Wednesday 18 March 2015

ரமணஜோதி 94

ரமணஜோதி 94

மரணம்-----?



          பௌதிக மாமுடற் பற்றற்று நாளுமுன்
                   பவிசுகண் டுறவரு ளருணாசலா

பகவான் வேண்டுகிறார்: “ பௌதிக உடலுடனுள்ள பற்றை அறுத்து என்னை உன்னுடன் வைத்து உன் சான்னித்தியத்தை அனுபவிக்க அருள வெண்டும்,அருணாசலா !”
“பௌதிக உடல் தான் நான்” என்ற எண்ணம் உள்ள வரை பரமனின் சான்னித்தியத்தை நாம் உணர முடியாது. உடல் தானல்ல என்றும்,,தான் வேறு பரமன் வேறு அல்ல என்று புரிந்து  விட்டால்   நாளும் அருணாசலனின் அருள் மழையில் நனைந்து ஆத்ம சாக்ஷாத்காரத்தை அனுபவிக்கலாம்.
கடந்த சுலோகத்தில் பகவான் கூறினார், ‘பிறப்பும் இறப்பும் இல்லாத உன் உலகிற்கு என்னை அழைத்துக் கொண்டு போய்,உன் அருள் விளையாட்டை காண்பி ‘ என்று வேண்டினார்.
                                                            
அந்த சுலோகத்தினை விளக்க முற்பட்ட பொழுது நாம் ஒரு சந்தேகத்தைக் குறித்து பராமரிசித்தோம். இறப்பும் பிறப்பும் இல்லையென்றால் சஞ்சித கருமம் ,பிராரப்த கருமம், ஆகாமி கருமம் என்கின்ற சிந்தனைகளுக்கு பொருள் யாது என்பது தான் அது.
இந்த எதிர்மறையான இரு கருத்துக்களை எப்படி நாம் சமன் செய்யப் போகிறோம்?
இந்த குழப்பம் பகவத் கீதையிலும் எதிரொலிக்க காண்கிறோம்.பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் 18 ,19 சுலொகங்களை முதலில் பார்ப்போம்.
          அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: சரீரிண: !
     அனாசினோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத் !!
                             சுலோ 18
     யேனம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைனம் மன்யதே ஹதம் !
     உபௌ தௌ ந விஜானீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே !!
                                                          சுலோ 19
ஆத்மா நித்தியமானதாயும்,நாசமற்றதாயும் இருக்கின்றது. அதற்கு எந்த வரையறையும்- எல்லைக்கோடுகளும் இல்லை.ஆனால் அப்படிப்பட்ட ஆத்மா குடியேறுகின்ற உடல்களோ அழியும் தன்மையுடையதாய் இருக்கிறது.
கடலிலுள்ள நீர் எப்படி இடம் மாறும் பொழுது நதியாகவும் உரு மாறும்பொழுது பனிக்கட்டியாகவும் ஆகிறதோ அது போல் ஆத்மாவும் அது ஏற்றுக்கொள்ளுகின்ற உடலிற்கேற்ப உருவத்திலும் பெயரிலும் மாறுபடுகிறது.ஆனால் எல்லாமே நீர் தான்.குட்டையிலுள்ள நீர் ஆவியாகி மேகமாகி மழயாய் பொழிந்து நதிகளையும் மற்ற நீர்னிலைகளையும் நிரப்புகிறது.அது அழிவதில்லை. இந்த மாற்றங்களைப் போல் தான் ஆத்மாவிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது.நீரில் ஏற்படுகின்ற மாற்றங்களை நம் மனம் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் ஆத்மாவில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நம் மனதின் மொழிக்கு அப்பால்,சக்திக்கப்பால் உளதால் ஆத்மா அளப்பரியதாகிறது.
குட்டை, நீர் ஆவியானவுடன் வெற்றுத் திடலாக காணப்படுவது போல், வேனல்க் காலத்து வரண்ட நதி போல் நம் உடல்களுக்கு நாசம்,மரணம்,தகனம் முதலியன உண்டாகின்றன.

