Sunday 28 December 2014

ரமணஜோதி 48


ரமணஜோதி 48

துரீயம்

கடந்த இரண்டு அஞ்சல்களாக நாம் ஜீவான்மா எப்படி தானே கட்டிய இரண்டு அறைகளில் சிறையுண்டு அல்லல் படுவதையும் அதிலிருந்து விடுபடுவதற்காக இன்னொரு அறையில் சென்றடைவதையும் அதுவும் ஒரு தாற்காலிகமான விடுதலை தான் என்று கண்டோம்.
நிரந்தரமான விடுதலையைக் குறித்து ஆலோசிக்கு முன் பகவான் ரமணர் ஸுஷுப்தியைக் குறித்து கூறீயுள்ள சில கருத்துக்களை சற்று விவரமாக பார்ப்போம்.
“தூக்கத்தில் நாம் எப்படியிருக்கிறோம்? நானெனும் எண்ண எழுச்சியற்று சும்மாயிருக்கிறோம்.அதனின்று விழிக்குங்கால் அகந்தையும்,அதைப் பற்றிய பிற எண்ணங்களும் எழுந்து நமது இயல்பேயாம் ஆனந்தத்தை மறைத்து விடுகின்றன. ஆகவே  சுகமாய் இருக்க விரும்புவன் தோன்றி மறையும் அகந்தையும் அதைப் பற்றி வரும் எண்ணத் தொடரையும் விவேகத்தால் ஒழிக்க வேண்டும்”.( ஸ்ரீ பகவான் வசனாம்ருதம் பாகம் 2,/85)
“ஜாக்ரத்திலும் ஸ்வப்னத்திலும் மனமிருப்பதால்,மனோமயமாய் உலகு காணப்படுகிறது. தூக்கத்தில்(ஸ்ஷுப்தியில்) மனமொடுங்க,அத்துடன் உலகமும் ஒடுங்குகிறது. மீண்டும் விழிக்குங்கால், மனமெழுகிறது;அத்துடன் மனோமயமேயாம் உலகும் காணப்படுகிறது. தூக்கத்தின்போது ஒடுங்கியிருந்த அகந்தை விழிக்குங்கால் உடலுடன் தன்னை சம்பந்தப் படுத்திக் கொண்டு உலகை காண்கிறது. ஆகவே உலகம் மனோமயமே. மனத்தை விட்டு அதற்கோர் இருப்பில்லை.” (வ.ச.2/89)
“ இம்மனம் கனவில் ஒரு உலகையே சிருஷ்டிக்கிறதே? அவ்வாறே தான்  நனவிலும்;
கனவு குறுகிய காலத்ததாகவும்,நனவு நீண்ட காலத்ததாகவும் தோன்றுகிறது”.
“அவஸ்தாத்ரய ஸக்ஷியாம் “நான்” அவஸ்தைகளால் பாதிக்கப் படுவதில்லை.”
 துரிய எனும் நாலாவது அவஸ்தை ப்ரஹ்மனின் அதிஷ்டானம் என்கிறார் ஸ்வாமி சிவானந்தா.இந்த நிலையை அடைகின்ற ஜீவாத்மா தன்னுடைய இயற்கையான சத்-சித்-ஆனந்த ஸ்வரூபமான பிரமனில்  லயிக்கின்றது. சமசாரத்தில் உழலுகின்ற ஜீவாத்மாக்கள் ஜாக்ரத்,ஸ்வப்ன,சுஷுப்தி எனும் மூன்று அவஸ்தைகளில் மாறி மாறி சலித்துக்கொண்டிருக்கிறது.
