Monday 23 February 2015

ரமணஜோதி 77

ரமணஜோதி 77

பக்குவ நிலை

நைந்தழி கனியா நலனிலை பதத்தி
னாடியுட் கொள்நல மருணாசலா
“பழம் அதிகமாகப் பழுத்து அழுகிப் போகும் நிலை வருமேயானால் அந்தப் பழம் தின்பதற்கு உகந்ததல்ல. சரியான நிலையில் பழுத்திருக்கும் பொழுதே அதை நாடி உட்கொண்டு விடருணாசலா”
இந்த வாச்சியார்த்தம் எல்லாருக்கும் புரியும்;தெரியும். அதன் தத்துவார்த்தம் சிருங்கார பக்தி பாஷையில் கூறினால், “ நான் உன் காதல் , வயப்பட்டு இன்று எல்லாவிதத்திலும்,மன ரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் உன்னால் ஆட்கொள்ளத் தயார் நிலயில் உள்ளேன் .இப்பொழுதே நீ என்னை ஆட்கொண்டு விடு;இல்லையேல் காலம் கடந்து விட்டால் நான் எதற்கும் லாயக்கற்றவளாகிவிடுவேன்”
யார் பழுத்த பழம்? பக்குவப்பட்ட மனதையுடையவர் பழுத்த பழம்.
இந்த உலகைல் எதுவும் நிரந்தரமில்லை; பிறந்தவையெல்லாம் இறக்க வேண்டும். ஆதியும் அந்தமும் இல்லாதது ஒன்றே ஒன்று தான்;அது தான் சத் சிதானந்தமான பிரம்மம்.இந்த பிரம்மக்னானம் அடைந்தவர் ஞானி. அப்படிப்பட்ட ஞானியை அரவணைத்து தன்னுடன் இருத்திக்கொள்வது அந்த பரமனின் பொறுப்பு. அப்படி செய்ய தவறிவிட்டால் ஞானத்தை தாற்காலிகமாக அடைந்தவன் வழுக்கி விழ ஏதுவாகும். பிரம்மத்தை அடைவதற்கான மார்க்கம் ஒரு வழுக்கு மரம் மாதிரி.ஒரு அடி மேலே போனால் இரண்டு அடி கீழே  வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
பக்குவப்பட்ட மனத்தைக் குறித்து பட்டினத்தார் பாடியுள்ளதை பார்ப்போமா?
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ்சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளகளும்    சீருஞ்,சதமல்ல,செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ்ச்  சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே
இந்த உண்மையை யாரொருவன் அறிந்துகொள்கிறானோ அவனே பக்குவப்பட்டவன்.
அப்படி ஆறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல.அவர்களுக்கு கீதாச்சாரியன் அளிக்கும் உபதேசம் என்ன:?
பகவத் கீதை பண்ணீரண்டாம் அத்தியாயம் இரண்டாவது சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுவார்:
   மய்யாவேஸ்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாசதே !
   ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: !
யார் ஒருவன் என்னிடத்தில் மனதை வைத்து,சிரத்தையுடன் என்னை உபாசிக்கிறானோ அவனே சிறந்த யோகிஎன்கிறார் கிருஷ்ணர்
அப்படிப்பட்டவர்களுக்கு விருப்பு வெறுப்பு மனக்கிலேசம் எதுவும் கிடையாது.
அடுத்த சுலோகத்தில் இன்னும் கடுமையான விதிமுறைகளை பகவான் சொல்லுகிறார். யார் ஒருவன் சம புத்தியுடையவனாக இருக்கிறானோ, இந்திரிய கூட்டத்தை அடக்க வல்லவனாய் இருக்கிறானோ, வார்த்தைகளால் வருணிக்கமுடியாததும்,சாதாரண கண்களுக்கு புலனாகாததும் மனதுக் கெட்டாததும் ,நகராததும், நிலையானதும்,அழிவில்லாததுமான பிரம்மத்தை நன்கு உபாசிக்கிறானோ அவனே என்னுடைய கருணைக்கு பாத்திரமாகிறான்.இது மட்டுமா? : அவன் எல்லா உயிர்களையும் நேசிப்பவனாகவும் அவைகளின் நன்மைக்கு பாடுபடுவனாகவும் இருக்க வேண்டும்.
யே த்வக்ஷரமனிர்தேஸ்யமவ்யக்தம் பர்யுபாசதே !
ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம் !!
ஸன்னியம்யேந்திரியக்ராமம் சர்வத்ர ஸமபுத்தய: !
தே ப்ராப்னுவந்தி மாமேவ சர்வபூதஹிதே ரதா: !!
                       ப.கீ 12 அத்த் 3-4 சுலோ