ஆத்மா யாரையும் கொலை செய்வதும் இல்லை;யாராலும் கொல்லப்படுவதும் இல்லை.
நம் செல்வங்கள் அழிந்தால் நாம் அழிவதில்லை; நம் சொந்த-பந்தங்கள் நம்மை விட்டுப் போனால் நாம் இல்லாதாவதும் இல்லை. ஆழிந்து போகிறோம் என்ற நினைப்புமமாகாராம்’ ‘அஹந்தையிலிருந்து உண்டாகின்றது.
அதே அத்தியாயத்தில் 20 வது சுலோகத்தில் இதை மேலும் விளக்குகிறார் பகவான் கிருஷ்ணர்.

 ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்
              நாயம் பூத்வா பவிதா வா ந பூயா: !
          அஜோ நித்ய: சாஸ்வதோ அயம் புராணோ
              ந ஹன்யதே ஹன்யமானே சரீரே !!
                        சுலோ 20
          
இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை,இறப்பதுமில்லை.இது  ஒரு போதும் இல்லாமலிருந்ததில்லை;ஆகவே பிறக்க இயலாதது. ஒருபோதும் இருந்து இறந்து போவது மில்லை.ஆத்மா இறவாதது, பிறவாதது, தேயாதது, வளராதது..இறப்பதும் பிறப்பதுமானது தேஹம் தான்.தேஹம் காயப்படும் பொழுது ஆத்மா கயப்படுவது மில்லை;தேஹம் அழியும்பொழுது ஆத்மா அழிவதுமில்லை.
இதே பதில்கள் கடோபனிஷத்தில் நசிகேதசின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்பொழுது யம்தர்ம ராஜனும் கூறியுள்ளான்.
கடோபனிஷத்தின்  பின்புலம்
இந்த கதை வேதங்களில் தைத்திரிய ப்ரம்மாண பகுதியில் வருகிறது. வாஜஸ்ரவஸ கௌதமர் ஸர்வ மேதம் அல்லது ஸர்வ த்க்ஷிணா எனும் யாகம் செய்து தன்னிடமுள்ள சர்வ சம்பத்தை தானம் கொடுத்தார். இந்த யாகத்தின் நியதிப்படி அதன் கர்த்தா தன்னிடமுள்ள எல்லா சம்பத்துக்களையும் தானம் செய்ய வேண்டும்.ஆனால் கௌதமரோ தனக்கு உபயோக மில்லாதா கறவை  நின்று போன பசுக்கள் போன்று தனக்கு தேவையில்லாத எல்லாவற்றையும் தானம் செய்தார்.
வாஜ ஸ்ரவஸ் என்ற பெயரே அர்த்தவத்தானது. வாஜம் என்றல் அன்னம்.உணவு.. ஸ்ரவஸ் என்றால் கீர்த்தி.அன்னதானத்தால் கீர்த்தியடைந்தவன். அப்படிப்பட்ட கௌதமர் கறவை நின்று போன பசுக்களையும்,உற்பத்தி திறன் அற்ற பசுக்களையும் தானமாக கொடுப்பதைக் கண்டு நசிகேதசுக்கு கவலையுண்டாயிற்று. ஏனென்றால் இப்படிப்பட்ட தானங்கள் செய்பவர்கள் ஆனந்தமில்லாத உலகத்தை அடைவார்கள் என்று அவன் அறிந்திருந்தான்.
நாமெல்லாம் காசிக்கு சென்று திரும்பொழுது இஹலோக சுகங்களெல்லாவற்றையும் தியாகம் செய்து வானபிரஸ்தம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நியதி.ஆனால் நாளடைவில் பிடித்த ஏதோ ஒன்றை தியாகம் செய்தால் போதும் என்று யாரோ சொல்ல அதுவும் மருவி ஏதோ ஒரு காய்கனி உண்பதை விட்டால் போதும் என்றாகி இன்று பலரும் தங்களுக்கு பிடிக்காத ஒன்றை விட்டுவிட்டு காசி யாத்திரையை “வெற்றிகரமாக ” முடித்துக்கொள்:கிறார்கள்.
