Wednesday 11 February 2015

ரமணஜோதி 68

ரமணஜோதி 68

சரணாகதி

நகைக்கிட மிலைநின் னாடிய வெனையரு
கையிட்டுப் பார்நீ யருணாசலா
“ அருணாசலா,நான் உன்னை நம்பி வந்துள்ளேன்.என்னைப் பார்த்து நகைக்காமல் ஏற்றுக்கொள் அருணாசலா. என்னிடம் நகை ஏதுமில்லை.உன் அருள் ஒன்று மட்டும் தான் என் ஆபரணம்.அதை எனக்கருளி என்னை அனுக்கிரகிக்க வேண்டும் அருணாசலா” என்று பகவான் நம் சார்பில் பிரார்த்திக்கிறார்.
நாயகியிடம் என்ன குறை இருந்தாலும் அருணாசலனின் அருள் கிடைத்துவிட்டால் குறைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
பக்தியில் நாம் முன் ஒரு மடலில் கூறியது போல் மாதுரிய பக்தி,வாத்சலிய பக்தி எனும் இரண்டு உண்டு. மேலே கூறியது   நாயகி-நாயக பாவத்தின் ஒரு பிரதிபலிப்பே.
நாயிகீ நாயக் உறவில் ஒருவருக்கு மற்றவர் மீது அசாதரணமான உரிமை தென்படும்.
அதே போல் வாத்சல்ய பக்தியிலும் மிகுந்த உரிமை தென்படும்.இதற்கு உதாரணமாக ஸ்ரீ நாராயண குரு தேவனின் “ஜனனீ. நவரத்னமஞ்சரி”யை எடுத்துக்கொள்ளலாம் அந்த நூல் முழுவதும் மாத்ரு வாத்சல்யம் தளும்பி நிற்கும்.
நாராயண குரு தேவன் பகவான் ரமணர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.சமுதாய சீர்திருத்த வாதியாக ஆரம்பகாலங்களில் உருவானவர்,காலப்போக்கில் ஆன்மீகத்தில் மூழ்கி அத்துவதைத்தின் சிறந்த மார்க்கதரிசியாக மாறினவர்.ஏராளமான ஆன்மீக நூல்கள் நல்ல மலயாளத்தில் எழுதியவர்.
நாராயண குருதேவன் மாகவி தாகூர்,மஹாத்மா காந்தி போன்றவரால் சமூஹ சீர்திருத்தத்திற்குள் ஈர்க்கப்பட்டவர். அவர் ஆன்மீகத்திற்குள் வந்த பிறகு அவர் துவக்கிவைத்த ஜாதி சமுதாய இயக்கங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தர்ம பரிபாலனத்தில் முழு கவனம் செலுத்தலானார். ஒரு முறை ரமணாசிரமத்திற்கு பகவான் ரமணரை தரிசிக்க வந்தார்.மூன்று நாள் ஆசிரமத்தில் தங்கியிருந்து விட்டு சென்றார்.பகவானிடம் ஒரு வார்தை கூட பேசவில்லை.ஊர் திரும்பிய குருதேவன் ,” ஜீவன் முக்தி,,நிர்விருதி சமாதி என்றெல்லாம் கூறுகிறார்களே,அதற்கெல்லாம் நடமாடும் உதாரணம் பகவான் ரமணர்” என்று கூறினார்.
அவரது ஜனனீ நவரத்ன மஞ்சரியில் அவருக்கு ‘விஸ்வ ஜனனி’யில் இருந்த அபாரமான பக்தியும் அறிவும் வெளிப்படுகிறது. முதல் சுலோகமே எவ்வளவு அர்த்தவத்தாக இருக்கிறது பார்ப்போமா?
          ஒன்னாய மாமதியில் நின்னாயிரம் த்ரிபுடி
               வன்னாசு தன்மதி மற-
          ந்னன்னாதியில் ப்ரியமுயர்ன்னாடலாம் கடலி—
                   லொன்னாயி வீணுவலயும்
          என்னாசயம் கதி பெறும் நாதபூமியில----
                   மர்ன்னஆவிராப படரும்
          சின்னாபியில் த்ரிபுடியென்னாணறும்படி
                   கலர்ன்னாறிடுன்னு ஜனனீ !
