Wednesday 19 November 2014

றமணஜோதி 15

ஏனிந்த வுறக்கமெனப்பிற ரிழுக்க  
விதுவுனக் கழகோ வருணாசலா

நான் உன்னை நினைத்து கண்ணை மூடித் தியானிக்கும்போது நீ வந்து என்னை யாட்க்கொள்ளாவிட்டால் என் மனம் மற்றவர் இழுப்புக்கு சென்றுவிடாதோ? ஜீவான்மா பிரமனிடம் லயிக்காவிட்டால் மனம் இந்திரியங்களின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடும் அருணாசலா.
மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொல்கிறார்கள்?
சிவனந்த லஹரியில் ஆதி சங்கரர் கூறுகிறார். மனம் ஒரு குரங்கு;அது கிளைக்கு கிளைதாவும். ஒரு ஆசைக் குவியலிலிருந்து இன்னொரு ஆசைக் குவியலுக்கு த் தாவும்..அது மாயை எனும் காட்டுக்குள் சுற்றி வரவே விரும்பும்.
அவர் பரமசிவனிடம் இறைன்சுகிறார், இந்த மனக் குரங்கை என்னுடைய காணிக்கையாக ஏற்றுக்கொள். அதை பக்தி எனும் பாசக் கயிற்றால் நன்றாக் கட்டிவிடு.
பிரஹலாதன் நரசிமம முர்த்தியிடம் கூறுவான்,” இந்தமனக் கரடி இந்திரியங்களுக்கு பிடித்தமான போகப்பொருளிடம் தான் அன்பு செலுத்துகிறது.அந்த அன்பை உன்பால் திருப்பிவிடு.அடற்கு நீ என் இதயத்தை விட்டு அகலாமல் இருக்க வேண்டும்
மனமாகப் பட்டது போகப் பொருள்கன் மீது நாட்டங்கொண்டு அவைகள் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கும்..
அது விஷயானந்தத்திலேயே மூழ்கிக் கிடக்கும்..
நிழலை நிஜம் என்று நம்பி அதன் பின்னாலேயே போகும்.
இம்மாதிரி மற்றவர்கள் நம்மை கேலி பேசாமல் இருப்பதற்கு பகவான் ரமணர் உபதேச உந்தியாரில் சில வழி முறைகளை விவரிக்கிறார்.
அந்த ஸ்லோகங்களை பார்ப்பதற்கு முன் உபதேச உந்தியாரைக் குறித்து ஒரு சில வரிகள்.
உபதேச உந்தியார் , குரு வாசகக் கோவை, உள்ளது நாற்பது இந்த மூன்றும் தான் பகவான் ரமணரின் நூல்களில் முக்கியமானவை. உபதேச உந்தியார் 1927 ல் முருகனாரின் வேண்டுகோளிற்கு இணங்கி பகவானால் இயற்றப்பட்ட 30 சுலோகங்கள்..முருகனாரால் இயற்றப்பட்ட பல கடவுள்களின் லீலைகளில் சிவலீலைப் பகுதி வந்தபோது முருகனார் பகவான் ரமணரின் உபதேசங்களை விவரிக்க வேண்டும் என்று விரும்பினார்.அவர் பகவானிடம் அந்த சுலோகங்களை இயற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. அப்பொழுது பகவான் அருளிய உபதேச சுலோகங்கள் தமிழ் உந்தியார் மெட்டில் அமைந்தது
போன மடலில் முதல் மூன்று சுலோகங்களைப் பார்த்தோம்.
4-வது சுலோகத்திலிருந்து 7-வது சுலோகம்  வரை எப்படி நாம் ஜீவன்மாவை பரமாத்மாவில் ஒருங்கிணைப்பது என்பதை சொல்கிறார் பகவான்.
திடமிது பூசை செபமுந் தியான
முடல்வாக் குளத்தொழி லுந்தீபற
வுயர்வகு மொன்றிலொன் றுந்தீபற
                உ.உ 4
பூசை முதலிய சத்கர்மங்கள் செய்வது,ஜபம் செய்வது ,தியானம் செய்வது எல்லாமே உடல் ரீதியான கர்மங்களே.
இருந்தாலும் உடலால் செய்கின்ற பூஜையை விட மனதால் செய்கின்ற ஜபமும் ஜபத்தை விட உள்ளத்தால் செய்கின்ற தியானமும் மேலானது
ஆனால் அப்படி செய்ய்யும் போது நாம் எண்ணும் பொருளெல்லாம் ஈசனே என்று நினைத்து செய்ய வேண்டும் என்கிறர் பகவான் அடுத்த சுலோகத்தில் .