பகவான் ரமணர்  சிறுவயதிலேயே  அருணாசலன் அருள் பெற்று மேற்கூறிய இலக்கணங்களுக்கு முன் மாதிரியாக இருந்தார். அவரை ஏற்றுக்கொள்வதற்கு பரமனுக்கு தயக்கம் ஏதும் இராது. ஆனால் நம் நிலைமை அப்படியா? பரமன் ஏற்றுக்கொள்ளும்படியான பக்குவம் அடைய  நிறைய முயற்சி வேண்டியிருக்கிறது. அதற்குப் பின் தான் பரமன் நம்மை ஆட்கொள்ளுவான்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது பரமனின் அருள் பெற தகுதியுடையவர்களாக நாம் பக்குவப் பட வேண்டுமென்றால் நாம் ‘சம புத்தி’யுடையவர்களாயிருக்கவேண்டும். சமபுத்தி என்றால் என்ன? இன்பம தருபவைகளையும் துன்பம் தருபவைகளையும் ஒரே மனோபாவத்துடன் ஏற்றுக்  கொள்ளுகின்ற பக்குவம் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட பக்குவம் வர வேண்டுமென்றால்  நாம் இந்திரியக் கூட்டங்களை கட்டுபடுத்த முடிந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த சம நிலை என்பது நல்லது கெட்டது எதைக் கண்டாலும் சும்மா இருப்பதல்ல. எல்லா உயிர்களிலும் பரமாத்மாவே ஒளிர்விடுகிறான் என்பதை உணர்ந்து அவைகளை பிரம்ம சொரூபமாக பார்க்க வேண்டும்; அவைகளின் நன்மையில் நாட்டம் கொண்டு சேவை செய்ய வேண்டும்.
அதே அத்தியாயத்தில் ஆறாம் மற்றும் ஏழாம் சுலோகங்களில் பரமாத்மா இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார்.
   யே து ஸர்வாணி கர்மாணிமயி ஸ்ம்ன்யஸ்ய மத்பரா: !
   அனன்யேனைவ யோகேன மாம் த்யாயந்த உபாசதே !!
   தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத் !
பவாமி நசிராத் பார்த்த மய்யாவேசிதசேதஸாம் !!
யாரொருவன் தனது கர்மங்களனைத்தையும் என்னில் அர்ப்பித்து யாதொரு பலனையும் எதிர்பாராமல் என்னையே பரகதியாகக் கொண்டு என்னையே த்யானித்து வணங்குகிறானோ நான் அவனை இந்த ஜனன மரண சம்சார சாகரத்திலிருந்து கரையேற்றுவேன்.
இதற்காக ஜீவாத்மா செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே தான்; அந்த பரமனில் மனதை வைத்து அவனிடத்திலேயே புத்தியை செலுத்த வேண்டும். அப்படி செய்தால் நாம் அவனில் லயித்துவிட வேண்டும் அதற்கு விடாத அப்பியாசம் வேண்டும்.
   மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய !
   நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்சய:!!
   அத சித்தம் ஸமாதாதும் ந சக்னோஷி மயி ஸ்திரம் !
   அப்யாஸயோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்ஜய !!
நமது இந்திரியங்கள் நாயின் குணத்தையுடையது. நாம் ஒரு நாயை வளர்த்து அதன் மீது மிகவும் பிரியம் செலுத்தி வந்தால் அப்புறம் அந்த நாயை நம்மை விட்டு விலக்குவது அவ்வளவு சுலபமல்ல. எங்கு கொண்டு விட்டாலும் அது திரும்ப திரும்ப நம்மிடமே வரும்.அது போல்தான் இந்திரியங்களின் தாக்கத்தை எவ்வளவுதான் தவிர்த்தாலும் அது நம்மை மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கத்தான் செய்யும்.
இதிலிருந்தெல்லாம் அப்பியாசம் மூலம் - நிரந்தர அப்பியாசம் மூலம் தப்பித்து மனதை பரமனிடம் செலுத்த வேண்டுமென்றால் அதற்கு நமது முயற்சியைத்தவிர ஈசனின் அருளும் வேண்டும்.அதைத் தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் வேண்டுகிறார். சிறிதே உரிமை எடுத்துக் கொண்டு
 நான் செய்ய வேண்டியதெல்லாம் செய்து விட்டேன்; நான் பக்குவப் பட்டுவிட்டேன்; நீ என்னை இப்பொழுது ஆட்கொள்ளவில்லை என்றால் எப்பொழுது ஆட்கொள்ளப் போகிறாய் என்று கேட்கிறார்? .


No comments:

Post a Comment