் மறையும் என்பது முன்னொரு பகுதியில் சொன்னது போல் ஒரு myth.   ஜீவத்மாவை பரமாத்மாவில் இலயிக்கவைத்து நீராட்டி எல்லாம் ஒன்றே என்ற ஆத்ம ஞானம் பெறுவதுன் மூலம் நம் மனதிலுள்ள கோணல்கள் மறைந்து ஆத்ம சாக்ஷாத்காரம் பெறுவோம் என்பது உள்பொருள். புண்ய தீர்த்தங்களுக்கு நாம் செல்வதும் நீரடுவதும் நம் பாப விமோசனத்திற்குத் தான். ஆனால் நீராடிய பிறகும் மனதின் கோணல்கள் நீங்கி நாம் இறையருள் பெறவில்லயென்றால் அது நமது பிரரப்த கர்மம் என்று கொள்ளவேண்டும்.
பிற்காலத்தில் ஜனக மஹாராஜாவின் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து அஷ்டாவக்கிரர் அளித்த உபதேசம் தான் அஷ்டவக்கிர கீதை. ஜனக அஷ்டாவக்கிர சம்வாதம், அஷ்டவக்கிர சம்ஹிதை என்ற பெயர்களால் அறியப்படலாயிற்று.

அந்த வரலாற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்

No comments:

Post a Comment