எண்ணுரு யாவு மிறையுரு வாமென்
வெண்ணி வழிபட லுந்தீபற
வீசனற் பூசனையுந்தீபற
உ.உ 5
ஏழவது சுலோகத்தில் பகவன் கூறுகிறார்-
இந்த தியானம் இடைவிடத நெய் வீழ்ச்சி போல் இருக்க வேண்டும்.விட்டு விட்டு செய்யும் தியானத்தால் பலனில்லை.இடைவெளி விட்டுவிட்டால் மனக்குரங்கு வாசனா விஷயங்களைத் தேடிப் போய்விடும். அது நமது சாதாரண உறக்கத்திற்கு சமானமாகும். உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் நமது இகலோக வாசனைகள் நம்மை பற்றிக்கொள்ளும்.

விட்டுக் கருதலி நாறுநெய் வீழ்ச்சிபோல்
விட்டிடா துன்னலே யுந்தீபற
விசேடமா முன்னவே யுந்தீபறா
              உ.உ.7

இந்தவிடத்தில் நமக்கொரு சந்தேகம் வரலாம்.நாம் ஈசனை இடை விடாமல் தியானம் செய்ய வேண்டும் என்று பகவான் கூறுவதன் மூலம் நாமும் ஈசனும் வெவ்வேறாகி விடுகிறோமல்லவா?இது அடிப்படையில் அத்வைத சித்தாந்தத் திற்கு எதிராக உள்ளதே..பகவான் நான் யார் என்ற விசார மார்க்கத்தின் மூலம் எல்லாமே பிரமம் தான். நம்மை விட்டு வேறொன்றில்லை என்றல்லவா கூறிவ்ந்திருக்கிறார்?
இந்த சந்தேகங்களுக்கு எட்டாவது சுலோகத்தில் பதில் கூறுகிறார் பகவான்.

அனியபா வத்தி னவனக மாகு
மனனிய பாவமே யுந்தீபற
வனைத்தினு முத்தம முந்தீபற
              உ.உ.8
நமது தியானம் ஈசன் என்ற ஒரு அன்னிய வஸ்துவில் நோக்கியல்லாமல் நான்  என்பதிலே உருக்கொண்டிருந்தால் நமது மனம் சுத்தமடையும்.
நான்” வேறு ஈசன் வேறு என்ற எண்ணம் இரட்டை(duality) மனோபாவத்தை உண்டு பண்ணுகிறது. இந்த அன்ய பாவம் ,அத்வைத சித்தாந்தத்திற்கு மாறானதாக இருக்கிறது.
நமது தியானம் இந்த அனன்ய” பாவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். என்கிறார் பகவான்.
அஹம் ப்ரமாஸ்மி என்ற அடிப்படையில்த் தான்  -நான் நானாகவே(self meditation) இருக்கவேண்டும். இதுவே உத்தமமான தியானம்.
எல்லாவிதமான யோக முறைகளுக்கும் குறிக்கோள் எப்படி நானை” அந்த பிரம்மத்தில் அடைக்கலமாக்கிறது என்பது தான்.அது இடை விடாத விசர மார்க்க்த்தின் மூலம் மட்டும் தான் இயலும்

 


No comments:

Post a Comment