இந்த மூன்று அறைகளின் சுவர்களையும் உடைத்து தள்ளி விட்டால் நாம் இருப்பது ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு திறந்த வெளி.அதை நாலாவது அறை என்று கூறலாமா? ஏனென்றால் அறைக்கு சுவர்கள் இருக்கும்;வாசல் இருக்கும். ஆனால் துரீயத்தை அடைந்து விட்டால் ஜீவாத்மா எந்த எல்லைகளுக்கும் கட்டுப் பட்டதில்லை.ஆதற்கு போவதற்கு வாசலும் இல்லை;தேவையும் இல்லை.
ஒரு முறை S.S. கோஹன் என்ற வெளி நாட்டவர் “சமாதி என்றால் என்ன?” என்று பகவான் ரமணரிடம் கேட்டார்’
அதற்கு பகவான் சொன்னார்:
“சமாதி என்றால் ஒருவனது இயற் குணம்..”
கோஹன் தொடர்ந்து கேட்டார்,” இதுவும் துரீயவும் ஒன்று தானா?”
இதற்கு பகவான் அளித்த பதிலும் தொடர்ந்து அளித்த விளக்கங்களும் மிகவும் முக்கியமானவை.
பகவான் சொன்னார்:
“சமாதி, துரீயம், நிர்விகல்ப சமாதி மூன்றுமே ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொள்வதையேக் குறிக்கிறது. இது தான் நாலவது அவஸ்தை.-பர பிரம்மம்.-மற்ற மூன்று அவஸ்தைகளிலிருந்து -ஜாக்ரத், சொப்னம்,சுஷுப்தி—வேறானது. இந்த நாலாவது அவஸ்தை   நிரந்தரமானது. இந்த அவஸ்தையில் மற்ற மூன்று அவஸ்தைகளும் வந்து போகிறது. துரீயாவஸ்தையில் நமது மனம் அதன் மூலத்துடன் லயித்துவிட்டதை உணர்கிறோம்.சில புலன்கள்.அப்பொழுதும் நமது ஆன்மாவை அரித்துக் கொண்டிருக்கும்.ஒரு விதமான இயக்கம் என்று கூறலாம்.ஆனால் நிர்விகல்ப சமாதியில் புலன்கள் முற்றிலும் செயலிழந்து விடும் சிந்தனைகள் பூரவும் மறைந்து விடும்.ஆகவே அது சுத்த சித் எனப்படுகிறது.ஆகவே இந்த நிலை ஆனந்தமயமானது. துரீயம் சவிகல்ப சமாதியில் அடைய முடியும்.”.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பகவான் கூறுவார்:
உண்மையில் ஜிவான்மா மூன்றே அவஸ்தைகளில்த் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  துரியம் என்பது நாலாவது அவஸ்தை அன்று.ஆனால் சதாரண மனிதர்கள் அதை சரியாக புரிந்து கொள்வதில்லை. ஆகவே
துரீயத்தை நாலாவது அவஸ்தை என்று கூறுகிறோம்.. துரீயம் தான் சத்யவஸ்தை;இது ஒன்றின் பாகமுமல்ல;இதுதான் எல்லாவற்றின் மூலம்.
இது உன் அஸ்தித்துவத்தின் அடிப்படை..”
மாண்டுக்ய உபனிஷத் ஏழாவது சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

