Sunday 22 March 2015

ரமணஜோதி 101

ரமணஜோதி 101


சித்-ஜட பந்தன்


                முடியடி காணா முடிவிடுத் தனைநேர்
                     முடிவிடக் கடனிலை யருணாசலா
“நான் தான் இந்த சரீரம்” என்ற எனது மயக்கத்தை தீர்த்து, இந்த உடலுடன் என்னை கட்டிப்போட்டிருக்கும் அந்த முடிச்சை அவிழ்த்து அந்த பந்தனத்திலிருந்து விடுவித்த பிறகு தாய்க்கு சமானமான நீ என்னை ஆதியும் அந்தமும் இல்லாத அந்த பிரம்மத்துடன் இணைக்க மாட்டாயா? அது உன் கடைமை அல்லவா, அருணாசலா,?” என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
இந்த சுலோகத்தின் மூலம் பகவான் சொல்லுகின்ற கருத்துக்கள் மூன்று:
·         சித் எனப்படும் ஆன்மா பௌதீக சரீரத்துடன் தாதாத்மியம் அடையும் பொழுது நாம் அவித்யையால் மூடப்படுகிறோம்.
·         இந்த சித்-ஜட(உடல்)  முடிச்சை அந்த அருணசலனின் அருளோடு மட்டும் தான் அவிழ்க்க முடியும்.
·         அந்த பந்தம் அற்றுப் போன பிறகு அதே நிலையில் நிலைத்திருந்தால்-பந்தமற்ற  நிலையில்- தொடர்ந்திருந்தால் தான் நாம் பூரண முக்தியடைய முடியும்.அதற்கும் அருணாசலன் அருள் வேண்டும்.
‘முடிச்சு’ என்பது நமது லௌகீக வாழ்விலும் பல சதர்ப்பங்களில் பயன்படுகிறது. கௌமார பிரயத்தை அடைந்த ஒரு ஆண்மகனை யஞோபவீத தாரணம் மூலம் பிரம்மத்துடன் இணைக்கிறோம்.அது ஒரு விதமான முடிச்சு.
பிரம்மசரிய ஆசிரமத்திலிருந்து  கிரஹஸ்தாசிரமத்தில் பிரவேசிக்கும் ஆண் பெண்ணின் கழுத்தில் திருமங்கல்யம் என்ற சரடைக் கட்டி மூன்று முடிச்சு போடுகிறான். அவனும் அவளும் கைகளை இணைத்து பாணிக்கிரகணம் செய்துகொள்வது இன்னொரு முடிச்சு. அம்மி மிதித்து,அருந்ததி பார்த்து அக்னியை ஏழ்முறை வலம் வரும் சப்தபதி எனும் சடங்கை நடத்தி முடிக்கும் பொழுது அந்த ஆண்மகனும் கால்கட்டு போடப்பட்டவனாகிறான்.
ஹிந்து திருமணம் நிறைவேறுவது மணமகன் மணமகளின் கால் கட்டை விரலை பிடித்து ஒவ்வொரு அடிக்கும் ஒரு வாக்குறுதியை தந்து மண முடிச்சை உறுதிப் படுத்தும்பொழுது தான்.
ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்பொழுதும் கூறும் மந்திரங்களும் மிகவும் பொருள் பொதிந்தவை.
·         முதல் அடி எடுத்து வைக்கும்பொழுது மணமக்கள் உறுதி எடுத்துக்கொள்கிறார்கள்: நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு வளமான குடும்பத்தை அமைடுவோம்;அந்தக் குடும்பத்தின் மகிழிச்சிக்கும் வளைமைக்கும் உகந்த எல்லா செயல்களிலும் ஈடுபடுவோ,; அதற்கு குந்தகம் விளைவிக்கின்ற எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம்.
·         வளமான ஆரோக்கியமான பொதீக-லௌகீக வாழ்விற்கும் சுத்தமான மானசீக வளர்ச்சிக்கும்,முழுமையான ஆன்மீக வாழ்விற்கும் நாங்கள் வழி வகுப்போம்.
