Friday 19 December 2014

ரமணஜோதி 32


குறி ஒன்றுவழி பல

கொடியிட் டடியரைக் கொல்லுனைக் கட்டிக்
கொண்டெஙன் வாழ்வே னருணாசலா.

அடியார்களை கொல்லுவதையே குறிக்கோளாகக் கொண்டு கொடி கட்டிக்கொண்டு போருக்கு புறப்படும் வீரனைப் போல்-வரும் உன்னோடு இணைந்து வாழ்வது எங்கனம் என்று பகவான் கேள்வியெழுப்புகிறார்.
எல்லோரையும் சகல ஜீவராசிகளையும் காத்து ரட்சிக்கின்ற அந்த ஜகதீசுவரன் அடியார்களை கொல்லுவாரா? இது என்ன விந்தையான வாதம்? என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.
இங்கே கொல்லுதல் என்பது ஜீவாத்மாவை அழிப்பது என்றே கொள்ள வேண்டும்.
ஜிவாத்மா அழிந்து நாம் ஆத்ம சாக்ஷாத்காரம் பெற்றுவிட்டோமென்றால் ஞானியாகி விட்டோமென்றால்-அங்கு ஒன்றைத் தவிர வேறொன்றில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைக்குத் தான் நமது முயற்சியெல்லாம் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட நிலை அடைந்து விட்டோமென்றால் நான் அழிந்து விடுகிறது-கொல்லப்பட்டு விடுகிறது.
நமது இகலோக வாழ்க்கையில்  நாயகனும் நாயகியும் இணைந்து விட்டால் அவர்களது இல் வாழ்க்கை துவங்குகிறது.. அவர்கள் ஈருடல் ஒருயிர் என்பது போல் வாழ்கிறார்கள்.
ஆனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகி லயித்து விட்டால் அங்கு இரு ஆத்மாக்கள் இருப்பதில்லை. அங்கே சுபாவ சொரூபமான ஒரு லயனம் ஏற்படுகிறது.

ஜிவாத்மா அப்படிக் கொல்லப்பட்ட பின் நம்மால் எப்படி மற்றவர்களைப் போல் வாழ முடியும்?
முடியும் என்பதைத் தான் பகவானின் வாழ்க்கை நிரூபணம் செய்கிறது. பகவான் ஞானம் அடைந்த பின் திரு அருணை வந்து சேருகிறார். அங்கு பாதாள லிங்கதின் அருகிலும் பிறகு பல இடங்களில் சுற்றித் திரிந்து பதினேழு வருஷங்கள் விரூபாக்ஷ குகையில் வசித்து விட்டு ஸ்கந்தாஸ்ரமத்திற்கு இடம் பெயருகிறார். விரூபாக்ஷ குகையில் இருக்கின்ற காலத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் சாமானிய ஜனங்கள் அவரை கண்டிருக்கிறார்கள். ஆனால் ஸ்கந்தாசிரமத்திற்கு சென்ற பிறகும் அதற்கு பின் ஐந்து வருட காலத்திற்குப் பின் மலையடிவாரத்திலுள்ள இன்றைய ரமணாசிரமத்திற்கு இடம் மாற்றம்  .ஆன பிற்பாடும் நிறைய
பக்தர்கள் மகிரிஷியை சென்று சந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் பகவான் எல்லோரையும் போல் ஆஹார விஹாராதி காரியங்களை செய்துகொண்டும் சமையல் முதற்கொண்டு எல்லா காரியங்களிலும் ஈடுபட்டுக்கொண்டும் இருந்ததாக கண்டிருக்கிறார்கள். . மிகவும் குறைவாகவே பேசினார் என்பதைத் தவிர வேறு வித்தியாசங்கள் யார் கண்ணுக்கும் தென்பட்டதில்லை.
பகவான் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி போல் இருந்தார். அவர் முன்னால் இருப்பவர் எந்த உண்ர்ச்சிகளை காண்பித்தார்களோ அதையே அவரும் பிரதிபலித்தார். அவர் கோபப்பட்டதே ஓரிரு முறை தான். அடுத்த நிமிடமே அவர் மீண்டும் சாதாரண நிலைக்கு வந்துவிடுவார். அவர் எந்த நிகழ்வாலும் பாதிக்கப்பட மாட்டார். அது தான் ஞானிகளின் லட்சண்மும்.
அந்த நிலையை அடைவதற்கு அத்வைதத்திலாகட்டும், துவைதத்திலாகட்டும் பக்தி ஒரு முக்கியமான சாதனையாகக் கூறப்பட்டுள்ளது.
ரமணர் ஒரு சுலபமான உதாரணம் கூறுவார். நான் யார் என்று அறிந்து கொள்வதற்கு நிறைய மார்க்கங்கள் உண்டு. அதில் விசார மார்க்கம் எனும் ஞான மார்க்கம்.,மற்றும் பக்தி மார்க்கம் மூலமாகவும் அந்த குறிக்கோளை அடையமுடியும்.

