Thursday 26 February 2015

ரமணஜோதி 78

 ரமணஜோதி 78

எரிகின்ற விறகும் ஆத்ம சாக்ஷாத்காரமும்


     நொந்திடா துன்றனைத் தந்தெனைக் கொண்டிலை
     யந்தக னீயெனக் கருணாசலா
“ நான் உனைத் தேடி வந்தடைந்தபோது ,நீ என்னை நோவாமல் எந்த வலியும் தெரியாமல் ஆட்கொண்டாய். ஆதோடு நான் இல்லாமல் ஆகிவிட்டேன். அப்படி என்னை அழித்ததால் நீ எனக்கு காலனாகி விட்டாய், அருணாசலா” என்கிறார் இந்த சுலோகத்தில் பகவான் ரமணர்
அது மட்டுமல்லாமல், எந்த ஒரு பிரதி பலனையுமெதிர்பாராமல் உன்னை எனக்குத் தந்து என்னை எடுத்துக் கொண்டாய். அந்த விதத்தில் பார்த்தால் நீ அந்தனோ (கண் தெரியாதவனோ ) என்று எண்ணத் தோனறுகிறது.
சாதாரண மனிதர்களாகிய   நமக்கு மரணம் சுகமான அனுபவமல்ல. அது வேதனை தரக் கூடியது. ஆனால் இங்கோ பகவான் கூறுகிறார், ‘நொந்திடாது’ என்னை நீ ஆட்கொண்டாய் அருணாசலா என்று. நான் உ
ன்னுடன்   கலந்து  நான் இல்லாதாகிவிட்டேன்.
இதையேதான் பகவான் முன்னால் சொன்ன ஒரு சுலோகத்தில் கூறினார், 
“எனையழித் திப்போ தெனைக்கல வாவிடி
                லிதுவோ வாண்மை யருணாசலா”
நம்முடைய ‘அஹம்’ அழிந்தால்த்தான்  நாம் பரமனை அடைய முடியும் என்று பகவான் கூறுகிறார். அழிவு அல்லது நாசம் என்றால் எதையோ இழக்கிறோம் என்று பொருள். அப்பொழுது நமக்கு வருத்தம் ஏற்படுவது இயற்கை. ஆனால் “நான்” அழியும் பொழுது நமக்கு ஏற்படுவதோ பரமானந்தம்.
ஆன்மாவில் அகந்தை லயிக்கும்பொழுது ஜீவன் தனது தனித் தன்மையை இழந்து விடுகிறது. அதன் சொரூப சுபாவத்தை பெற்று விடுகிறது.;அதாவது மூல சொரூபமே ஆகிவிடுகிறது.
இதையே தாண்டவராயன்பிள்ளை ‘கைவல்ய நவநீதம்’ நூலில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