ஏகமும் அத்வையமுமாயிருக்கின்ற அந்த மாமதியிலிருந்து ஆயிரமாயிரம் த்ரிபுடிக்கள் உளவாகின்றன..அவித்யையால் நமது சுத்த சைதன்யமாயிருக்கின்ற ஆன்மா மனஸாக,புத்தியாக,சிந்தையாக விரிவடைவதற்கு முன்னால் மாமதியாகிருக்கின்றது. எந்தவிதமான கள்ங்கமுமில்லாத ஆதி அந்தமிலாத மதியாயிருக்கும்.அந்த சுத சைதன்யமான ஆன்மாவில் த்ரிபுடி யாக ஆயிரம் சிந்தனைகள் உயிர்த்தெழுகின்றன.
த்ரிபுடி என்றால் என்ன? ஒன்றாயிருக்கின்ற எல்லாவற்றையும் முப்பரிமாணத்தில் காணுகின்ற ஒரு வள்ர்ச்சி- காணுபவன்,காண்கின்ற பொருள்,காணுதல், சாப்பிடும் கிரியை, சாப்பிடுகிறவன், சாப்பாடு, கேட்கின்றவன்,கேட்கப்படுகின்ற ஓசை, கேட்டல் என்ற கிரியை இப்படி எதைஎடுத்தாலும் முப்பரிமாணம் காணுகின்ற ஒரு பார்வை கோணம் உண்டான உடனையே,நம்முடை உண்மையான சொரூப அறிவு மறைந்து மறந்து   போகிறது. அந்த மறதி ஏற்பட்டவுடன் அன்னாதி விஷய வாஸனைகள் வளருகிறது. விஷய வாசனை உண்டானவுடன்,அவை நிறைவேறாத பொது கோபமும்,விரோதமும் உண்டாகி புத்தி பிரம்சம் ஏற்படுகிறது..பிரியமும் அப்பிரியமும் உண்டாகின்றது
இந்த விஷய வாசனையானது துன்பத்தில் சென்று முடிகிறது  நாம் துன்பக்கடலில் அல்லாட நேரிடுகிறது. “ஆகவே, அம்மா ஜகன்மாதா, என் ஆன்மா துயரக்கடலில் அகப்பட்டு மோசனத்திற்கு வழி தெரியாமல் தவிக்கின்றது.விசுவ மாதாவான நீ என்று இந்த முப்பரிமாண சிந்தனைகளை நாசம் செய்து, சுத்தமான நாதமண்டலத்தில் முக்திக்கு ஆதாரமாகவுள்ள ஆத்ம சைதன்யத்தில் என்னை லயிப்பித்து எனக்கு நிரந்தர சாந்தி அளிக்கப்போகிறாய்?” என்று குருதேவன் அந்த ஜகன் மாதாவிடம் பிரார்த்திப்பதாக ஆரம்பிக்கிறது நவரத்தின மாலை...
பக்தி ததும்பி நிற்கின்ற இந்த் ஸ்தோத்திரம் பக்தியுடன் தார்சனிக பாவத்தையும் ஆன்மீகத்தையும் சேர்த்து விள்ம்புகின்றது.
இந்த துதி முடியும்பொழுது கேட்கின்ற ,”ஆவிராப படரும் சின்னாபியில் த்ரிபுடி என்று முற்றிலும் அழிந்து எனக்கு முக்தி கிடைக்கும் தாயே” என்று கேட்கிறார் குரு தேவன். ‘ஆவிராப படரும்” என்ற சொற்றொடர் ஆன்மசைதன்யம் தளும்பி நிற்கின்ற பொருளை தருகிறது.’சின்னாபி’ என்றால் நம்முடைய சூக்ஷ்ம போத தலத்தில் என்று நிரந்தர சாந்தி உள்வாகும்? என்ற கேள்வியுடன் முடிகிறது இந்த முதல் சுலோகம்.
‘என்று நான் உன் ஞானஒளியில் கரைந்து  என்னுடைய சபலங்களெல்லாம் உன்னுடைய சக்தியில் லயித்து இல்லாதாகி,என்னுடைய துன்பங்களெல்லாம் உன்னுடைய ஆனந்த சாகரத்தில் லயித்து இருக்கும் இடம் தெரியாமல் போக,என்னுடை பேத சிந்தனைகளெல்லாம் அஸ்தமித்து உன்னுடைய ஆசிகளாகி மாறி என்னுடைய வாழ்வை-நான் பிறந்ததின் அர்த்தத்தை தன்யமாக்குகின்ற அந்த புனித நன்னாள் என்று வருமம்மா?” என்று கேட்கிறார் ஸ்ரீ நாராயண குரு தேவன்.