பகவான் சொல்வார், சென்னையிலிருக்கின்ற ஒருவர் பகவானை தரிசிக்க வேண்டும் என்று வழி கேட்டால் நாம் என்ன சொல்வோம்? சென்னையிலிருந்து திருவண்ணாமலக்கு ரயில் உண்டா? பஸ் வசதி எப்படி? எவ்வள்வு நேரமாகும்? என்ன செலவாகும்? திருவண்ணாமலை பஸ் அல்லது ரயில் நிலயத்திலிருந்து ஆசிரமம் எவ்வளவு தூரம்? எப்பொழுது ஆசிரமத்திற்கு சென்றால் மஹிரிஷியை தரிசிக்கலாம்? என்றெல்லாம் விள்க்கமாக சொல்வோம்.
அதே ஆள் திருவண்ணாமலை பஸ் நிலயத்தில்  நின்று கொண்டு அதே கேள்வியைக் கேட்டால் அந்த அளவுக்கு விளக்கம் தேவையில்லை.
ஒருவர் ஆசிரமத்திற்கே வந்து விட்டார்.அப்பொழுது இந்த கேள்வியைக் கேட்டால் பதில் இன்னும் சுருக்கமாகவும் வேறுவிதமாகவும் இருக்கும்.
அப்படித்தான் குறிக்கோள் ஒன்றாக இருந்தாலும் வழிகள் அவரவர் நிலைமைக்கு தகுந்த படி மாறுபடும்

ஞான மார்க்கம் எல்லோருக்கும் பொருந்தாது சிலர் யோக மர்க்கத்தை விரும்புவார்கள்.சிலருக்கு பக்தி மார்க்கம் தான் உகந்ததாக இருக்கும்.
.
பக்தி மார்க்கத்திலும் சிலர் சகுணாகார பக்தியை நாடுவார்கள்; சிலர் நிர்குண ஆராதனையில் ஈடுபடுவார்கள்.
ஆண்டாள் ,மீரா போன்றவர்கள் பிரேம பக்தியில் இடுபட்டார்கள். பகவானின் அக்ஷர மணமாலை கூட ஒரு விதமான பிரேம பக்தியின் வெளிப்பாடு தான்.
பிரேம பக்தி சாதாரணமாக சகுண பக்தி மார்க்கத்தை சார்ந்தே இருக்கின்றது. அதற்கு பகவத் கீதையிலுள்ள  கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று சுலோகஙள் ஆதாரமாக விளங்குகின்றன.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத !
அப்யுத்தான மதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் !!

பரித்ராணாய சாதுனாம் விநாசாய துஷ்க்ருதாம் !
தர்மஸ்ம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே !!

ஜன்ம கர்ம மே திவ்யமேவம் யோ வேத்தி  தத்வத: !
த்யக்த்வா  தேஹம் புனர்ஜனம நைதி மாமேதி ஸோர்ஜுனா !!
                     கீதை  அத்.4 சுலோ 7-9
எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் தர்மம் வலுவிழந்து அதருமம் அதிகரிக்கின்றதோ அங்கெல்லாம் அப்பொழுதெல்லாம் நான் ஏதோ ஒரு உயிரினத்தின் உருவத்தில் வருவேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

ஆனால் நம்மைப் போன்ற மானிடர்கள் அவர் மனித உருவில் வந்ததை சுவீகாரம் செய்து கொண்டு பிரேமையில் மூழ்கி விடுகிறோம்.

அப்படிப்பட்ட சாகார பிரம்மத்தை அடிப்படையாகக் கொண்டுதான் பிரேம பக்தி உருவாகிறது.

இங்கு ஒன்றை கூற வேண்டும்.. கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள பக்தி அறிவு பூர்வமான பக்தி. ஆனால் பிரேம பக்தி உணர்வு பூர்வமானது.

நம்முடைய எல்லா புலன்களும் இயங்கினால் தான் உணர்வு பூர்வமான ஒரு ஈடுபாடு ஆண்டவனிடம் உண்டாகும். புலன்கள் இயங்கவேண்டுமென்றால் அதற்கு குறியாக பொருள்களும் இருக்க வேண்டும். நாம் இஹலோக மாயா சுழற்ச்சியில் நின்றுகொண்டுதான் பிரேம பக்தியை கையாள முடியும்.
பிரேமையின் உயர் நிலையை அடையும் பொழுது மற்ற பொருள்கள் எல்லாம் மறைந்து விடும்.அந்த பரம் பொருள் ஒன்றுமட்டும்தான் கண்முன் நிற்கும். அப்பொழுது நாம் பூரண சரணாகதியாகிவிடுகிறோம். அங்கு ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாக லயித்து விடுகிறார்கள். அங்கு வேறு எதுவும் இருக்காது.
சரணாகதி தத்துவத்திலும் இரண்டு பிரிவுள்ளது.
குரங்குக்குட்டி எப்படி தன் தாயின் உடலை விடாமல் கவ்விப் பிடித்துக் கொள்கிறதோ அம்மாதிரி பகவானை கெட்டியாக பிடித்துக்கொள்வது ஒரு மார்க்கம்.
இதை  மர்கட ந்யாயா என்பார்கள்.  இதில் நமது (குரங்கு குட்டியின்) முயற்சி முக்கியம்.
இன்னொன்று பூனைக்குட்டி ஒன்றுமே செய்யாமல் தாய்ப் பூனை என்ன செய்கிறதோ செய்யட்டும் என்றுவாளாவிருந்து விடுவது. பொறுப்பைத் தாயிடம் விட்டு விட்டு கவலையில்லாமல் இருப்பது.
தாய்ப் பூனை குட்டியை வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு ஒரிடத்திலிருந்து இன்னொரிடத்திற்கு போகும். இதை மார்ஜார ந்யாயா என்பார்கள். இதில் ப்ரபத்திக்கு முக்கியமான இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

