Wednesday 11 February 2015

ரமணஜோதி 67

ரமணஜோதி 67

மோக்ஷ மார்க்கம்

சென்ற மடலில் தோஷமில்லா ஈசனுடன் ஐக்கியமானால் நமக்கு நிரந்தர சந்தோஷம் கிடைக்கும் என்றும் அதற்கு பல தடங்கல்கள் உண்டென்றும் அவையெல்லாம் விஷய வாசனைகளாலும் ஜன்ம ஜ்ன்மாந்தரங்களாக நாம் சேர்த்து வைத்துள்ள சம்ஸ்காரம்  காரணமாக உளவாகின்றன என்றும் பார்த்தோம்.அந்த தடங்கல்களை உடைத்து ஈசனை அடைய ஒரே வழி  ‘நான் யார்” என்ற விசார மார்க்கம் மூலம் நிர்குணனான.,நிர்விசேஷனான சர்வ வ்யாபியான,எல்லா உயிரிலும் ஆன்மாவிலும் இருக்கின்ற பிரம்மத்தை அறிவது தான் என்றும் தெரிந்து கொண்டோம்.அதில் காரிய சித்தி அடைய நிஷ்காமிய கர்மங்கள் செய்வது தான் ஒரே வழி என்றும்  அந்தக் கர்ம பலன்களை அந்த ஈசனுக்கே அர்ப்பணித்து விட வேண்டுமென்றும் கண்டோம். பூஜை, ஜப தபங்களாலும் இசுவர சாக்ஷாத்காரம் அடைய முடியும் என்றும் மனதால் செய்கின்ற பக்தியை விட, வாக்கால் சொல்லுகின்ற நல்வார்த்தைகளுக்கு பயன் அதிகம் என்றும் அதை விட மேலானது நற்கர்மங்கள் என்று ஆதார பூர்வமாக கண்டோம். அதற்கு மேற்கோளாக பகவான் ரமணரின் உபதேச உந்தியாரிலிருந்து ஒன்றிரண்டு சுலோகங்களையும் பார்த்தோம்.
உபதேச உந்தியாரில் பகவான் மேலும் சொல்லுகிறார்:
          எண்ணுரு யாவு மிறையுரு வாமென
                   வெண்ணி வழிபடலுந்தீபற
                   வீசனற் பூசனை யுந்தீபற
எண்ணுரு யாவும் இறை உரு வே என்று வழிப்அட்டால் அது நல் வழிபாடே என்று பகவான் கூறுகீறார்.
எண்ணுரு என்பது யாது?
ஒரு அர்த்தத்தில் பார்த்தால் நாம் எந்த உருவில் ஈசனை நினைத்து வழிபட்டாலும் அது நல் வழிபாடே. பல நாமங்கள், பல உருவங்கள் எல்லாம் மனிதரால் கற்பிக்கப்பட்டவையே; அதில் எந்த அர்த்தமும் இல்லை; நல்ல எண்ணத்துடன் அதாவது நிஷ்காமியமாக சுய லாபத்திற்காக இல்லாமல் இசுவர வழிபாட்டில் ஈடுபட்டால் அது நல்வழிபாடே என்று பகவான் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
இன்னொரு கோணத்தில் சிந்தித்தால், எண்ணுருவம் என்பது, பூமி, ஆகாயம், நீர், நெருப்பு, வாயு, பிரபஞ்ச வெளி  சூரியன், சந்திரன் என்கின்ற எட்டு சக்திகளை குறிப்பதாகவும் காணலாம். இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா சராசரங்களும் இந்த  எண்சக்திகளால் உருவானது என்பது நினைவில் கொள்ளவேண்டியது ஒன்றாகும்.