இதே பாவம் தான் காளிந்தீ நதிக்கரையில் ப்ரேமையில் கரைந்து காதல் கீதங்கள் பாடின கோபஸ்த்ரீகளிலும் காண்கிறோம். ஒரு வித்தியாசம்- இங்கு மாத்ரு வாத்சல்யம் முனைந்து நிற்கிர்கிறது ,கோபிகைகளின் ப்ரணய கீதையில் காதல் ரசம் ததும்பி நிற்கிறது.
மதுரை கலம்பகம்’  எனும் பழம் பெரும் காப்பியமும் ஜகன்மாதாவை போற்றி பாடல்கள் கொன்டுள்ளது. இந்த காப்பியம் குமர குருபரனார் எனும் மகான் இயற்றியது.
அந்த காவியத்தில் வரும் கீழ்க்காணும் வரிகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை:
          போகமோய் விளைந்தோய் நீ
          புவனமாய்ப் பொலிந்தொஈ நீ
          ஏகமா யிருந்தோய் நீ
          யெண்ணிறந்து நின்றோய் நீ
வானு நீ
னிலனு நீ
மதியு நீ
கதிரு நீ
ஊனு நீ
யுயிரு நீ
யுளது நீ
யிலது நீ
இப்படியெல்லாமே அந்த ஜகன்மாதா தான் எங்கிறார் குமர குருபரனார்.
அபிராமிபட்டர் தனது அபிராமி அந்தாதியில் கீழ்க்கண்டவாறு இறைஞ்சி அம்மையை வேண்டுவதும் நாம் நினைவு கூரலாம்:
          சிறக்கும் கமலத் திருவே,நின் சேவடி சென்னிவைக்க
          துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும்,துரியம் அற்ற
          உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
          மறக்கும்பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே
“ அம்மா தாயே,உலக மாதா,அழகான தாமரை மலரில் வீற்றிருக்கும் திருவே, எப்பொழுது இந்த உடல் என்னுடையது அல்ல, உயிரும் எனது அல்ல,நான் அந்த பிரம்மத்தின் அம்சமே என்ற அறிவு வராமலும் உள்ள இரண்டும் கெட்டான் நிலையில் நான் இருக்கும் வேளையில் நீ உன் சேவடி என் சென்னியில் பதித்து நீயும் உன் துணைவரும் வந்து ஜாக்ரத்,சொப்ன சுஷுப்தி என்ற மூன்று நிலைகளையும் கடந்த துரீய நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும் ,தாயே” என்று வேண்டுகிறார்.
மேலும் பூரண சரணாகதி தத்துவத்தை விளக்கும் வழியாக பாடுகிறார் அபிராமிபட்டர்:
           நன்றே வருகினும், தீதே விளைகினும்,நான் அறிவது
          ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்,எனக்கு உள்ளம் எல்லாம்
          அன்றே உனது என்று அளித்துவிட்டேன்: அழியாத குணக்
          குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே
“எனக்கு என்று ஒன்றுமில்லை;எல்லாம் உனதே;நல்லது வந்தாலும்,தீயது வந்தாலும், நான் விருப்பு-வெறுப்பு எதற்கும் இடம் கொடேன் என்னை உனக்கே பரம் ஆக்கினேன்”.

பகவான் ரமணர்  இதே கருத்தைத்தான் இந்த சுலோகத்தில் கூறியுள்ளார். குறையோ நிறையோ எல்லாம் பரமனுக்கே சொந்தம்;ஆகவே அவன் தனது கருணா கடாட்சத்தை நம் மீது படரும்படி செய்து அருள வேண்டும் எங்கிறார் பகவான்

No comments:

Post a Comment