அதை அன்றே கௌதமர் செய்தார்.
இதைக்கண்டதும் அவரது மகனான நசிகேதசுக்கு பொறுக்கவில்லை. முதலாவதாக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விடுவதற்கு பதிலாக தனக்கு உபயோகமில்லாத பொருட்களை மட்டும் தானம் செய்யும் தந்தையின் தவறைக்கண்டு வெகுண்டு எழுந்தான்.
மேலும் ‘எல்லாவற்றையும்” (சர்வ) என்றால் புத்திரர்களும் அதில்ப்படும். ஆனால் தன்னை யாருக்கும் தானம் கொடூக்க தந்தை முயலவில்லை என்பது அவனுக்கு மேலும் கோபத்தை மூட்டியது..
ஆகவே தந்தையை நோக்கி அவன் கேட்டான்:” தாங்கள் செய்கின்ற சர்வ தக்ஷிண யாகம் தங்களுக்கு சர்வ ஐஸ்வரியங்களையும் நல்கட்டும். ஆனால் என்னை யாருக்கு தானம் கொடுக்கப் போகிறீர்கள்?”
கௌதமர் செய்வது வேதங்களும் ஸ்ம்ரிதி ஸ்ருதிகளும் சொல்லுகின்றது போல் அல்லாமல்,வெறும்  அர்த்தமில்லாத பொள்ளையான ஆன்மீக செயலாகப்பட்டது நசிகேதனுக்கு.
அவனுடைய கேள்விக்கு கௌதமர் பதிலளிக்கவில்லை.நசிகேதன் இரண்டாவது முறையும் கேட்டான் பதிலில்லை.கௌதமருக்கு கோபம் ஏறிக்கொண்டே போயிற்று. மூன்றாவது முறை நசிகேதச் அதே கேள்வியை கேட்ட பொழுது,அவர் அலறினார்:”” ஊன்னை யமனுக்கு கொடுக்கப் போகிறேன்.”ஏன்று.
அடுத்த நிமிடமே தந்தைக்கு தன் தவறு புரிந்தது.”கோபத்தில் என்ன சொல்லிவிட்டேன்? இதை எப்படி சரி செய்வது?” என்று யோசிக்கலானார் கௌதமர்.
தனயனோ நாம் அப்படி என்ன மட்டமாக போய்விட்டோம்;எல்லா சீடர்களையும் விட உத்தமனான தன்னை யமனுக்கு தானம் செய்வது மூலம் தந்தைக்கு  என்ன நன்மை வந்து விடப் போகிறது? தந்தை கோபத்தில் அப்படி கூறிவிட்டார் என்று அவனுக்கு புரிந்தது.தந்தையின் முகத்தைப் பார்த்த அவனுக்கு இன்னொண்றும் புரிந்தது; தந்தை சொன்ன சொல்லை திரும்ப பெறும் எண்ணத்திலுள்ளார் என்று புரிந்தது.
தந்தையிடம் சென்று, “ என்னருமை தந்தையே, சற்றே சிந்தித்து பாருங்கள். நம் முன்னோர்கள் உண்மையை கூறி பெயரும் புகழும் அடைந்துள்ளார்கள்.நீங்களும் அப்படியே இது வரை வாழ்ந்து விட்டீர்கள். உண்மைக்கு விபரீதமாக கர்மங்கள் செய்பவர்கள் மற்ற செடிகொடிகள் போல் ‘ மரணம்,மீண்டும் ஜநனம்,மீண்டும் மரணம்,மீண்டும் ஜனனம் ‘ என்ற சுழலில் சிக்கி மீளாத துயரத்திற்கு ஆளாவார்கள்.அந்த நிலைமைதங்களுக்கு வர வேண்டாம் நீங்கள் சொன்ன சொல் உண்மையாகட்டும்; என்னை யமனிடமே அனுப்பி வையுங்கள்” என்றான்....