மற்ற பிரபஞ்ச சிருஷ்டிகளை பூசிப்பது-- சேவை செய்வதே--- நல் வழிபாடு என்று கூறுவதாக கொள்ளலாம். இந்த இடத்தி கீதையில் யஞசங்கல்பம் குறித்த நமது முன் வியாக்கியானம் நினைவில் கொள்ளவும்.
சூரிய-சந்திரர்களை கண்களாகவும் ஆகாயத்தை உடலாகவும் பிருத்வியை (பூமியை) பாதங்களாகவும் கொண்டுள்ள அந்த வைசுவா நரனில் ஜ்டராக்னி எப்பொழுதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டேயிருக்கிறது.அந்த ஹோமாக்னிக்கு ஹோம திரவியங்களை ஆர்ப்பித்துக் கொண்டேயிருக்காவிட்டால்  அது நம்மையெல்லாம் தஹித்து விடும். இது எது போல் என்றால் நம்முள்ளே தகனத்திற்காக பல விதமான திரவங்கள் உற்பத்தியாகி கொண்டேயிருக்கின்றன. நாம் உண்ணும் அன்னத்தை அவை புசித்து,பஜித்து,பகுத்து,உருமாற்றி தாதுக்களாகவும்,இரத்தமாகவும்,நாடி  நரம்புகளாகவும் மாற்றி நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.அவைக்கு வேண்டிய பொழுது வேண்டிய அளவில் உணவை அளிக்காவிட்டால் அவை நமது குடல்களின் உணவு குழாய்களின்,ஈரல்களின் ஏன் இதயத்தின்,பாதுகாப்பு சுவர்களை அரித்து நம்மை பலவீனப்படுத்தி பெரும் கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் உள்ளாக்கும்.அதே போல் பிரபஞ்சத்திலுள்ள சகல் சிருஷ்டிகளுக்கும் வேண்டிய போது வேண்டிய உணவு படைக்கப் படாவிட்டால்,வைசுவானரனின் ஜடராக்னி இந்த பிரபஞ்சத்தையே எரித்துவிடும்.அப்படி உணவு படைப்பதுதான் சிறந்த தேவ ய்ஞ்மாகக் கருதப்படும் என்று கீதை சொல்லுகிறது என்று முன்பு கண்டோம்.
இதைத் தான் மஹாகவி பாரதி கூறினானோ என்னவோ?
          தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை     அழித்திடுவோம்மா நிலம் சேவடியாக,தூனீர்
     வளைனரல் பௌவம் உடுக்கையாக
     விசும்பு மெய்யாகத் திசை கையாகப்
   பசுங்கடர் மதியமொடு சுடர் கண்ணாக
   இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
       வேத முதல்வன் என்ப,
        தீது அற விளங்கிய திகிரியோனே
இதே கருத்தை நாம் சங்க இலக்கியங்களிலும் காணலாம்
     