:ந்தப்ரஞா பஹிர்ப்ரஞா   நோபயத்:ப்ரஞ: ப்ரஞானகனம்

  ப்ரஞ  நாப்ரஞ்ம் ! அத்ருஷ்டமவ்யவஹார்யமக்ராஹ்யமலக்ஷணம்

அசித்யமவ்யபதேஸ்யமேகாத்மப்ரத்யசாரம் ப்ரபஞ்சோப்சம்

சந்தம் சிவம்த்வைதம் சதுர்த மன்யந்தே ஆத்மா விஜ்னேய:!!

ப்ரமன்  சொப்னாவஸ்தையில் காணும் அந்த:ப்ரஞனுமல்ல; ஜாக்ரத் அவஸ்தயில் காணும் பஹ்ர்ப்ரஞனுமல்ல;இரண்டும் கலந்த ஒரு நிலையும் அல்ல.சமுத்திரத்தைப் போன்ற எல்லாவற்றின் சங்கமுமல்ல ;
இது ஆன்மாவின் தனி ஸ்வ்ரூபம்; ரூப-குண விசேஷங்கள் எதுவுமில்லாத பிரம்ம நிலை.சுத்த சத் சிதானந்த நிலை
இது பார்க்க இயலாத நிலை.ஆகவே
அதிருஷ்டம்
இது அவ்யவஹாரயம்-
இதுடன் எந்த ஒரு விவகாரமும் வைத்துக் கொள்ளமுடியாது.
ஸ்பரிசிக்க,பேச,பிடிக்க முடியாத ஒரு அவஸ்தை.
இது அக்ராஹ்யம்—நமது எந்த புலனுக்கும் அடங்காது-கட்டுப்படாது.
அலக்ஷணம்- அவ்யாபாதேஸ்யம் விவரிக்க இயலாதது
இது ஒரு ஏகாத்மப்ரத்ய சாரம்-இதை வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது.இதை இதுனுடன் தான் ஒப்பிடமுடியும்.எப்படி ராம ராவண யுத்தத்தை ராம ராவண யுத்தத்துடன் மட்டும் தான் ஒப்பிட முடியுமோ அது போல். ஆகவே –இது ஏகத்துவம், ஆத்மத்துவம் ;சர்வத்துவம்
ப்ரபஞ்சோஸ்மம்
இங்கு எல்லா சலனங்களும் முடிவுறுகிறது.எப்படி அலைகள் ஒவ்வொன்றாக எழும்பி முடிவில் சமுத்திரத்திலேயே வந்தடைகின்றதோ அது போல் இங்கும் ஒரு விதமான சாந்தம் நிலவுகிறது.
இந்த அவஸ்தை சதுர்தம் மான்யதே,ஸ ஆத்மா
இது ஆத்மாவின் நாலாவது நிலை என்று கொள்ளலாம். கணித முறைப்படியல்ல நாலாவது; 
மூன்று படிகளை கடந்து வந்து விட்டோம் ஆகவே நாலாவது; இதில் எல்லாம் அடக்கம்.இது தான் எல்லா ‘சத்’துக்களிலும் சத்; எல்லா ‘சித்’ துக்களிலும் சித்;எல்லா ‘ஆனந்தத்திலும் ஆனந்தம். சத்-சித்-ஆனந்தம்
இதே கருத்தை ரிபு கீதையின் இருபத்தியாறாவது அத்தியாயத்திலும் காணலாம்
எதனிடையில் காயிகமாஞ்செயலு மில்லை
 யெதனிடையில் வாசிகமாஞ் செயலுமில்லை
யெதனிடையின் மானதமாஞ் செயலுமில்லை
யெதனிடையின் மற்றுமொரு செயலுமில்லை
யெதனிடையிற் பாவமற மெவையுமில்லை
யெதனிடையிற் பற்றுபல னுணவுமில்லை
யதனிடையிற் சங்கற்ப மணுவு மின்றி
யம்மயமாய நவரதஞ்ச் சுகித்திருப்பாய்
26/7 ரிபு கீதை
எதனிடையிற்.கற்பனையே யென்று மில்லை
     யெதனிடையிற் கற்பிப் போன் றானு மில்லை
யெதனிடையிற் பிரபஞ்ச முதிக்கவில்லை
யெதனிடையிற் பிரபஞ்ச மிருக்கவில்லை
யெதனிடையிற் பிரபஞ்ச மொடுங்க வில்லை
     யெதனிடையி லெவையுமொரு காலு மில்லை
யதனிடையிற் சங்கற்ப மணுவு மின்றி
     யம்மயமா யனவரதஞ்ச் சுகித்தி ருப்பாய்
                           26/8 ரிபு கீதை
இப்படிப்பட்ட ஆனந்தமயமான ஒரு நிலையைத் தேடி அடையாமல் சும்மா சுகமுண்டுறங்கிடிற் என் கதி என்னாகும் அருணசலா என்று பகவான் கேட்கிறார்.
என்னை ஜாக்ரத்,சொப்னம்,சுஷுப்தி என்ற வலயத்திலிருந்து மீட்டு உன்னை சரணடைச் செய் அருணாசலா எங்கிறார் பகவான்




No comments:

Post a Comment