Sunday 2 November 2014

ரமணஜோதி 8

நூறாண்டு காணும் அக்ஷர மணமாலை

அக்ஷரம் என்றால் க்ஷரமில்லாதது;அழிவு இல்லாதது..
மணமாலையின் நோக்கம் இரு ஆன்மாக்களை ஒன்று சேர்ப்பது ஆகும்.பகவான் ரமணர் இயற்றிய மணமாலையின் நோக்கம் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைப்பதற்காக என்று சொன்னால் தவறாகாது. இந்த மணமாலை அழிவில்லாதது.
அக்ஷரம் என்ற வார்த்தையின் மூலம் இந்த மணமாலைக்கு என்றுமே அழிவில்லை என்றும் உணர்த்தப்படுகிறது.
இன்னொரு விதத்தில் வியாக்கியானம் செய்தால் தமிழின் முதல் எழுத்தாம்  வையும் சம்ஸ்கிரதத்தின் கடைசி எழுத்தான க்ஷவையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு மணமாலை என்றும் சொல்லலாம்.
என்றும் நம்முடன் இருக்கும் சிரஞ்சீவியான பகவான் ரமணர் இயற்றிய மாலை என்றும் கொள்ளலாம்.
பகவான் இதை விரூபாக்ஷ குகையில் வசிக்கும் காலத்தில்.1914 ஆம் ஆண்டு இயற்றினார்.இந்த ஆண்டு  அக்ஷர மணமாலையின் நூறாவது ஆண்டு.
 இதை இயற்றுவதற்கு பகவான் முயற்சி எதுவும் எடுக்கவில்லை.
பகவானது பக்தர்கள் பகவானிடம் நாங்கள் பிட்சைக்கு பொகும்போது அல்லது கிரி வலம் போகும் போது பாடுவதற்கு ஏற்ற ஒரு பாமாலை இயற்றித் தரவேண்டும் என்று ஒரு நாள் கேட்டார்கள்.பகவான் உடனடியாகப் பதில் ஏதும் கூறவில்லை.தேவாரம்,திருவாசகம் போன்ற மிகச் சிறந்த பாமாலைகள் இருக்க பிறிதொன்று எதற்கு?என்று நினைத்தாரோ என்னவோ.!
பிறிதொரு நாள் கிரி வலம் சென்று கொண்டிருக்கும் பொழுது,திடீரென்று பகவான் மடை திறந்த வெள்ளம் போல் இந்த செய்யுள்களை சொல்ல ஆரம்பித்தார்.அன்பர் பழனிச்சாமி உடனையே எங்கிருந்தோ ஒரு பேப்பரும்  எழுதுகோலும் கொண்டுவந்து கொடுத்தார். இன்ப பெருவெள்ளம் போல் பகவானிடமிருந்து பாமாலைகள் வந்து விழுந்தன.
இந்த மணமாலையின் சிறப்புக்கள் சொல்லிலடங்கா. ஒரு சிலதை இங்கு குறிப்பிடுகிறேன்.
*      பக்தி மார்கமும் ஞானமார்கமும் ஒருங்கிணைந்து பாமாலைகளாக தரப்பட்டுள்ளன. இருமனம் கலந்தல் திருமணம் என்பதுபோல்.
*      ரமணரின் தனிவழியான நான் யார் மார்கமும் பாமரர்களுக்கு உதவும் சரணாகதி மார்க்கமும் ஒன்றுசேர மணமாலையாக உருவெடுத்திருக்கிறது.
*      இந்த நூல் இருவரிக் கண்ணிகளாக அமைந்துள்ளதால் சூத்திரம் போல் எளிதாக புரியும்படியும் பொருட்செறிவுள்ளதாகவும் இருக்கின்றன.
*      ஓங்காரத்தின் முதலெழுத்தாம் அகரத்தில் தொடங்கும் இந்த அக்ஷர மணமாலை எல்லா ஜீவராசிகளுக்கும் ஆதாரமான பரமாத்மாவை நினைவூட்டும் விதத்திலும் உள்ளது.
*      ஸ்ரீ கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் கூறுகிறார்-அக்ஷராணாம் அகாரோஸ்மி-அக்ஷரங்களில் நான் அகரமாயிருக்கிறேன்.அந்த முதன்மைத் தன்மையை நினைவூட்டும் விதத்தில் அக்ஷர மணமாலை என்ற பெயர் கொடுக்கப் பட்டுள்ளது.
*      பக்தியோடு ஓதும் பக்தர்களுக்கு சிவசாயூஜ்யம் என்ற முக்தி கிடைக்க பேருதவியாக இருக்கும் என்பதால் இது ஒரு மணம் பரப்பும் மாலை .
*      அக்ஷரங்களாலான மணம் பரப்பும் மாலை இது.
*      அருணாசலா என்று 108 முறை கூற வைக்கும் மாலையிது.
*      அழியாப் பொருளான ஞான மார்கத்தை போதிப்பதால் இது அக்ஷர மணமாலை
*      அக்ஷர மணமாலையில் பலப் பல பாவங்கள் வெளிப்படுகின்றன:
o       தாஸ்ய பாவம்.
கெஞ்சியும் வஞ்சியாய்  கொஞ்சமு மிரங்கிலை
யஞ்சலென் றேயரு ளருணாசலா                     (21)       
ஞமலியிற்  கேடா நானென் னுறுதியா
னாடிநின் னுறவே   னருணாசலா                    (39)       
பைங்கொடி யா நான் பற்றின்றி வாடாமற்
ப்ற்றுக்கோ டாய்க்கா  வருணசலா                    (72)

மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச வறிவனியான்  
வஞ்சி யாதருளெனை  யருணாசலா                  (78)       
மீகாம னில்லாமன் மாகாற் றலைகல
மாகாம்ற் காத்தரு     ளருணாசலா                  (79)
o       நட்புரிமை
ராப்பகலில்லாமல் வெறு வெளி வீட்டில்
ரமித்திடு வோம் வா வருணாசலா                   (91)

மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத்
தூக்கி அணைந்தருளருணாசலா.                      (81)

மலைமருந் திட நீ மலைத்திட வோஅருண்
மலைமருந்  தயொ ரருணாசலா                   . (76)


பீதியி லுனைச்சார் பீதியி லெனை சேர்
பீதி யுன் றனக்கே நருணாசலா?                      (67)

ரமணனென்  றுரையத்தேன் ரோசங் கொளாதெனை
ரமித்திடச் செய வா வருணாசலா                     (90)
o       நாயகா -நாயகி பாவம்
எனையழித் திப்போ எனைக்கலவவிடி
லிதுவோ வண்மை யருணாசலா                      (9)
கேளா தளிக்குமுன் கேடில் புகழைக்
கேடுசெய் யாதரு ளருணாசலா

ஏனிந்த வுறக்கமெனைப்பிற் ரிழுக்க
விதுங்க் கழகோ வருணாசலா                        (10)

ஆருக் காவெனை யண்டனை யகற்றிடி
லகிலம் பழித்திடு மருணாசலா                       (4)

o       வழக்காடுதல்
ஔவை போ லெனக்ககுன் னருளைத் தந்தெனை
யாளுவ  துன்கட னருணாசலா                       (14)

முடியடி காணா முடிவிடுத் தெனைநேர்
முடிவிடக் கடனிலை யருணாசலா                    (80)


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நாமெல்லோரும் படித்து இன்புறவேண்டும் என்பதே என் அவா.மேலும் அந்தந்த செய்யுளை விவரிக்கும் போது மேலும் பார்ப்போம்.


No comments:

Post a Comment