                நற்றிணை—பெருந்தேவனார்
பரமாத்மாவிற்கு உலகங்கள் அனைத்தும் திருவடிகள் (பூமியே பாதங்கள் ) சங்குகள் நிறைந்த கடல்களே ஆடைகள், ஆகாயமே உடல், திசைகளே கைகள்,, ஞாயிறும் திங்களுமே கண்கள், பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களிலும் இறைவன் உறைந்து கிடக்கிறான், இயன்ற எல்லாம் பயின்று நிற்கிறான்.இது தான் “அந்தர்யாமி” தத்துவம்,,அதுவே வைசுவானர தத்துவம்.
இதே கரணத்தினால் தான் நமது முன்னோர்கள் அதிதி தேவோ பவ: என்று கூறினார்கள். அதிதி  என்றால் ஆங்கிலத்தில் நாம் கூறும் ‘ கெஸ்ட்’ ( guest )
அlல்ல. “திதி” தெருவிக்காமல் வருகின்றவன் அதிதி. நாம் அழைத்து  வருபவர்கள் பசியோடு வருவதில்லை. முன் காலங்களில் அழையாமல் வருபவர்களுக்கு முதலில் உணவு அளித்தார்கள்.அழைப்பை ஏற்று வருபவர்களுக்கு பிறகுதான் உணவளிப்பார்கள். ஏனென்றால் அழையாமல் உணவு தேடி வருபவருள்ளில் வைசுவானர அக்னி எரிந்துகொண்டிருக்கிறது. அந்த அக்னிக்கு ஹோம திரவியங்கள் அர்ப்பிப்பதே சிறந்த யக்ஞமாகும். அதுவே முக்திக்கு வழி.
மற்ற வழிகள் தவறு என்று அர்த்தம் கொள்ள வேண்டாம்.
பகவான் ரமணர் உபதேசவுந்தியாரில் கூறுகிறார்:
          வழுத்தலில் வாக்குச்ச வாய்க்குட் செபத்தில்
               விழுப்பமா மானத முந்தீபற
                   விளம்புந் தியானமி துந்தீபற
கடவுளை வாழ்த்துவதை---துதித்து பாடுவதை----விட ஜபங்கள் செய்வது மேலான வழி தான்;உரக்க வாய்விட்டு---ஜபம் செய்வதை விட மனதினுள் பகவானை தியானிப்பது மேலானது;
அப்படி தியானிக்கும்போது இடையே உண்டாகும் தடைகளினால் விட்டு விட்டு ஜபம் செய்வது அவ்வளவு பலனளிக்காது.நெய்யை ஒரு பத்திரத்திலிருந்து ஹோமகுண்டத்தில் தாரை வார்க்கும் பொழுது எப்படி தாரை முறியாமல் விடுகிறோமோ அது போல் இடை விடாமல் தியானிக்க வேண்டும் எங்கிறார் பகவான் அடுத்த சுலோகத்தில்:
          விட்டுக் கருதலி னாறுநெய் வீழ்ச்சிபோல்
          விட்டிடாதுன்னைலே யுந்தீபற
          விசேடமா  முன்னவே யுந்தீபற
அப்படி ஜபிக்கும் போது தான் வேறு பரமன் வேறு என்ற அன்னிய பாவத்துடன் ஜபிப்பது அவ்வளவு சிலாக்கியமானதல்ல; தானும் அவனும் வேறல்ல என்ற அனன்ய பாவய்த்துடன் தியானிப்பதே சாலச்சிறந்தது என்று பகவான் கூறுகிறார். சுத்த சைதன்யமான பரமன் எல்லோருள்ளிலும் பிரகாசித்துக் கொண்டேயிருக்கிறான்;அவனை காண்பதற்கு வேறு உதவியெதுவும் வேண்டியதில்லை என்ற திட நம்பிக்கையுடன் தியானித்தால் ஆத்ம சாக்ஷாத்காரம் எளிதில் கிடைத்து விடும் என்கிறார் பகவான்.மற்ற பொருள்களை காண்பதற்கு விளக்கின் உதவி வேண்டும். எப்பொழுதும் நம்முள்ளே ஒளிர்ந்துகொண்டிருக்கும் அந்த விளக்கை காண்பதற்கு இன்னொரு விளக்கு வேண்டுமோ? நமது மனஉறுதி போதுமல்லவா?
          அனியபா வத்தி நவனக மாகு
          மனனிய பாவமே யுந்தீபற\
          வனைத்தினு முத்தம முந்தீபற
நானே கடவுள் என்ற அஹந்தை வேண்டும் என்று பகவான் குறிப்பிடவில்லை;’அவனகமாகும்” என்ற சொற்றொடர் மூலம் ‘ஒன்றற வேறில்லை” என்ற தத்துவத்தை அடிக்கோடிட்டு காண்ப்பிக்கிறார். ஆகவே நீ உன் மனதை உள் நோக்கி திருப்பு எங்கிறார் பகவான்.
இதே கருத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையும் வேறு ஒரு விதத்தில் அழகாகக் கூறியிருக்கிறார் பாருங்கள்:
          ஒரு நாளைக் கொருதரம்
                   ஒரு நொடிப் பொழுதேனும்
          உன்னைப் படைத்தவனை
                   எண்ணி சுகித்ததுண்டோ? மனமே
          திருனாளும் தேருமென்று தேடி யலைந்தல்ல
          சிந்தனை அலையாமல் தியானத்தில் நிறுத்தியே (ஒரு)
          விடியுமுன் விழித்தனை
               வெளுக்குமுன் வீட்டை விட்டாய்
          வெவ்வேறாம் இடத்துக்கு
                   வௌவால்போல் ஓட்டமிட்டாய்
          உடலும் மனமும் சோர்ந்து
                   ஓய்ந்திட வீடுவந்தும்
     உண்ணும் பொழுதுங்கூட
                   எண்ணம் நிலைப்பதில்லை
          அரைக்காசுக் கானாலும்
                   ஒருனாள் முழுதுங்காப்பாய்
          ஆயிரம் பேரையேனும்
                   அலுப்பின்றிப் போய்ப்பார்ப்பாய்
          உரைப்பார் உரைகட்கெல்லாம்
                   உயர்ந்திடும் செல்வனை
          உன்னுள் இருப்பவனை
                   எண்ணிட நேரமில்லை!



          ------------------------------------------------------------------
         


No comments:

Post a Comment