எவருடை யருளால் யானே யெங்குமாம் பிரம மென்பால்

கவருடைப் புவனமெல்லாங் கற்பித மென்ற றிந்து

சுவரிடை வெளிபோல் யானென் சொரூபசு பாவ மானே

னவருடைப் பதும பாத மநுதினம் பணிகின்றேனே

எப்பொழுது நாம் தான் எங்கும் நிறைந்துள்ள பிரமம் அல்லது பிரம்மம் தான் எங்கும் எல்லோரிலும் நிறைந்துள்ளது; நம்மிலிருந்து அன்னியமாக காணுகின்ற இந்த உலக வஸ்துக்களெல்லாம் நம் மனதின் கற்பனையே என்று தெரிந்து- தெளிந்து கொண்டுவிட்டால் நம் வீட்டு ஜன்னல் வழியாக காணும் ஆகாயம் தான் வெளியிலும் நிறைந்துள்ளது என்று தெரிந்து கொண்டு விட்டால், நாம் நம்முடைய சொரூப சுபாவமாகிவிடுவோம்
இதே கருத்தை நாம் பகவத்கீதையிலும் காணலாம்:
     உதாரா: ஸ்ர்வ ஏவைதே ஞானீ த்வாத்மைவ மே மதம் 1
     ஆஸ்தித: ச ஹி யுக்தாத்மா மாமேவானுத்தமாம் கதிம் !!
                     ப.கீ அத் 7 சுலோ 18
இவர்கள் ( துன்புற்று இருக்கும் பொழுது தெய்வத்தின் துணையை நாடுபவன், ஞானவேட்கையுடையவன், பொருளின்பம் தேடுபவன், ஞானி  ) எல்லோருமே நல்லவர்கள்.இருந்தாலும் ஞானி என் ஆத்ம சொரூபமே ஆயிருக்கிறான். ஏனென்றால் யோகத்தில் நிலைத்திருப்பவனாகிய அவன் மிக உத்தமமான கதியாகிய பகவானை சரணடைந்திருக்கிறான்.
ஞானியாகப்பட்டவன் தானும் பரமனும் ஒன்று தான்,அவனிலிருந்து வேறொன்றில்லை; அல்லது தன்னிலிருந்து வேறொன்றில்லை என்று தெளிவு பெற்றவன் எங்கிறது பகவத் கீதை
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவார்:
“பகவான் ஒன்று என்னும் இலக்கம் அதனோடு சேரும் பூஜ்ஜியங்களுக்கும் மதிப்புண்டாகிறது. பூஜ்ஜியங்கள் தனித்து நின்றால் மதிப்பு கிடையாது.”
 அந்த ஒன்றில் ஐக்கியமானவன் ஜீவாத்மா. அப்ப்டிப்பட்ட ஐக்கியத்திற்குப் பின் தனி த்தன்மையை இழந்து விடுகிறது. ஆனால் மதிப்புள்ளதாகி விடுகிறது.
விறகு அக்னிக்கு வெளியே இருக்கும்பொழுது ஜடமாக உள்ளது. அது அக்னியில் வீழும்பொழுது எரிய ஆரம்பிக்கிறது. ஏரிந்து பிரகாசம் பரப்ப ஆரம்பிக்கிறது. உலகிற்கு  சூடும் வெளிச்சமும் தருகிறது. உணவை பக்குவப்படுத்த உதவுகிறது. அந்த இயக்கத்தின் காரணமாக விறகு எரிந்து சாம்பலாகிறது; அழிந்து போகிறது,,அந்த அழிவு ஒரு பயனுள்ள அழிவு. மகிழ்ச்சியளிக்ககூடிய அழிவு.ஆது போல் தான் ‘அஹத்தின்’ அழிவும். 
இந்தக் கருத்து சற்றே மாறுபட்டு நம்மாழ்வாரின் பாசுரங்களிலும் பிரதி பலிக்கின்றது.
     யானே என்னை அறியகிலாதே
   யானே என் தனதே என்றிருந்தேன்
   யானே நீ என்னுடைமையும் நீயே
   வானே ஏத்தும் எம் வானவர் ஏறே !
                     திருவாய்மொழி 2-9-9
“என்னையே நான் அறியாது இருந்தேன். ( இந்த பூதவுடலையே ) ‘நான்”  என்றும் ( இகலோக உடைமைகளை—சொந்த பந்தங்களை )எனது என்றும் மயங்கி இருந்தேன்; ( உண்மையை ஆராயுமிடத்து ) நான் என்பது நீயே; என்னுடையது என்பது உன்னுடையது தான்; என்னுடைய உடமை யாவும் நீயே;அகண்ட ஞானம் பெற்றவர் ஏத்தும் பரம் பொருள் நீயே “. எங்கிறார் நம்மாழ்வார்.
மேற்கண்ட செய்யுளை பகவான் ரமணரும் மேற்கோள் காட்டியுள்ளார் (பகவத் வசனாமிருதம் பக்கம் 205-207 )