·         தர்மத்தின் அடிப்படையில் நாங்கள் வாழ்விற்கு வேண்டிய பொருள் ஈட்டுவோம் ( தர்மார்த்த காம மோக்ஷ என்ற ரிஷிவாக்கியத்தின் பொருள் இந்த மூன்று உறுதி மொழிகளில் உரைக்கப் பட்டுள்லது.0
·         நாங்காவது அடி எடுத்து வைக்கும் பொழுது அவர்கள் உற்தி மொழி எடுத்துக்கொள்கிறார்கள்: நாங்கள் ஒருமித்து நித்திய சாந்தி கிடைப்பதற்கும் ஞானம் அடைவதற்கும் ஒருவர் மீது மற்றவர் வைக்கும் அன்பும் நம்பிக்கையும் பழுதுபடாமல் இருப்பதற்கும் ஒருவர் மீது மதிப்பும் மரியாதையும் வைது வாழ்வோம்.
·         ஆரோக்கியமான,நாணயமான,தைரிய சாலிகளான சந்ததியை பெற்றெடுத்து வம்சத்தை வளர்ப்போம்.( இங்கு காமத்திற்கு இடமில்லை.”)
·         ஆறவது உறுதி மொழி மூலம் மன அடக்கம், இந்திரிய (புலன்) அடக்கம், ஆன்ம சாக்ஷாத்காரம் வேண்டி அவைகளின் மூலம் நீண்டகால சாந்தியுடனான மஇல்வாழ்க்கையை உறுதி கூறுகிறார்கள்.
·         ஏழாவது அடி எடுத்து வைக்கும்பொழுது அவர்கள் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் அன்புடன் வாழ்ந்து நல்ல் கணவன் மனைவியாகவும் நண்பர்களாகவும் வாழ்வோம் என்று சூளுரைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட லௌகீக முடிச்சுக்கள் எத்தனையோ நம் இஹலோக பந்தங்களை உறுதிப் படுத்துகின்றன.அம்மாதிரி அவிழ்க்கப் படக்கூடாத முடிச்சுக்கள் என்று சமூகம் அங்கீகரித்தும் இருக்கிறது.
இப்படிப்பட்ட அவிழ்க்க கூடாத முடிச்சுக்கள் மன சாந்தியை குலைக்காமல் இருக்க வேண்டுமென்றால், ஆரம்பத்தில்கூறிய சித்—ஜட முடிச்சை அவிழ்த்து சத் சித்-ஆனந்தத்தை அனுபவிக்க தயாராக வேண்டும்.
இந்தக்கருத்தை இன்னும் சற்று ஆழ்மாக விளக்குகிறார் பகவான் ரமணர் தன்னுடைய  ‘உள்ளது நாற்பது “ என்ற நூலில்.
                   சடவுடனா னென்னாது சச்சித் துதியா
                   துடலளவா நானொன் ற்திக்கு--- மிடையிலிது
                   சிச்சடக்கி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை
                   யிச்சமு சாரமன மெண்ணென்னே-விச்சை
                           உ.நா சுலோ 24
ஜடமான நமது உடல் “நான் தான் நான்” என்று கூற இயலாது. இந்த உடலிற்கு உயிர் கிடையாது.அதற்கு ஞானேந்திரியங்களையொ கர்மேந்திரியங்களையொ இயக்கவதற்கான சக்தி கிடையாது. நித்ய சத்திய பொருளான ஆன்மாவோ நிர்விகாரமும் சங்கல்பங்களும் இல்லாதது.ஆகவே அதுவும் “நான் தான் நான்” என்று கூற முடியாது. பிறகு நான் எனும் அஹந்தை எங்கிருந்து முளைக்கிறது.? பகவான் சொல்லுகிறார்  நித்தியமான நிர்விகாரமான,நிராகாரமான சித்திற்கும் உயிர்பெறாத ஜடத்திற்கும் நடுவில் இடைப்பட்ட நிலையில் ஒரு முடிச்சு விழுகிறது;அதை பகவான் சித்-ஜட கிரந்தி என்று கூறுகிறார்.இந்த முடிச்சு விழுந்தவுடன், நான் ,எனது,, பொன்ற அஹங்கார விகாரங்கள் உயிர்த்தெழுகின்றன. இந்த முடிச்சு விழக் காரணம் அவித்யை தான்.ஒருமுறை இந்த முடிச்சு விழுந்து விட்டால் ஜன்ம-ஜன்மாந்தரங்களுக்கும் அது தொடர்கிறது.உடல் மாறுகிறதே தவிர அந்த முடிச்சு அவிழ்வதில்லை.அந்த முடிச்சு அவிழாத வரை முக்தியும் கிடையாது.