நாம் பகவானிடம் முழுவதுமாக நம்மை ஒப்படைத்து விடவேண்டும். அது தான் முக்திக்கு ஒரே வழி. இந்த வழி அறிவாளிகள்,கல்லாதவர்கள்,மூடர்கள் மேலோர் தாழ்ந்தோர் என்ற எந்த வேறுபாடுமில்லாமல் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வழியில் செல்கிறவர்களுக்கு ஞான மார்க்கத்தைப் பற்றியோ கர்ம மார்க்கத்தை பற்றியோ ஒன்றும் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
இந்த மார்க்கத்தில் எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை தான் பிரதானம்.  
இந்த மார்க்கத்தை பின்பற்றுப்வர்கள் கீதை இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது என்பார்கள்.அதற்க்கு மேற்கோளாக கீழ்கண்ட சுலோகத்தை சொல்வார்கள்.
மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மம் நமஸ்குரு !
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானேப்ரியோஸி மே !!
என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை வணங்கு,; என்னை நீ தானாகவே அடைவாய் நீ எனக்கு இனியவனாகிறாய்
மேலும் பகவான் கூறுகிறார்,
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ !
.அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச்: !!
 நீ உன் தர்மங்களையெல்லா விட்டு விட்டு என்னை சரண் அடை; நீ எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிக்கப் ப்படுவாய்.

ஜீவன் செய்கிற செயலெல்லாம் ஈசுவரன் செயலே. ஜீவனுக்கு என்று தனி செயல் சுதந்திரம் கிடையாது. கடைசியாக தன் செயல்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு இசுவரனிடம் அடைக்கலம் புகுவது,  தன் செயல் பலன் அளிக்காததால் ஈசுவரனின் உதவியை நாடி செய்யப்படுவதல்ல. அது பிச்சாய்கரன் பிச்சை கேட்பதைப் போன்றது. நாம் பிச்சைக் காரர்களுமல்ல்.பகவன் தருவது பிக்ஷையுமல்ல.நாம் செய்து வந்த செயல்களெல்லாம் நம் பிராரப்த கர்ம பலனாக செய்து வந்தவை. அநித்தியமான இந்த உலக த்திலுள்ள பொருள்களின் மீதுள்ள ஈடுபாட்டால் செய்யப்பட்டவை. அவையெல்லாம் அர்த்தமற்றவை  ஆகவே அவையெல்லாவற்றையும் உதறிவிட்டு பகவானிடம் அடைக்கலமாகிறோம். அப்படி சகல தர்மங்களையும் த்யஜித்து விட்டு என்னிடக் சரணடைக   என்று பகவான் சொல்கிறார். நமது இச்சா சுதந்திரமெல்லாம் ஈசுவர சங்கல்பத்தில் கலந்து விடுகிறது. நாம் நமது கடைமையை செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதில் ஈடுபாடு உண்டாகக் கூடாது. நல்லது கெட்டது எல்லாம் ஈசன் செயல் என்ற மனோபாவம் வளர வேண்டும். காரியங்கள் செய்ய்ய வேண்டும் ஆனால் கர்திருத்வ மனோபாவம்இருக்க கூடாது. இது தான் இந்த சுலோகத்தின் உள்ளர்த்தம்.

ஞானி,யோகி,பக்தன் மூவரும் கடைசியில் பகவானிடம் சரணாகதி அடையத் தான் செய்கிறார்கள்.
யோகி சத் சொரூபத்தில் லயமாகிறான்; ஞானி சித் சொரூபத்தில் லயமாகிறான்; பக்தன் ;ஆனந்த சொரூபத்தில் லயமாகிறான்.

அக்ஷர மணமாலையில் பகவான் பக்தி மார்க்கத்தைக் குறித்து பெரிதாக விளக்கவில்லையென்றாலும்  நாயகி நாயகனிடம் பிரேமையுடன் கேட்கின்ற வினாவின் தொனி நிறைய சுலோகங்களில் ஒலிக்கிறது. அந்த மாதிரி ஒரு சுலோகம்தான் இந்த சுலோகமும்.

.

No comments:

Post a Comment