தமிழ் இலக்கணத்தில் தன்னிலை,முன்னிலை, படர்க்கை என்று நிலைகள் விவரிக்கப் பட்டுள்ளன. அதன்படி தன்னிலையாகிய தான் இல்லாமல் முன்னிலையும் படர்க்கையும் நிகழாது என்று கூறப்படுகிறது. ஆனால் நம்மாழ்வார் தான் இல்லாமலே எம்பெருமான் நாரயணன் முன்னிலையாக இருக்கிறான் என்றும் இந்த நிலை தன்னை மறந்தவற்கே முடியும் என்கிறார். அப்படி சொல்லுவதன் மூலம் தானே அந்த நாராயணனின் அம்சம் எனபதை சுட்டிக் காட்டுகிறார்.
இதையே அப்பர் பெருமானும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
     தன்னை மறந்தாள், தன் நாமம் கேட்டாள்
     தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
இவ்வாறு முனிலையே தன்னிலையாகிவிடுகிறது அவனே அவன் என்றாகிவிடுகிறது. தன்னிலையும் முன்னிலையும் சேரும்பொழுது அது படர்க்கையாகிவிடுகிறது..
இதே கருத்தை ஸ்ரீ நாராயண குருதேவனும் தனது ‘’ஜனனி நவரத்தின மஞ்சரி’ என்ற நூலிலும் கூறுகிறார்:
     மீனாயதும் பவதி மானாயதும் ஜனனி
                  நீ நாகவும்   நகககம்
   தானாயதும் தர நதீ நாரியும் நரனு-
                மா நாகவும் நரகவும்
   நீ நாமரூபமதில் நானா விதப்ரக்ருதி-
                 மானாயி நின்னறியுமீ
  ஞானாயதும் பவதி ஹே நாத ரூபிணிய-
             ஹோ ! நாடகம் நிகிலவும்
நீ”ரில் வாழும் மீனும் வனங்களில் வசிக்கும் மானும் ஊர்ந்து வாழும்  நாகமும் விஸ்வ மாதாவான நீயே; மலையாயிருகின்றதும் நீ , அதன் மேல் பற்ந்து செல்லுகின்ற பறவையும் நீ, பூமியாயிருக்கின்றதும் நீ,நதியாயிருக்கின்றதும் நீ; நாரியும் ( பெண்டிரும்) நீ, ஆணும் நீ;  சுவர்க்கமும் நீ, நரகமும் நீ; பேரும் பெருமையும் நீ; பல பெயர்களினாலறியப்படுகின்ற ஜீவாத்மாவாகின்ற நானும் நீயே;
என்னே ஆச்சரியம் ! எல்லாம் நாடகமே” எங்கிறார் குருதேவர்.
பகவான் ரமணர் அருணாசலர் என்று கூறுவதை ஸ்ரீ நாராயண குரு தேவன் விசுவ ஜனனி என்று கூறுகிறார்.
பரமனின் சர்வ வியாபகத் தன்மையை குருதேவன் விளக்கியுள்ளார்.
இதே கருத்தை பகவத் கீதையிலும் காணலாம்:
     வேதாஹம் சமதீதானி வர்தமானானி சா அர்ஜுனா !
   பவிஷ்யாணி ச பூதானி மாம் து வேத ந : கஸ்சன !!
                               ப.கீ அத் 7 சுலோ 26
‘அர்ஜுனா, நமக்கு முன்னால் இருந்த, இப்பொழுது இருக்கின்ற, வரப்போகின்ற உயிர்களயெல்லாம் நான் அறிவேன்; ஆனால் என்னை யாரும் அறியார்.”
ஸமம் ஸர்வேஷு பூதேஷூ திஷ்டந்தம் பரமேசுவரம் !
     வினஸ்யத்ஸ்வனஸ்யந்தம் ய:பஸ்யதி ஸ்ச பஸ்யதி !!
                                 ப.கீ அத் 13 சுலோ 27  
     உயிர்களனைத்திலும் சமமாயிருக்கின்றவனும் அழிவனவற்றுள் அழியாதவனுமாகிய பரமேசுவரனைப் பார்ப்பவனே பார்க்கிறான்
நானும் நியே, நீயும்,  நானே; நீயே எல்லாவற்றிலும் இருக்கிறாய் ,எல்லாமே அவன்.எல்லாமே பிரம்மம்.
சினிமாத்திரையில் படங்கள் மாறி மாறி வருகிறது;ஆனால் திரை ஒன்றே.அது மாறுவதும் இல்லை, அழிவதும் இல்லை.
ஸ்ரீ ராமகிருஷ்ன பரம ஹம்சர் கூறுவார்:

சூரியன் எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்;சில நேரங்களில் மேகங்கள் அவனை மறைத்து விடலாம், ஆனால் அறியாமை எனும் மேகத்தை அகற்றிவிட்டு அவனை நாம் காண வேண்டும், அப்படி காணும்பொழுது நாம் அழிந்து விடுகிறோம்.அங்கு சர்வ வியாபியான அவன் மட்டுமே இருப்பான்.

No comments:

Post a Comment