ஸ்ரீ நாராயண குரு தேவன் மலையாளத்தில் “ சிஜ்ஜட சிந்தனம்” என்ற ஒரு நூல் எழுதியுள்ளார்.அதிலும் மேற்படி கருத்துக்களை எடுத்துரைக்கிறார். நாராயண குருதேவன் தனது நூலில் சித்திற்கும் ஜடத்திற்குமுள்ள தொடர்பை விவரித்து இந்த பிரபஞ்ச ரகசியத்தை விளக்குகிறார் இந்த நூலில்..குருதேவனும் பகவான் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவர் என்றும், அவர் பகவானை தரிசிக்க ஒரு முறை திருவண்ணாமலை ஆசிரமத்திற்கு வந்திருந்தார் என்றும் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து விட்டு கேரளம் திரும்பியவுடன்,” நான் முதன் முறையாக நடமாடும் ஜீவன் முக்தரை முதன் முறையாக தரிசித்தேன்,” என்று கூறினாரென்றும் முன்னொரு மடலில் எழுதியிருந்தேன்.
காண்பவன்,காணும் பொருள், தருமம்,தருமம் செய்பவன், விஷயத்தில் ஈடுபடுபவன்—விஷயி, விஷயம், புருஷன்,பிரகிருதி,சத்தியம் ,மாயை, சித் ஜடம் இப்படி எல்லாமே இரட்டையாக காணப்படுகிறது இந்த பிரபஞ்சத்தில்..
இந்த துவைத மனப்பாங்கை வெடிந்து விட்டால் நமக்கு முக்தி தான்.
அப்படிப்பட்ட முக்தியடைவதற்கு ஜடம் என்றால் என்ன? சித் என்றால் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
உருவாகி அழியும் எல்லாம் ஜடம்; அதாவது  பிறப்பும் இறப்பும் உள்ளதெல்லாம் ஜடம்.
பிறப்பு என்று ஒன்றில்லாததும்,என்றுமே அழியாததுமானது தான் சித்.
பிறப்பு,வளர்ச்சி,பழுதடைதல், நசித்தல் இவையெல்லாம் ஜடத்தின் குணங்கள்.
சுபாவத்தில் ஒருமாற்றமுமில்லாமல் காலாகாலமாக இருப்பது சித்.
இந்த இரண்டும் நாசமடையக்கூடிய ஒன்றும் நாசமேயில்லாத ஒன்றும் சேரும்பொழுது உருவாகிறது இந்த பிரபஞ்சம்.
மாற்றத்திற்கு ஆளாகாததும்,நாசமில்லாததுமான சித்தில் ஏற்படுகின்ற சூக்ஷ்மமான-அதி சூக்ஷ்மமான,ஜடத்தை அடிப்படையாகக்கொண்ட மெலிய சலனத்தால் ஒரு சூன்னியம்-வெட்டவெளி தோன்றுகிறது.
அது தான் ஆகாயம்.ஆனால் அதுவும் ஜடம் தான். அந்த வெட்டவெளியில் குடியிருந்து கொண்டு சித் எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாக நிலை கொள்கிறது. இதை நமது உபனிஷத்துகள் அவ்வ்யக்தம்-தெளிவில்லாதது என்று வருணித்துள்ளது. இந்த நிராகாரமான ஆகாயத்தில் இன்னும் வலுவுடைய ஸ்பந்தனம் உண்டாகும் பொழுது பிராணன் உருவெடுக்கிறது. பிராணன் உபனிஷத்துகளில் மஹானாத்மா என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.இதுவேதான் மஹத் தத்துவம்,ஹிரணியகர்பன்,ப்ரஜாபதி,சத்துவ புத்தி என்றெல்லாம் அழைக்கப் பட்டுள்ளது.இது ஜடத்தின் இரண்டாம் நிலை. இப்படி  உண்டாகின்ற ஸ்பந்தனத்தில் உருவாகின்றதால் அதற்கு சித்தின் சுபாவ மான போத குணம் உண்டாகிறது. இந்த பிராணன் மற்ற ஜடங்களின் மூலஸ்தானமாகிறது. ஜடத்தில் உண்டாகின்ற மாற்றங்களையெல்லாம் சித் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.பஞ்ச பூதங்களால் உருவான எல்லா ஜடவஸ்துக்களும் பிராணனிலிருந்து உருவாகிறது.