இப்படியாக நசிகேதஸ் யமபுரியை வந்தடைந்தான். அவன் வந்த நேரம் யமராஜன் பிரம்ம புரிக்கு சென்றிருந்ததால் நசிகேதஸ் காத்திருக்க வேண்டியதாயிற்று. மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் கழிந்தன. நசிகேதஸ் தண்ணீர் கூட அருந்தாமல் யமராஜனுக்காக காத்திருந்தான் யமராஜன் வந்தான். நிலைமையை கண்டான். துணுக்குற்றான்.
தன் வீட்டிற்கு வந்த ஒரு அதிதி( விருந்தாளி) பட்டினியாக மூன்று நாட்கள் இருந்திருக்கிறான் என்றறிந்ததும் அவனுக்கு மிகவும் கவலையாயிற்று.
அதிதி என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு திதி குறிப்பிடால் வந்துள்ள விருந்தாளி என்று பொருள். திதி என்பது உருமாறி தியதி என்று சொல்லப் படுகிறது. இன்றைய காலகட்டத்தில் அழைபபிதழ் இல்லாமல் திருமணங்களுக்கு செல்பவர்களுக்கு எல்லோரும் உணவருந்திய பிறகு தான் ஏதேனும் மிச்சம் மீதியிருந்தால் உணவு கிடைக்கும்.ஆனால் நமது முன்னோர்கள் அப்படி அழைப்பில்லாமல் வருபவர்கள் வைசுவானர அக்னியால் அவதிப்படுகின்ற ஒருவனாகத்தான் இருக்க வேண்டும்;அவனுக்கு உணவு கொடுக்கா விட்டால் அந்த குடும்பமே நாசமடைந்து விடும் என்று நம்பினார்கள்.ஆகவே அப்ப்டி வருகின்ற அதிதிகளுக்கு முன்னுரிமையளித்தார்கள்.
இந்த பண்பாட்டுச் சிறப்பை கடோபனிஷத்திலுள்ள கீழ்க்கண்ட மந்திரம் எடுத்துரைக்கின்றது:
          வைசுவாநர: ப்ரவிசத்யதிதிர் ப்ராமணோ க்ரிஹான்
தஸ்யதாம் சாந்திம் குர்வந்தி ஹர வைவஸ்வோததகம்
கடோபனிஷத் சுலோ. 7
எட்டாம் சுலோகத்தில் அதிதியை கவனிக்காமல் இருந்தால் என்னாகும் என்பதும் இன்னும் தெளிவாக வீளக்குகிறார்கள் நம் முன்னோர்கள்.
          திஸ்ரோ ராத்ரீர்யதவால்ஸீர்க்ரிஹே மே-
     அன்ஸ்னன் ப்ர்மன்னதிதிர்ணமஸ்ய:
     நம்ஸ்தே அஸ்து ப்ரமன் ஸ்வஸ்தி மே அஸ்து
     தஸ்மாத் ப்ரதி த்ரின் வரான் வ்ரிணீஷ்வ.
         
:ஆகவே யமராஜன் நசிகேதசுக்கு வணக்கம் கூறி  அதிதியொருவன் தன் வீட்டில்  மூன்று தினங்கள் பட்டினியாக இருக்கவேண்டி வந்ததற்கு மன்னிப்பு கேட்டு அந்த பாபத்திலிருந்து தான்னைக் காப்பாற்றுமாறு வேண்டினான் என்கிறது கடோபனிஷத்.
யமதர்ம ராஜபன் “மேலும் தாங்கள் என் விட்டில் ஆஹராதிகள் இல்லாமல் கழித்த ஒவ்வொரு நாளுக்கும் ஒரு  வரம் என்ற முறையில் நான் தங்களுக்கு மூன்று வரங்கள் தருகிறேன் எங்கிறான்.அதை. ஏற்றுக்கொண்டு என்னை இந்த பாபத்திலிருந்து விடுவிப்பீராக “ என்கிறான்
அத்ற்கிணங்கி நசிகேதச் கேட்ட வரங்களும் அதை தொடர்ந்து உண்டான விவாதமும் தான் கடோபனிஷத்.

அந்த விவாதத்தை அடுத்த மடலில் பார்ப்போம்.

No comments:

Post a Comment