தனியொருவனை எடுத்துக்கொண்டால்,பிராணஸ்பந்தனம் கருவிலுள்ள சிசுவில் உளவாவதோடு ’ நான்; நான்; என்ற அஹங்காரமும், அஹங்காரத்திலிருந்து புத்தியும்,புத்தியிலிருந்து சங்கல்பங்களின் ஆலயமான மனதும்,மனதிலிருந்து ஞானேந்திரியங்களும், கடைசியாக ஸ்தூல ரூபமான பௌதிக சரீரமும் அந்த சரீரத்திலிருந்து வேர்படுத்த முடியாத இந்திரியங்களும் உருவாகின்றன. ஆக இவையெல்லாம் ஜட த்தின் பல விதமான உருவ வேறுபாடுகள் தான். இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழும்பொழுது சித் எனும் போதம் எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல், எந்த வித பாதிப்பிற்கும் உள்ளாகாமல் சாக்ஷியாய் நிலைகொள்கின்றது.
இதைத் தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் பதிமூன்றாம் அத்தியாயத்தில் இருபத்தியாறாம் சுலோகத்தில் கூறுகிறார்:
                   யாவத் ஸஞ்சாயதே கிஞ்சித்சத்வம் ஸ்தாவரஜங்கமம் !
                   க்ஷேத்ரக்ஷேத்ரஞ் ஸம்யோகாத் தத்வித்தி பரதர்ஷப !!
இந்த பிரபஞ்சத்தில் எந்தவொரு வஸ்து உருவாகியுள்ளதோ அவையெல்லாம் க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ச சேர்க்கையானால் உருவானது.எப்படி  சலனமற்ற சினிமாத்திரையில் முப்பரிமாணங்களுடைய மனிதர்களும் ஏற்றப்படுகிறார்களோ அதே போல் சித் எனும் ஆகாயத்தில் முக்குணமயமான ஜீவாத்மாக்களும் தோன்றுகிறார்கள்.திரை க்ஷேத்திரஞ்சன் என்றால், அதில் தோன்றும் காட்சிகள் எல்லாம் க்ஷேத்திரமே. க்ஷேத்திரங்கள் மறைநாலும் க்ஷேத்திரஞ்சனான திரை—சிதாகாசம் இருந்துகொண்டேயிருக்கிறது.
அதனால் குருதேவன் தன்னுடைய நூலின் முதல் சுலோகத்தில் கூறுகிறார்:
                   ஒருகோடிதிவாகரரொத்துயரும்-
                   படி பாரொடுனீரனலாதிகளும்
                   கெடுமாறு கிளர்ன்னுவருன்னிரு நின்-
                   வடிவன்னுமிருன்னு விளங்கீடணம்
கோடி சூரியர்கள் ஒன்று சேர்ந்து உதித்துவந்தால் எப்படி பூமி,நீர்,நெருப்பு,போன்ற பஞ்ச பூதங்களும்-பஞ்ச பூதங்களாலான ஜடப்பொருள்களும் அழிந்து மறைந்து போய், பளிச்செனத்தெரியும் உன் வடிவுடைய உருவம் மட்டும் என் உள்ளத்தில் நிறக நீ அருள வேண்டும் என்று வேண்டுகிறார். பகவான் ரமணர் சித் ஜட முடிச்சை அவிழ்த்து என்னை இகலொக பந்தங்களிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அருண்சலனனிடம் வேண்டுகிறாரோ அந்த வேண்டுதலின் எதிரொலி மேற்கண்ட குருதேவனின் சுலோகத்திலும் நாம் காண்கிறோம்.
இந்த சுலோகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு உண்மை என்னவென்றால், சித்திலிருந்து உளவாகின்ற ஸ்பந்தனம் மூலம்,சித்ஜட க்ரந்தி மூலம் ஜடப்பொருட்கள் சித்தின் பிரகாசத்தை மறைக்கிறது; அந்த முடிச்சவிழ்ந்து விட்டால்,--அவிழ்ந்தால் மட்டுமே-- நாம் சத் சிதானதம் காணமுடியும் என்றும் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்தக் கருத்தை கிதை ஏழாம் அத்தியாயத்தில் நாம் காணலாம்
                   நாஹம் பிரகாச: ஸர்வஸ்ய      யோகமாயாஸமாவ்ருத:--
                   மூடோயம் நாபிஜானாதி    லோகோ  மாமஜமவ்யயம்.
                     ப.கீ அத் 7 சுலோ 25
யோக மாயையினால் மூடப்பட்டுள்ள நான் எல்லோர் கண்களுக்கும் தென்படுவதில்லை;ஆகவே பிறப்பும் இறப்பும் இல்லாத என்னை இந்த மூட உலகம் அறிவதும் இல்லை. அவித்யை எனும் முடிச்சை அவிழ்த்து, மாயை எனும் திரையை விலக்கினால்த் தான் சுயம் பிரகாசிக்கின்ற சத்சிதானத்தத்தை காண முடியும் என்கிறார் பகவான்.
இதே கருத்தை கீதை அஞ்சாம் அத்தியாயத்திலும் வேறு விதத்தில் சொல்லப்பட்டுள்ளது:
                   அஞானேனாவ்ருதம் ஞானம்
                   தேன முஹ்யந்திஜந்தவ:
                     ப்.கீ.அத் 5 சுலோ 15
அறிவின்மை ஞானத்தை மறைக்கிறது;ஜீவாத்மாக்கள் ராக துவேஷ மோஹத்திற்கு உள்ளகிவிடுகிறார்கள்;துன்பப்படுகிறார்கள்.
அதே அத்தியாயத்தின் பதினாறாம் சுலோகத்தில் கிருஷ்ணர் கூறுகிறார்:
                   ஞானேன து ததக்ஞானம் யேஷாம் நாசிதமாத்மன:!
                   தேஷாமாதித்யவத்ஜ்ஞானம் ப்ரகாசயதி தத்பரம் !
எவனொருவன் ஆத்மஞானம் பெற்று சத்சிதானதத்தை காணுகிறானோ அவனது அஞ்ஞானம் அழிக்கப்படுகின்றது,.அப்பொழுது சித் கோடி சூரியன் உதித்தது போல் பிரகாசமாக காட்சியளிக்கிறது.
இதே பொருள்பட பகவான் ரமணர் உள்ளது நாற்பது கலிவெண்பா நூலில் 25ஆம் சுலோகத்தில் கூறுகிறார்:
உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு
முருப்பற்றி யுண்டுமிக வோங்கு—முருவிட்
டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு
முருவற்ற பேயகந்தை யோர்வாய்—கருவாம்.
அஹந்தை ஒரு பேய்; அது இந்த தேகம் தான் நான் எனும் மாயையை நம்முள் உளவாக்கி நம்மை ஏமாற்றுகிறது..அதற்கு உருவம் கிடையாது ;ஆகவே ஒரு பௌதிக உடலை பிடித்துக்கொண்டு அது தான் நான் என்னும் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி தானும் ஏமாறுகிறது; மற்றவர்களையும் ஏமாற்றுகிறது. ஆத்மா தான் பிறக்கிறது,இறக்கிறது எனும் அக்ஞான குட்டையில் நம்மை மூழ்கடித்து, இஹலோக சுங்களை அனுபவிக்கத் தூண்டுகிறது. அப்படி அவித்யயில் மூழ்கும்பொழுது உண்மையான ‘நான்’ யார் என்பதை மறந்துவிடுகிறது; மறைத்து விடுகிறது. ‘நான் யார்’ என்ற விசாரம் உண்டாகிவிட்டால் இந்தப் பேய் இந்த உடலை விட்டு ஓடிவிடும்; உண்மையான நான் நம் கண்களுக்கு தென்படும்.
“இந்த நிலையை அடைய அருள வேண்டும் அருணசலா” என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.





No comments:

Post a Comment